பத்மஸ்ரீ ஜார்ஜ் ஹார்ட்: தமிழுக்காக பாடுபடும் அமெரிக்க பேராசிரியர்
சான்பிரான்சிஸ்கோ: தமிழின் மேன்மைக்காக உழைத்து வரும் அமெரிக்க தமிழ் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.
இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள பத்ம விருதுகள் பட்டியலில் தமிழின் மேன்மைக்காக உழைத்த ஒரு அமெரிக்க தமிழ் பேராசிரியரின் பெயரும் இடம்பெற்றுள்ளது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் உள்ள பெர்க்லி பல்கலைக்கழக தமிழ் துறையின் முன்னாள் பேராசிரியர் திரு. ஜார்ஜ் ஹார்ட் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்திருப்பது அந்த விருதுக்கே பெருமை சேர்ப்பது ஆகும். திரு. ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்றாலும் தமிழின் மீது பெரும் ஆர்வம் கொண்டவர்.
மேலை நாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் படிப்பிற்கு என்று தனி துறை 1970கள் வரை இல்லமல் இருந்தது. தமிழின் பெருமையை நாம் என்ன தான் பேசினாலும் மேலை நாட்டினர் மற்றும் மேலை நாட்டு பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் மூலம் வெளி சென்றால் தான் அது உலக அளவில் அனைவரையும் சென்றடையும். எனவே மேலை நாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் படிப்பு ஏற்படுத்துவது என்பது மிக முக்கியமானது.
ஜெர்மானிய, சமஸ்கிருத மொழிகளுக்கிடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்ய பல்வேறு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டு பல்கலைக்கழகங்களில் ஆய்வு மையம் உள்ளது. அதன் விளைவாக சமஸ்கிருதம் மொழி பற்றிய ஆய்வு மேலை நாடுகளில் நடைபெற்று உலகளவில் அதன் பெருமை மக்களிடம் சென்றடைந்தது. அது போன்ற பெரிய முயற்சி தமிழுக்காக பெரிய அளவில் எடுக்கப்படவில்லை. அந்த குறையை போக்கி பெர்க்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையை உருவாக்க உதவியவர் திரு. ஜார்ஜ் எல். ஹார்ட் (George L. Hart) அவர்கள் ஆவார். வளைகுடா பகுதி தமிழ் மன்றம் அமைப்பதிலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் உலகளவில் கிடைத்ததில் அவருடைய பங்கு முக்கியமானது. பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றை ஆங்கில மொழிக்கு மொழி பெயர்த்துள்ளார். அமெரிக்காவில் உள்ள பல்வேறு தமிழ் கலாச்சார அமைப்புகளோடு தொடர்ந்து இணைந்து தமிழ் வளர்ச்சிக்காகவும், அடுத்த தலைமுறைக்கு தமிழை எடுத்து செல்லவும் பாடுபட்டு வருகிறார்.