ஆப்பிரிக்க குழந்தையின் அமெரிக்க கனவு
ஆப்பிரிக்க குழந்தையொன்றுக்கு கனவாகத் தோன்றிய அமெரிக்க வாழ்வு கனவாகவே முடிந்து விட்டது.
மடோனா அமெரிக்க பாப் இசையுலகில் முடிசூடா ராணியாகத் திகழ்ந்து வருகிறார். இவரது வாழ்வில் செல்வம் கொழிக்கிறது. பல கோடிகளுக்கு அதிபதி.
மடோனா சமீப காலம் வரை பிரபல் ஆங்கில சினிமா டைரக்டரான கை ரிச்சியின் (Guy Richie) மனைவியாக இருந்து விவாகரத்துப் பெற்றவர்.
இவருக்கு கை ரிச்சியின் மூலம் ராக்கோ என்னும் மகனும், மற்றொருவரின் மூலம் பெண் குழந்தையும் உண்டு.
அத்துடன் 2006ம் ஆண்டு மடோனா, டேவிட் பாண்டா என்னும் 13 மாத ஆப்பிரிக்கக் குழந்தையை மலாவி நாட்டிலிருந்து தத்தெடுத்துக் கொண்டார்.
இந்தக் குழந்தையை அந்நாட்டு அனாதைகள் இல்லத்திலிருந்து இவர் தெரிவு செய்தார். அக்குழந்தையின் தாயார் எய்ட்ஸ் நோயினால், குழந்தைக்கு ஒரு மாதமாக இருக்கும்போதே இறந்து போனார்.
இக்குழந்தையைப் பராமரிக்க முடியாத குழந்தையின் தந்தை அக்குழந்தையை அனாதை இல்லத்தில் சேர்த்திருந்தார்.
அந்த அனாதை இல்லத்தில் சந்தித்த அக்குழந்தை மடோனாவைக் கவர்ந்து விடவே அவர் அக்குழந்தையை தத்து எடுத்தார்.
அதேபாணியில் மீண்டும் ஒரு ஆப்பிரிக்கக் குழந்தையை அதே மலாவி நாட்டிலிருந்து தத்தெடுக்க முயற்சித்த மடோனாவின் பாதையில் பல தடைக்கற்கள் விழுந்தன.
தத்து எடுப்பதற்கான சட்டப் பத்திரங்களைத் தாக்கல் செய்த பின்பு இவரது தத்தெடுப்பதற்கான மனு மலாவி நீதிமன்றத்தில் விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தத்தெடுப்பதற்கான மடோனாவின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் இக்குழந்தையைத் தத்தெடுப்பதற்கான கலாச்சார அறிவுப்பகரல் மடோனாவுக்கு இல்லை, அதற்காக அவர் குறைந்தது பதினெட்டு மாதங்களாவது மலாவியில் இக்குழந்தையின் கலாச்சார சூழலில் வாழ்ந்திருந்திருக்க வேண்டும் என்பதே.
இம்மனுவும், அதன் நிராகரிப்பும் பலவிதமான சர்ச்சைகளை, பல வினாக்களை மக்களிடையே கிளப்பி விட்டுள்ளது.
இந்த வழக்கும், அதன் தீர்ப்பும் தற்போது நான் வாழும் இங்கிலாந்து நாட்டில் பல வானோலி நிகழ்ச்சிகளில், தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகளில் பலவிதமான கலந்துரையாடல்களை உருவாக்கி விட்டிருக்கின்றன.
இந்தத் தீர்ப்பு சரியானதே என்று ஒரு தரப்பினரும், இல்லை பிழையானது என்று மற்றொரு பகுதியினரும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.
