சர்வதேச அமைதி நாள்
இத்தினம் 1981ல் இருந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க் கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. 2002ம் ஆண்டில் இருந்து இத்தினம் செப்டம்பர் 21ல் கொண்டாடப்படுகிறது. அமைதி என்பதற்குப் பல பொருட்கள் தமிழில் உள்ளன. குறிப்பாக யுத்தம் பகைமை, வன்முறை என்பவற்றுக்கு எதிர்ச் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்காலப் பயன்பாட்டில் அமைதி என்பது, பகைமை இல்லாத ஒரு நிலையைக் குறிக்கும் ஒரு கருத்துருவாகும்.
சர்வதேச ரீதியில் இது போர் இல்லாத நிலையையும் குறிக்கும். மகாத்மா காந்தியின் கூற்றுப்படி, ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் வன்முறைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், சமூகநீதி இன்மை காரணமாக அங்கே அமைதி இருப்பதாகக் கூறமுடியாது. காந்தி, அமைதி குறித்த ஒரு நோக்கைக் கொண்டிருந்தார். நீதி என்பது அமைதிக்கு அடைப்படையானதும் கட்டாயமானதுமான அம்சம் என்று அவர் கருதினார். இதன்படி, அமைதிக்கு வன்முறை இல்லாமை மட்டுமன்றி, நீதி இருக்கவேண்டியதும் அவசியம்.
உலகின் சகல முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானமாகும். வரலாற்றில் பல யுத்தங்கள் நடை பெற்றுள்ளன. 20ம் நூற்றாண்டின் இரு பெரும் உலக மகா யுத்தங்கள் கோடிக்கணக்கான உயிர்களையும் சொத்துக்களையும் பழி கொண்டுள்ளன. 2ம் உலக மகா யுத்தத்தின் பின் உலக சமாதானத்திற்காக 1945ல் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உலக நாடுகளிடையே பூசல்களையும், போர்களையும் தடுக்க உயரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்ற போதிலும் கூட துப்பாக்கிகளுக்கும் குண்டுகளுக்கும் ஓய்வு கொடுக்க முடியவில்லை.
உலகின் நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் பாரிய பணி யுனெஸ்கோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உலக சமாதான முயற்சியொன்றின் போது ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஹாமர்சீல்ட் விமான விபத்தில் உயிர் துறந்தமை 1961 வரலாற்றுச் சுவடாகும். அவர் உயிர் துறந்த செப்டம்பர் மூன்றாம் வாரத்தின் செவ்வாய்க் கிழமையிலாகும்.
யுனெஸ்கோவின் முகவுரை வாசகம் “மனித உள்ளங்களில் தான் போர் தோன்றுவதனால் மனித உள்ளங்களில் தான் அமைதிக்கான அரண்களும் அமைக்கப் பெறல் வேண்டும்" என்பதாகும். விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன் படைகொண்டு அமைதியை ஏற்படுத்த முடியாது. நல்லுணர்வால் தான் அதனைப் பெற முடியும்" என்றார்.
இந்நோக்கத்தில் யுனெஸ்கோவின் பொறுப்பும் பணியும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். யுனெஸ்கோவின் சட்ட யாப்பின் 1வது உறுப்புரை பின்வருமாறு கூறுகின்றது. உலக மக்களை இனம், பால், மொழி, அல்லது சமய பேதமின்றி ஐ.நா சாசனத்தின் உறுதி செய்யப்படுகின்ற நீதிக்கும் சட்ட ஆட்சிக்கும் மனித உரிமைகளுக்கும், அடிப்படை சுதந்திரங்களுக்கும், உலகளாவிய நன்மதிப்பினை வளர்ப்பதற்கென கல்வி, அறிவியல், பண்பாடு மூலமாக நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தி சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் பாடுபடுவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
அதாவது யுனெஸ்கோவின் பணி, கல்வி, அறிவியல, பண்பாட்டுத் தொடர்களின் வழியாக உலக சமாதானம், மனித இனத்தின் பொது நலன் ஆகிய குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும். ஐ.நா அமையமும், ஐ.நா சாசனமும் இக்குறிக்கோள்களின் பேரிலேயே நிறுவப் பெற்றுள்ளது.
மனித உரிமைகளையும், கடமைகளையும் செயற்படுத்துவதற்கு இன்றியமையாது தேவைப்படுவது சமாதானமாகும். அதாவது குடிமக்கள் அனைவரும் முதன்மை பெறும் ஒருங்கிணைந்து வாழும் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரமான, நியாயமான சட்ட ஆட்சியுடைய சமத்துவம், ஒருமைப்பாடு என்பது தான் சமாதானம் ஆகும். சமாதானம், மேம்பாடு, சனநாயகம் போன்ற மூன்றும் ஒன்றுக்கொன்று உருதுணைபுரியும் முக்கோணங்களாகும். அவை ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன.
மிக அண்மையில் வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனை காரணமாக உலகின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கண்டனம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர், அணு ஆயுத வல்லமை மற்றும் ஏவுகணைத் திறனை மேம்படுத்திக் கொள்ள வடகொரியா மேற்கொள்ளும் முயற்சிகள் ஐ.நா. பாதுகாப்பு பேரவை விதிகளை மீறுவதாகவே உள்ளது. இதனால் சர்வதேச சமூகத்தின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் வடகொரியா பெரும் அச்சுற்றுத்தலாகவே விளங்குகிறது. சர்வதேச விதிகளை மீறி அணு ஆயுத சோதனை நடத்தியுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி குறுகிய தூர இலக்குகளை தாக்கும் ஏவுகணையையும் அந்நாடு இன்று சோதித்துள்ளதாகத் தெரிகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைகள் அனைத்து நாடுகளுக்கும் பலத்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ஒபாமா கூறியுள்ளார்.
ஒபாமா வடகொரியாவை மையமாகக் கொண்டு இக்கருத்தினை வெளியிட்டாலும் கூட உலகில் அணுஆயுதங்களுக்கு ஐக்கிய அமெரிக்க நாடுகள், ரஷ்யா (முன்னாள் சோவியத் ஒன்றியம்), சீனா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடிக் கொண்டுள்ளன. உலக அமைதியை வலியுருத்தும் நாடுகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையையே தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் நாடுகள் கூட பாதுகாப்பு என்ற போர்வையில் அணு ஆயுதற்கள் உற்பட ஆயுத பலத்தை பெருக்குகின்றன அன்றி அவற்றை முடிவுக்குக் கொண்டு வருவது காணமுடியாமல் இருப்பதும் விந்தைக்குரிய விடயமே.
கடந்த ஐந்து தசாப்தங்களாக பயங்கரவாதம் என்ற போர்வையிலும் அமைதிக்கான அசசுருத்தல்கள் ஏற்பட்ட வண்ணமே உள்ளன. சமாதானம் கோட்பாடு மட்டுமல்ல, அது செயற்பாடு செயல்பட்டால்தான் சமாதானம் அர்த்தமுள்ளதாகும். அறிஞர் கார்லோஸ் பியூண்டஸ் கூறுவது போல “சமாதானம் என்பது மாறுபாடுகளின் சேர்க்கை. கலாசாரங்களின் இனக்கலப்பு. அது அருவக்கோட்பாடு அல்ல. மாறாக, பண்பாட்டு அரசியல் சமூக, பொருளாதார சூழல்களில் ஆழ வேரூண்றிய ஒன்றாகும்".