For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்வதேச நினைவுச் சின்ன தினம்!

By Staff
Google Oneindia Tamil News

-புன்னியாமீன்

நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினம் (International Day for Monuments and Sites) ஆண்டு தோறும் ஏப்ரல் 18ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1982ம் ஆண்டில் டுயுனீசியாவில் நடைபெற்ற நினைவுச் சின்னங்களுக்கும் அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக மாநாட்டின் தீர்மானப்படி 1983ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற யுனெஸ்கோ பொதுச் சபையின் 22வது கூட்டத் தொடரில், ஏப்ரல் 18ம் தேதியை நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவமிக்க உலகப் பண்பாட்டு மரபின் பல்வகைமைத் தன்மை தொடர்பில் மக்கள் மத்தியில் அறிவினை ஏற்படுத்துவதும் அவற்றைக் கண்ணியப்படுத்தி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் நோக்கமாகும். உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளிலும் வரலாற்று முக்கியத்துவமிக்க மரபுரிமைச் சின்னங்கள் காணப்படுகின்றன. இந்த மரபுரிமைச் சின்னங்கள் நாட்டின் வரலாற்றுச் சான்றுகளை பதிவுகளாக்குகின்றன.

எனவே இந்த மரபுரிமைச் சின்னங்கள் பற்றியும் அவற்றின் இருப்புகள் வரலாற்று பின்னணிகள் பற்றிய அறிவும் விளக்கங்களும் மக்களுக்கு தேவைப்படுகிறது. இத்தினத்தில் மக்களுக்கு இது பற்றிய தெளிவை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இச்செயற்திட்டத்தை நினைவுச் சின்னங்களுக்கும் அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக சபை (International Council on Monuments and Sites) மிகச்சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக சபை (International Council on Monuments and Sites) என்பது உலக அளவில் உயர்தொழில் அறிஞர்களை அதாவது கட்டிடக்கலைஞர்கள், வரலாற்றாளர்கள், தொல்லியலாளர்கள், கலை வரலாற்றாளர்கள், புவியியலாளர்கள், மானிடவியலாளர்கள், பொறியியலாளர்கள், நகரத் திட்டமிடலாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய ஒர் அமைப்பு ஆகும்.
ஆங்கிலத்தில் ICOMOS என்னும் சுருக்கப் பெயரால் இந்தச் சபை அழைக்கப்படுகிறது. பண்பாட்டு மரபு சார்ந்த இடங்களை கட்டிடக்கலை மற்றும் தொல்லியல் சார்ந்த மரபுச் சின்னங்களை பராமரிப்புச் செய்வதில், ஈடுபட்டுள்ள, சர்வதேச மட்டத்திலான ஒரே அரசுசாரா நிறுவனமும் இதுவேயாகும்.

1964ம் ஆண்டில் வெனிஸ் நகரில் கூடிய மாநாட்டினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நினைவுச் சின்னங்களையும், அமைவுத் தளங்களையும் பரிபாலனம் செய்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பிலான பட்டயத்தின் அடிப்படையிலேயே இதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பட்டயம் வெனிஸ் பட்டயம் எனப் பரவலாக அறியப்படுகிறது.

உலக மரபுத் தளங்கள் தொடர்பில் இவ்வமைப்பு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்துக்கு (யுனெஸ்கோ) ஆலோசனைகளை வழங்கி வருகிறது. உலகளாவிய ரீதியில் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களை இனங்கண்டு அவற்றை பாதுகாப்பதில் இந்த அமைப்பு மிகத்திறம்பட செயற்பட்டு வருகிறது.

இதன் ஒரு அங்கமாக உலகின் பண்பாட்டு மரபுகளின் பல்வகைமை தொடர்பிலும், அவற்றைப் பாதுகாப்பதிலும், பரிபாலனம் செய்வதிலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 18ம் தேதியை நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக நாள் என அறிவித்துக் கொண்டாடி வருகிறது

இன்று கட்டிடக்கலை, தொல்பொருட்கள் (artifacts), தொல்லுயிர் எச்சம், மற்றும் நிலத் தோற்றங்கள் என்பன உள்ளிட்ட எஞ்சிய பொருட்களைக் வெளிக்கொணர்ந்து, ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்வதன் மூலம் செய்யப்படும் மனிதப் பண்பாடு பற்றிய அறிவினை தொல்பொருளியல் (Archaeology) ஊடாக பெற முடிகிறது.

தொல் பொருளியலின் இலக்குகள் வேறுபடுவதுடன், இதன் நோக்கங்கள், பொறுப்புக்கள் தொடர்பான வாதங்களும் இருந்துவருகின்றன. சில இலக்குகள், வரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றுக் கால மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்தல், அவற்றை விளக்குதல்; பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல்; பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியைக் கால வரிசைப்படுத்தல்; மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன.

தொல்லியலாளர்கள், தங்கள் துறையில் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன், கடந்தகாலம் பற்றிய அவர்களது கேள்விகளில் தொக்கி நிற்கும் கோட்பாட்டு மற்றும் தத்துவம் சார்ந்த அடிப்படைகள் தொடர்பான ஆய்வுகளிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு. புதிய தொல்லியற் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல், வகைப்படுத்தல், பகுப்பாய்தல் பேணிக்காத்தல் என்பனவெல்லாம், தொல்லியல் சார்ந்த வழிமுறைகளின் பல்வேறு முக்கியமான கட்டங்கள் ஆகும். இவை ஒருபுறம் இருக்கத் தொல்லியலில் பெருமளவு பல்துறைசார் ஆய்வுகளும் நடைபெறுகின்றன. இதற்காக இது, வரலாறு, கலை வரலாறு, செந்நெறி இலக்கியம், புவியியல், நிலவியல், இயற்பியல், தகவல் அறிவியல், வேதியியல், புள்ளியியல், தொல்பழங்காலச் சூழலியல், தொல்விலங்கியல், தொல்தாவரவியல் போன்ற துறைகளில் தங்கியுள்ளது.

கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும். ஒரு விரிவான வரைவிலக்கணம், பெருமட்டத்தில், நகரத் திட்டமிடல், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் நிலத்தோற்றம் முதலியவற்றையும், நுண்மட்டத்தில், தளபாடங்கள், உற்பத்திப்பொருள் முதலியவற்றை உள்ளடக்கிய, முழு உருவாக்கச் சூழலின் வடிவமைப்பைக் கட்டிடக்கலைக்குள் அடக்கும். ஆக இத்துறைகள் ஊடாக நினைவுச்சின்னங்களுக்கும், வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களுக்கும் உலகளாவிய ரீதியில் விழிப்புணர்வை வழங்கி அவற்றைப் பேணி பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதே இத்தினத்தின் நோக்கமாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X