எத்தனை மணிக்கு பார்த்தீங்க? .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (19)
- ராஜேஷ்குமார்
திரிபுரசுந்தரியின் முகம் கோபத்தில் நிறம் மாறியது. செல்போனின் மறுமுனையில் இருந்த புகழேந்தியிடம் குரலை சற்றே உயர்த்தினாள்.
” என்ன சொல்றீங்க புகழேந்தி ஆர்.எஸ்.புரம் பழைய ஜட்ஜ் பங்களாவில் நேத்து ராத்திரி ஆட்கள் இருந்தாங்களா ? ”
” ஆமா மேடம்........ ”
” நீங்க பார்த்தீங்களா ....... ? ”
” பார்த்தேன் மேடம்.... பங்களாவுக்குள்ளே ஆள் நடமாட்டம் இருந்தது. ஆனா உள்ளே இருந்தது யார்ன்னு தெரியாது ”
” எத்தனை மணிக்கு பார்த்தீங்க ? ”
” பதினோரு மணி இருக்கும் ”
” அந்த நேரத்துக்கு அங்கே எதுக்கு போனீங்க ? ”
” மேடம்...... ஆர்.எஸ்.புரம் பிரகாசம் ரோட்ல ஒரு பஞ்சாபியோட தாபா இருக்கு.... வாரத்துல ஒரு நாள் அங்கதான் சாப்பிடப் போவேன். நேத்து அந்த தாபா கடைக்கு போயிட்டு இருந்தபோதுதான் பழைய ஜட்ஜ் பங்களாவுக்குள்ளே ஆள் நடமாட்டம் இருக்கறமாதிரி தெரிஞ்சுது. கண்ணாடி ஜன்னல்களில் வெளிச்சம் ஒட்டியிருந்தது. ”
” இதோ பாருங்க புகழேந்தி... உங்க ப்ரஸ் ரிப்போர்ட்டர் புத்தியை என்கிட்டே காட்ட வேண்டாம்..... உங்க பத்திரிக்கைக்கு பரபரப்பான நியூஸ் வேணும்ன்னா வேற பக்கம் போய்த் தேடுங்க. எனக்கு போன் பண்ணி வாயைக் கிளறாதீங்க ”
மறுமுனையில் ரிப்போர்ட்டர் புகழேந்தி சிரித்தான்.
”ஸாரி மேடம்..... நான் பரபரப்பான நியூஸ்களுக்காக அலையற ரிப்போர்ட்டர் கிடையாது. நான் ஒர்க் பண்ற ஷேடோ இன்வெஸ்டிகேஷன் ஜர்னலைப் பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும். சமுதாய அவலங்களை தைரியமாய் சுட்டிக்காட்டற ஒரு பத்திரிக்கை அது. நீங்களே அந்தப் பத்திரிக்கையைப் பாராட்டியும் இருக்கீங்க.... அந்தப் பத்திரிக்கையில் வர்ற செய்திகளெல்லாம் ஒருதலைப்பட்சமாய் இல்லாமே நடுநிலைமையோடு இருந்ததினால்தான் உங்களோட பர்சனல் செல்போன் நெம்பரை எனக்கும் கொடுத்து ஏதாவது உதவி தேவைப்பட்டா உங்களை காண்டாக்ட் பண்ணச் சொன்னீங்க. சட்டத்துக்கு விரோதமான செயல்கள் எங்கே நடந்தாலும் உடனடியாய் உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணும்படியாய் இன்ஸ்ட்ரக்சனும் கொடுத்து இருக்கீங்க. என் மேல உங்களுக்கு இவ்வளவு ஸாப்ட் கார்னர் இருக்கும்போது நான் எதுக்காக பொய் சொல்லணும். நேத்து ராத்திரி அந்த பிரகாசம் ரோடு வழியாய் நான் போகும்போது அந்த பங்களாவுக்குள்ளே நடமாட்டம் இருந்தது உண்மை மேடம் ”
” இட்ஸ் ஒ.கே.... நான் என்கொயர் பண்றேன். அங்கே ரெண்டு செக்யூரிட்டி எப்பவும் இருப்பாங்க. தே ஆர் வெரி லாயல். நான் இப்ப பேசிடறேன் ”
” ஸாரி மேடம்.... நான் உங்களை டென்சன் பண்ணிட்டேன்”
” நோ இஷ்யூஸ்... தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம்லி இன்பர்மேஷன்.... என்னோட நாலேட்ஜூக்கு வராமே யாரும் அந்த பங்களாவில் தங்கியிருக்க முடியாது. ஐ வில் டேக் கேர் ”
திரிபுரசுந்தரி செல்போனை இறுகிப்போன முகத்தோடு அணைத்துவிட்டு பெருமூச்சொன்றை அனல் கலந்து வெளியேற்றினாள். அவளுடைய முகபாவத்தை படித்துவிட்ட வளர்மதி சற்றே கவலையான குரலில் கேட்டாள்.