வறுமையின் அகோரப் பிடியில் அழுந்தி வாழும் ஆப்பிரிக்க சமூகத்தில், அனாதைகள் இல்லத்தில் இருக்கும் ஒரு மூன்று வயதான குழந்தைக்கு, வாழ்க்கையில் சகலவிதமான வசதிகளுடன் கூடிய அற்புதமான வாழ்க்கை அமெரிக்க நாட்டில் கிடைப்பதை தடுத்தது அந்நாட்டின் சட்டமென்றால்,
இக்குழந்தையைப் போன்றோரின் அடிப்படை வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த அச்சட்டத்தை அமலாக்கிய அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்னும் கேள்வியைப் பலமாக ஒரு சாரார் முன்வைக்கிறார்கள்.
இத்தகைய வறுமையான வாழ்க்கை ஒரு குழந்தைக்கு இல்லையே!. பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இதே நிலையில் வாடுகின்றார்களே. ஒவ்வொரு குழந்தைக்கு செலவிடும் பணத்தை அப்படியே இக்குழந்தைகளின் பராமரிப்புக்காக வழங்கினால் பல குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தலாமே என்பது இதற்கு எதிரானவர்கள் கருத்து.
மலாவியில் இத்தகைய அனாதைக் குழந்தைகள் இல்லத்தில் இருக்கும் குழந்தைகள் பலர் யாதொரு உறவுமற்றவர்கள் அல்ல. அதிகமானவர்கள் பெற்றோர்களில் ஒருவரை இழந்தவர்களோ அன்றி இரு பெறோரையும் இழந்தவர்கள், ஆனால் உறவினர்கள் உள்ளவர்கள்.
இப்படியானவர்களை மேலைநாடுகளில் இருப்பவர்கள் தத்தெடுத்துச் சென்றால், அவர்கள் தமது கலாச்சாரத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அவர்களைப் போன்றோர்களை அவர்களது சமூகத்தில் வைத்துப் பராமரிப்பதே அவர்களின் மனவளர்ச்சிக்கு உகந்தது என்று சிறுவர்களுக்கான ஜக்கிய நாடுகள் உதவி ஸ்தாபனம் தனது அறிக்கையில் கூறுகிறது.
உறவினர்கள் இருக்கிறார்களோ, இல்லையோ இவர்கள் அனாதை இல்லத்தில் வாழும் நிலையேற்படுவது அவர்களுக்கு யாருமில்லை என்னும் நிலையைத் தானே காண்பிக்கிறது.
அத்தகைய சூழலில் மடோனாவைப் போன்ற பணம் படைத்த மேலை தேசத்தவர்கள் அவர்களில் ஒருவருக்காவது நல்ல வாழ்க்கையைக் கொடுப்பதைத் தடுப்பது மனட்சாட்சிக்கு உகந்ததா? என்னும் கேள்வியும் மறுபக்கத்தில் இருந்து பலமாக எழுகிறது.
இத்தகைய தத்தெடுப்புகள் மடோனா போன்ற ஒருவரால் தான் நிகழ்த்தப்படுகிறதா?. தினந்தோறும் எத்தனையோ ஆப்பிரிக்கக் குழந்தைகள் குழந்தைகளற்ற மேலைத்தேசத்தவர்களால் தத்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால் மடோனா ஒரு பிரபல்யமிக்கவர் என்னும் காரணத்தினால் அவர் சம்மந்தப்பட்ட நிகழ்வு மட்டும் இவ்வளவு தூரம் ஊடகங்களில் விமர்ச்சிக்கப்பட்டு அவரது நடவடிக்கையும், ஒரு குழந்தையும் நல்வாழ்க்கையும் பாதிக்கப்படுவது முறையா என்னும் கேள்வியும் எழுகிறது.
தத்தெடுப்பது என்னும் நிகழ்வு மேலைத் தேசங்களில் பல கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்படுகிறது. ததெடுப்போரின் மனநிலை, அவர்களின் பிரத்தியேக நடவடிக்கை என்பன் பலகாலமாக பரீட்சிக்கப்பட்ட பின்புதான் ததெடுப்புக்கள் அங்கீகரிக்கப்படுகிறது.
