ஐக்கிய நாடுகள் தினம்
சர்வதேச நீதிமன்றம்:
இது ஹேக் நகரில் அமைந்துள்ளது. இந்நீதிமன்றத்தின் சட்டங்களை ஏற்றுள்ள எந்தவொரு உறுப்பு நாடும் தமது பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ள இந்நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கலாம். இதில் 15 நீதிபதிகள் இருப்பர் (பதவிக்காலம் 9 ஆண்டுகள்).
செயலகம்:
ஐ.நா. சபையின் ஏனைய அமைப்புக்களுக்குச் சேவையாற்றவே பொதுச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல்வர் செயலாளர் நாயகமாவார். இதன் முதலாவது செயலாளர் நாயகம் டிரக்லி வி என்பவராவார். தற்போதைய செயலாளர் நாயகம் 'பன்-கீ மூன்" ஆவார்.
செயலாளர் நாயகம் பாதுகாப்புச் சபையின் சிபார்சின் பேரில் பொதுச்சபையால் தெரிவு செய்யப்படுவார். ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நிர்வாகியான இவரது பிரதான கடமை உலக சமாதானத்தையும்ää பாதுகாப்பையும் பாதிக்கும் எந்த விடயத்தையும் பாதுகாப்புச் சபையின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகும்.
ஐக்கிய நாடுகள் சபை கொண்டுள்ள நடவடிக்கைகள் விமர்சன ரீதியில் நோக்கப்பட வேண்டியதாகும்.
சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாமற் போனதன் காரணமாக 2ம் உலக மகாயுத்தம் ஏற்பட்டது. இனிமேல் இதுபோன்றதொரு யுத்தம் ஏற்படக்கூடாது என்பதைப் பிரதானமாக் கொண்டு உலக சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டியிருந்தது. உலக மகாயுத்தங்களை எடுத்து நோக்குமிடத்து நாடுகளுக்கிடையே ஏற்பட்ட அடிப்படைப் பிரச்சினைகள் காலகதியில் விஸ்வரூபம் எடுப்பதன் காரணமாகவே யுத்தங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
எனவே உலக சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் நாடுகளுக்கிடையிலான பிணக்குகள் சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தப்பட்ட பின் மற்றுமொரு உலக யுத்தம் ஏற்படவில்லை. இவ்வடிப்படையில் நோக்குமிடத்து ஐ.நா. அமையம் உலக சமாதானத்தை ஏற்படுத்த வில்லையென்று முற்றுமுழுதாகக் கூறமுடியாது.
பல சந்தரப்பங்களில் ஐ.நா. சபையின் அங்கத்துவ நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பிணக்குகளை (குறுங்காலப் பிணக்குகள் அல்ல நீண்ட காலப் பிணக்குகள்) ஐக்கிய நாடுகள் சபையினால் தீர்க்க முடியாமற்போன சந்தர்ப்பங்களும் உண்டு. உதாரணமாக மத்திய கிழக்குப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாமல் இதுவரை ஐ.நாவின் பிரயத்தனங்கள் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
1967ம் ஆண்டு ஐ.நாவின் தீர்மானத்தை மீறி இஸ்ரேல், பலஸ்தீன் பகுதிகளை ஆக்கிரமித்தமை, 1968ம் ஆண்டில் சோவியத்- செக்லோஸ்லவியா பிரச்சனை, 1974ம் ஆண்டு துருக்கியின் சைப்ரஸ் படையெடுப்பு, 1991ம் ஆண்டு அமெரிக்க- ஈராக் யுத்தம், அண்மைக் காலத்தில் அமெரிக்க- ஈராக், அமெரிக்க- ஆப்கான் யுத்தம்... இதைப் போன்ற காரணங்களை எடுத்து நோக்குமிடத்து ஐ.நா. சபை உலக சமாதானத்தைப் பேணவில்லை என்ற கூற்றில் சில உண்மைகள் இருப்பதை மறுக்க முடியாது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துகையில் ஏற்படக்கூடிய சிற்சில பிரச்சினைகள் உலக சமாதானத்திற்கான தலையீடாக அமைந்து காணப்படுகின்றன. இவற்றை பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம்.
பிரச்சனை நிலைகளில் ஐ.நா. சபையின் யோசனைகளை கட்டாயம் ஏற்க வேண்டும் என்ற நிலை இல்லாமை. சட்ட அதிகாரம் பொருந்தியதாக இன்மை. வல்லரசுகள் ஐ.நா. சபைக்குப் புறம்பான முறையில் தனது பலத்தினைப் பிரயோகித்தல் அமைப்பினுள் வல்லரசுகளின் தலையீடு. இத்தகைய தலையீடுகளுக்கிடையே ஐ.நா. சபை செயற்பாடு; சிக்கல்களை எதிர் நோக்குகின்றன.
எனவே, உலக சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஐ.நா. சபை தவறிவிட்டது என்ற கருத்து சற்று உண்மையாகின்றது சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என வர்ணிக்கப்பட்ட பிரிட்டன் 2ம் உலகப் போரின் பின்னர் தன் முதன்மையை இழக்க, அமெரிக்கா, சோவியத் ரஷ்யா ஒன்றியம் ஆகிய இரு பெரும் வல்லரசுகள் எழுச்சி பெற்றன. முன்பு பிரிட்டனின் தனியுரிமையாக இருந்த உலக நிர்வாகம், பொருளாதாரச் சுரண்டல், ராணுவ ஆதிக்கம் என்பன இவ்விரு வல்லரசுகளுக்கிடையேயும் பங்கிடப்பட்டன. இவ்விரு வல்லரசுகளுக்கிடையிலான பனிப்போர் (Cold War) பல சிறிய நாடுகளை நசுக்குவதன் மூலம் செயற்பட்டன. தவிர மறைமுகமாக ஐ.நா. சபை அமெரிக்காவின் கைப்பொம்மையாகவே செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
2ம் உலக மகாயுத்தம் முடிவடைந்து இன்றுவரை பல தசாப்தங்கள் கழிந்துவிட்டன. ஆனால், 1ம் உலக மகாயுத்தம் முடிவடைந்து 2 தசாப்தங்களுக்குள்ளேயே 2ம் உலக மகாயுத்தம் ஏற்பட்டுவிட்டது. எனவே 2ம் உலக மகாயுத்தத்தின் பின்னர் மீண்டும் ஒரு உலக மகாயுத்தம் ஏற்படாமைக்கு ஐ.நா. சபை முழுமையான காரணியா?.
இவ்வினாவினைச் சற்று அழுத்தமான முறையில் ஆராய்தல் வேண்டும். எவ்வாறாயினும் உலக சமாதானத்தைப் பேணத்தக்க முறையில் சில அத்தியாவசியமான செயல்களை இந்த சபை ஆற்றி வருவதை நம்மால் மறுக்க முடியாது.