சான் பிரான்சிஸ்கோவில் முத்தமிழுடன் பொங்கிய பொங்கல்
- சதுக்கபூதம்
சான் பிரான்சிஸ்கோ: சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பாக பொங்கல் விழா சான்ரோமானில் மிகவும் விமரிசையாக கொண்டாடபட்டது. இவ்விழா தமிழரின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை சார்ந்ததாகவும், கிராமிய மணம் வீசும் விதத்திலும் இருந்தது.
வளைகுடா பகுதி தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர்.
பொங்கலோ பொங்கல்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் திடலில் குலவியிட்டு பொங்கிய பொங்கல் கண்டு "பொங்கலோ பொங்கல்" என்று எழுப்பிய முழக்கம் நாடு கடந்து சென்றாலும் நம் தமிழர் பண்பாட்டை மறந்து விடமாட்டார் என்று பறை சாற்றியது.
கலை நிகழ்ச்சிகள்
பொங்கல் வைத்த பிறகு மிகவும் சிறப்பான முறையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உழவு திருநாளான பொங்கல் அன்று இயற்கை விஞ்ஞானி திரு. நம்மாழ்வார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேயர்
தமிழ் மன்றத்தின் தலைவர் திரு சோலை அழகப்பன் அவர்கள் இந்த வருடம் தமிழ் மன்றம் நடத்த இருக்கும் விழாக்களை பற்றி எடுத்துரைத்தார். சிறப்பு விருந்திரனராக பெட்னா(FetNA) அமைப்பின் தலைவரான திரு. தண்டபாணி குப்புசாமி அவர்களும், சான்ராமோன் நகர மேயரும் வந்திருந்தனர்.
முத்தமிழ்
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். நாட்டுபுற பாடல்கள், பரத நாட்டியம், கிராமிய நடனம் என அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் வகையில் இயல், இசை நாடகம் என முத்தமிழிலும் வளைகுடா பகுதி தமிழர்கள் நிகழ்ச்சியை விருந்தாக படைத்தனர்.