For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்வதேச கூட்டுறவு தினம்

By புன்னியாமீன்
Google Oneindia Tamil News

முதல் பக்கம்....

இலங்கை ஆங்கிலேயராட்சியில் இருந்தவேளை கிராமிய விவசாயம் புறக்கணிப்பட்டது. பெருந்தோட்டச் செய்கையில் கவனம் செலுத்தப்பட்டது. அதற்காக கிராமிய விவசாய நிலங்கள் சுவீகரிக்கப்பட்டன.. இயற்கையின் வரட்சி கிராமிய விவசாயிகளைப் பெருமளவு பாதித்து அவர்களை வறுமைக்குட்படுத்தியது. இதனால் அவர்கள் வட்டிக்குப் பணம் வழங்கும் முதலாளிகளிடம் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் விவசாயிகள் கூட்டுறவுப் பண்புகளையுடைய சங்கங்களை அமைத்து செயல்பட்டபோதும் அதற்கு சட்டவரையறை இன்மையால் நிலைத்து நிற்கவில்லை. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை ஆளுநர் நாட்டிலிருந்த விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட விவசாய வங்கித் தொழிற் குழுவின் விதப்புரையின்மீது அங்கீகரிக்கப்பட்ட தீர்வொன்றாக 1911ம் ஆண்டின் 7ஆம் இலக்க கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் நியதிகளின்படி கூட்டுறவுக் கடன் சங்கங்களைத் தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட 1911ம் ஆண்டின் கூட்டுறவுச் சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் நியதிகளின்படி பதிவாளருக்கு கூட்டுறவுச் சங்சங்களைப் பதிவுசெய்வதற்கும் எவையேனும் வைபவங்களுக்குத் தலைமை தாங்குவுதற்கும் தத்துவமளிக்கப்பட்டது. எனினும் ஒரு முழுநேரப் பதிவாளர் அவசியமில்லை என அரசாங்கம் உணர்ந்தமையால் ஆரம்பத்தில் மேற்படி கட்டளைச் சட்டத்தின்கீழ் பதிவாளருக்குப் பொறுப்பிக்கப்பட்ட ஒருசில கடமைகளையும் பணிகளையும் அரசாங்க அதிபருக்குக் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இவற்றுள் கூட்டுறவுச் சங்கங்களைப் பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் கடமையும் அடங்கும்.

1904ம் ஆண்டில் கிராமிய சமுதாயத்தின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு இலங்கை விவசாயச் சங்கம் எனப்படும் சங்கமொன்று இலங்கை ஆளுநரின்கீழ் தாபிக்கப்பட்டது. பிரசாரமும் கூட்டுறவுச் சங்கங்களை மேம்படுத்தும் செயற்பாடுகளும் இச்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டன. 1911ஆம் ஆண்டில் இலங்கை விவசாயச் சங்கங்களுக்குப் பதிலாக விவசாயத் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது. 1911ம் ஆண்டில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் ஒரு குறுகிய தவணை நடைமுறையாகும். பதிவுசெய்யும் வழமையான பணிகளுக்கு மேலதிகமாக இன்னும் பல பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தமையால் விவசாயத்துறை பணிப்பாளரை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராகவும் நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அதே ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்களால் சமர்ப்பிக்கப்பட்ட கடன் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் கட்டுப்பாட்டுச் சபையொன்றையும் தாபித்தது.

ஆரம்பத்தில் நாணய சங்கங்களே பதியப்பட்டன. 1913/14ம் ஆண்டில் 35ஆக இருந்த சங்கங்கள் 1920/21ல் 154ஆக உயர்ந்தது. உறுப்பினர் தொகை முறையே 1820லிருந்து 17876 ஆகவும் அதிகரித்தது.