இதயம் நிறைய அன்பைச் சுமந்து கொண்டு அதைக் கொட்ட தமக்கு குழந்தைகள் இல்லையே என ஏங்கும் உள்ளங்கள் ஒரு புறம், அனாதை இல்லங்களில் தம்மீது அன்பு காட்ட யாருமில்லையே என ஏங்கித் தவிக்கும் பிஞ்சு மனங்கள் மறுபுறம். இடையே சட்டம் இவையிரண்டையும் சேர்க்க கடுமையான் விதிகளை போடு கண்களை மறைக்கிறது.
இதுதான் மேற்கத்திய நாடுகளில் நிலை. இந்த நிலையினால் விரக்தி அடைந்து ஆப்பிரிக்க நாடுகள், ஆசிய நாடுகளில் தமது குறையைப் போக்கிக் கொள்ள இந்த குழந்தையற்றோர் முனைவது இப்போ சகஜமாக நடைபெறும் ஒரு நிகழ்வு.
அதற்காக மேலை தேசங்களில் இருக்கும் சட்டங்களைப் பிழையெனக் கூறிவிட முடியாது. யாருமற்ற குழந்தைகளை தீயவர்கள் தத்தெடுத்து துன்புறுத்துவதைத் தடை செய்யவே இச்சட்டங்கள் இயற்றப்பட்டன.
ஆனால் அவை பலசமயங்களில் உணமையான உள்ளங்களுக்கு இடையூறாக மைந்து விடுவதுண்டு.
மடோனா மலாவி நாட்டிலுள்ள வறுமையான் குழந்தைகளுக்காக இதுவரை பல்லாயிரக்கணக்காகச் செலவு செய்துள்ளார் என்னும் செய்தியும் ஆங்காங்கே காதுகளில் விழுகிறது.
எட்டு வருடகாலமாக மலாவியில் புனருத்தாரண அமைப்பை நிறுவி உதவுகிறார் என்று சொல்லப்படுகிறது. வானொலி உரையாடல்களில் பலரின் கருத்துக்களை நான் சமீபத்தில் செவிமடுக்க நேரிட்டது.
மடோனாவின் வாழ்க்கையிலுள்ள வளம் அவர்மீது ஒரு சிறு பொறாமையை சில மக்கள் மனதில் தூண்டியிருக்குமோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.
நான் மடோனாவின் ரசிகனல்ல, அன்றி அவரின் பாப் பாட்ல்களை ரசிப்பனும் அல்ல. அவர் செய்யும் நோக்கம் எதுவாகவேனும் இருந்து விட்டுப் போகட்டுமே.
அவர் தத்தெடுக்கும் அந்த ஆப்பிரிக்கக் குழந்தைகளை மனோவியல் ரீதியாகவோ அன்றி உடலியல் ரீதியாகவோ துன்புறுத்தாமல் அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதால் மடோனா உலக சமுதாயத்துக்கு என்ன தீமை செய்துவிடப் போகிறார் ?
இன்று மிகவும் தீர்க்கமாக அக்குழந்தையைத் தத்தெடுப்பது தவறு என்போர் நாளை அக்குழந்தை வளர்ந்து ஒருவேளை உணவுக்குத் தவிக்கும் போது அவர்களைப் பார்த்து எனக்குக் கிடைக்கவிருந்த ஒரு நல்ல வாழ்க்கையை கெடுத்து விட்டீர்களே! அது மட்டுமா, எனக்குக் கிடைத்த நல்வாழ்க்கையின் மூலம் நான் எனது நாடான மலாவியிலுள்ள இன்னும் எத்தனை பேரின் வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தியிருப்பேன், அதையும் கெடுத்து விட்டீர்களே! என்று கேட்டால் பதிலெதுவாக இருக்கும்?.
எது எதுவாக இருந்தாலும் சரி!. ஒரு ஆப்பிரிக்கக் குழந்தையின் கனவு கனவாகவே கலைக்கப்பட்டதால் மலாவி நாட்டிலுள்ள குழந்தைகளின் வறுமை நிலை அப்படியே ஒழிந்து விடப் போகிறதா?
http://thamilpoonga.com/