1921ம் ஆண்டின் 35ம் இலக்க சட்டத்திருத்தத்தின்படி ஏனைய வகைச் சங்கங்களும் பதிவு செய்ய வகை செய்யப்பட்டன. இதனால் நுகர்ச்சிக் கூட்டுறவுச் சங்கங்கள், விவசாய உற்பத்தி விற்பனைச் சங்கங்கள் என்பன பதிவு செய்யப்பட்டன. 1939ல் இரண்டாம் உலக யுத்தத்தினால் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு பங்கீட்டு அடிப்படையில் உணவு விநியோகிக்கும் பொறுப்பு கூட்டுறவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெல் உத்தரவாத விலைத்திட்டம், நெற்களஞ்சியங்கள் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டன. 1942-1945க் கிடையில் 4000க்கும் மேற்பட்ட நுகர்வோர் சங்கங்கள் இருந்தன. 1946லிருந்து கூட்டுறவு விளைபொருள் உற்பத்தி விற்பனை சங்கங்கள் பதியப்பட்டன. 1949ம் ஆண்டின் 21ம் இலக்க சட்டத்திருத்தத்தின் மூலம் நாணய உதவி வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

குடிசைக் கைத்தொழில்களிலும், பாரம்பரிய சீவனோபாய தொழில்களிலும் ஈடுபட்டவருக்கும் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. (உதாரணம்) கூட்டுறவுப் பாற்பண்ணை சங்கங்கள், கடற்றொழிலாளர் சங்கங்கள், தெங்கு உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கங்கள், நெசவுத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள். தும்புத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், தச்சுத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், செங்கல், ஓடு உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்கள், அச்சிடுவோர் கூட்டுறவுச் சங்கங்கள், பாதரட்சை செய்வோர் கூட்டுறவுச் சங்கங்கள், புகையிலை பயிரிடுவோர் கூட்டுறவுச் சங்கங்கள் போன்றன.

1957லிருந்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தாபிக்கப்பட்டன. 1958ம் ஆண்டின் முடிவில் இலங்கையில் இயங்கிய பல வகைக் கூட்டுறவுச் சங்கத்தினது எண்ணிக்கை 12852ஆகும். இவற்றைத் தவிர இரண்டாம்படிச் சங்கங்களாக கூட்டுறவுச் சங்கங்களும் இயங்கின. தற்போது கூட்டுறவுச் சங்கங்கள் பல்வேறு சேவை தொழிற்துறையினரிடையேயும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. சிக்கன கடனுதவிச் சங்கங்களும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் வளர்ச்சிக்கு கூட்டுறவுத் துறை ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்தது. இந்திய விடுதலைக்கு முன்பே, 1904ம் ஆண்டு தற்பொழுதுள்ள திருவள்ளுவர் மாவட்டத்தில் திரூர் என்ற கிராமத்தில் கூட்டுறவு சங்கம் இந்தியாவிலேயே முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. சர். டி. ராசகோபாலாச்சாரியார் என்ற அதிகாரி இச்சங்கத்தின் முதல் பதிவாளராக பொறுப்பேற்றார்.
இந்தியாவில் ஒரு விவசாய புரட்சியை உண்டாக்க வேண்டும் என்பதற்காக காந்திஜி சொன்ன விடயம் கூட்டுறவுப் பண்ணை முறையாகும். ஒரு நிலத்தை நூறு துண்டுகளாக போட்டு விவசாயம் செய்து நிறைய கொள் முதலை எதிர்ப்பார்ப்பதை விட ஒரு கிராமத்திலிருக்கும் நூறு குடும்பங்கள் கூட்டாக விவசாயத்தில் ஈடுபடுட்டால் தனித்தனியாக கிடைக்கும் பலன்களை விட நிறையவே அதிகமாக இருக்கும் என்பது.

நிலம் அனைத்தையும் ஒன்றாக உழுது விவசாயம் பார்ப்பதால் உழைப்பு, மூலதனம், கருவிகள் போன்றவை மிச்சமாகும். காந்திஜி இதையே விவசாய வேலைகள் என்றில்லாமல் ஆடு, மாடு வளர்ப்பு, காய்கறிகள் பயிரிடுவது என அனைத்து தொழில்களுக்குமே விரிவுபடுத்த நினைத்தார். காந்திஜி தனது சபர்மதி ஆசிரமத்தில் இதையே செயல்பாட்டுக்கு கொண்டுவந்தார். நாடு சுதந்திரமடைந்தவுடன் காந்திஜியின் சிந்தனை பல்வேறு வடிவங்களில் பல்வேறு பெயர்களில் திட்டங்களாக தீட்டப்பட்டன.

தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பை உருவாக்க காரணமாக இருந்தவர் கூட்டுறவு தந்தை என்று அழைக்கப்படும் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் ஆவார். ஏழைகள் தன்னந்தனியாக தங்களின் நலனுக்காக காரியத்தை செய்ய இயலாது. அவர்களோ கூட்டு முயற்சியை செய்தால்தான் வெற்றி பெற முடியும். எனவே, கூட்டுறவு என்ற உறவு முறை வேண்டும் என வலியுறுத்தினார்.

இன்றைக்கு கூட்டுறவு அமைப்பு சகல துறைகளிலும் இயங்கி வருகிறது. விவசாயிகள், நெசவாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், ஆடு வளர்ப்போர், கரும்பு உற்பத்தியாளர்கள், வீட்டு வசதி, கதர், கிராமம் தொழில், தொழிலாளர்கள், மீனவர்கள், மகளிர் என அனைத்துத் தரப்பினரும் தங்களுடைய நலன், பாதுகாப்பு கருதி தங்களுக்கு தாங்களே கூட்டாக, உறவாக அமைப்புகளை உருவாக்கி வருகின்றனர். நேருவின் கலப்புப் பொருளாதாரத்தில் கூட்டுறவு இயக்கம் முக்கிய அங்கமாக திகழ்ந்தது.
1904ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த கூட்டுறவு சட்டம் 1961, 1963, 1983 என பல முறைகள் முக்கிய திருத்தங்களைக் கொண்டு வந்து இச்சட்டம் நடைமுறையில் உள்ளது.

தமிழகத்தில் இந்த அமைப்பு ஆரோக்கியத்தோடு செயல்பட காரணமாக பலர் திகழ்ந்தனர். தூத்துக்குடியில் தொழிற் சங்கத்தைத் துவக்கிய வ.உ.சிதம்பரனார் கூட்டுறவு முறையில் அந்த அமைப்பை நடத்தினார்.

கிட்டத்தட்ட 30,000 கூட்டுறவு அமைப்புகள் தமிழ்நாட்டில் திறம்பட செயல்பட்டால் பொருளாதாரம், மக்களின் நலன், ஜனநாயகம் பேணப்படும். அரசியல் தலையீடு இல்லாமல் கூட்டுறவு உறுப்பினர்களுடைய விருப்பத்தின் பேரில் இந்த இயக்கங்கள் செயல்பட வேண்டும். கூட்டுறவு இயக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு அமைப்பு மட்டுமல்லாமல், கிராமப் புறங்களில் இருந்து நகர்ப்புறங்கள் வரை உள்ள பல ஆயிரம் அமைப்புகளின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு பாலபாடத்தைப் போதிக்கும் போதி மரமாகும்.

சர்வதேச கூட்டுறவுதினம் மிலேனியத்திலிருந்து பின்வரும் கருப்பொருட்களுக்கமைய கொண்டாடப்படுகிறது.
2000: "Co-operatives and Employment Promotion"
2001: "The Co-operative Advantage in the Third Millennium"
2002: "Society and Co-operatives: Concern for Community"
2003: "Co-operatives Make Development Happen!: The contribution of co-operatives to the United Nations Millennium Development Goals"
2004: "Co-operatives for Fair Globalisation: Creating Opportunities for All"
2005: "Microfinance is OUR business! Cooperating out of poverty"
2006 "Peace-building through Co-operatives."
2007 "Co-operative Values and Principles for Corporate Social responsibility."
2008: "Confronting Climate Change through Co-operative Enterprise"
2009: "Driving global recovery through co-operatives"

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X