” என்ன மேடம் செல்போனில் ஏதாவது மோசமான செய்தியா ? ”
” ஆமா வளர்மதி....... ஆர்.எஸ்.புரம் பிரகாசம் ரோட்ல இருக்கிற பழைய ஜட்ஜ் பங்களாவைப்பற்றி நீ கேள்விப்பட்டிருப்பேன்ன்னு நினைக்கிறேன் ”
” நிறையவே கேள்விப்பட்டிருக்கேன் மேடம். ரெண்டு வருஷங்களுக்கு முந்தி வரை அந்த பங்களா அரசியல் தலைவர்களுக்கும், உயர் அரசு அதிகாரிகளுக்கும் ஒரு சர்க்யூட் ஹவுஸாக செயல்பட்டு வந்தது. ஆனா அதுக்கப்புறம் அங்கே யாரும் தங்க அனுமதியில்லைன்னு பேப்பர்ல ஒரு நாள் நியூஸ் பார்த்தேன். அது ஒரு முக்கியமான விஷயமாய் எனக்கு தோணாததால அதுல நான் ஆர்வம் காட்டலை. இப்ப அந்த பங்களாவில் என்ன பிரச்சினை
மேடம்.... ? ”
” நேத்து ராத்திரி அந்த பங்களாவில் யாரோ ஸ்டே பண்ணியிருக்காங்க. ஆள் யார்ன்னு தெரியலை. ஆனா பங்களாவுக்குள்ளே நடமாட்டம் இருந்ததாக ஷேடோ புலனாய்வு பத்திரிக்கை ரிப்போர்ட்டர் புகழேந்தி போன் பண்ணிச் சொன்னார். புகழேந்தி ஒரு ஜென்யூன் ரிப்போர்ட்டர். அவர் என்னிக்குமே காஸிப் நியூஸைத் தரமாட்டார். இருக்கிற பிரச்சினைகள் போதான்னு இது ஒரு புது பிரச்சினை ” சொன்ன திரிபுரசுந்தரி தனக்குப் பக்கத்தில் இருந்த இண்டர்காம் போனின் ரிஸீவரை எடுத்து யாரிடமோ பேசினாள்.
” ஏ.சி.பி. சடகோபன் வந்துட்டாரா .... ? ”
” வந்துட்டார் மேடம் ”
” என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க.... ”
” எஸ் மேடம் ”
இண்டர்காம் ரிஸீவரை வைத்த திரிபுரசுந்தரியை ஒரு தயக்கப் பார்வையுடன் ஏறிட்டாள் வளர்மதி.
” மேடம்.....இஃப் யூ டோண்ட் மைண்ட் நான் உங்ககிட்டே ஒரு கேள்வி கேட்கலாமா .... ? ”
” என்ன .... ? ”
” அந்த பழைய ஜட்ஜ் பங்களாவில் கடந்த ரெண்டு வருஷ காலமாய் யாரையுமே தங்க வைக்காததுக்கு என்ன காரணம் மேடம்.... ? அந்தக் கட்டிடம் தங்க முடியாத அளவுக்கு மோசமான நிலைமையில் இருக்கா.....? ”
” நோ....நோ.....நூறு வருஷத்துக்கு முன்னாடி பிரிட்டிஷ்க்காரன் காலத்துல கட்டப்பட்ட உறுதியான கட்டிடம் அது. இன்னும் ஒரு நூறு வருஷமானாலும் அது அப்படியே இருக்கும் ”
” அப்புறம் என்ன பிரச்சினை மேடம் .....? ”
” அது.... வந்து..... வந்து.... ”
” அதை என்கூட ஷேர் பண்ணிக்கக்கூடாதுன்னு நீங்க நினைச்சா வேண்டாம் மேடம் ”
” அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. அந்த பழைய ஜட்ஜ் பங்களாவோடு சம்பந்தப்பட்ட ஒரு செய்தி இன்னமும் உறுதி செய்யப்படாத நிலையில் இருக்கு. அதாவது ரெண்டு வருஷத்துக்கு முந்தி அந்த பங்களாவில் வந்து தங்கின அரசியல் பிரமுகர் ஒருவர் மர்மமான முறையில் படுக்கையில் இறந்து கிடந்தார். அது இயற்கையான மரணம் போல் வெளியுலகத்துக்கு சொல்லப்பட்டாலும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்ங்கிறது உளவுத்துறையின் சந்தேகம். இந்த சம்பவம் நடந்த அடுத்த ஒரு மாத காலத்துக்குள்ளே எதிர்க்கட்சி அரசியல் தலைவர் ஒருவர் உயிர்க்கு ஆபத்தான நிலைமையில் அங்கேயிருந்த போது உடனடியாய் ஹாஸ்பிடல்ல அட்மிட் செய்தும் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே இறந்து போனார். இந்த ரெண்டு மரணங்களைப்பற்றிய சந்தேகம் போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு இருந்ததே தவிர அரசியல் கட்சிகளுக்கோ பொதுமக்களுக்கோ இல்லை.... இருந்தாலும் போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடியாய் ஒரு முடிவு எடுத்து இனி பழைய ஜட்ஜ் பங்களா ஒரு நினைவுச் சின்னமாக மட்டுமே இருக்கும். அது சர்க்யூட் ஹவுஸ் போல அரசியல் தலைவர்களுக்கோ, உயர் அரசு அதிகாரிகளுக்கோ தங்க அனுமதி மறுக்கப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு ஆரம்பத்தில் லேசாய் எதிர்ப்பு இருந்தது. நாட்கள் செல்லச்செல்ல அந்த எதிர்ப்பும் காணாமல் போயிற்று. போலீஸ் கமிஷனரோட உத்தரவு இல்லாமே அந்த பங்களாவில் யாரும் ஒரு பத்து நிமிஷம் கூட தங்க முடியாது. அட் ப்ரஸண்ட் நான்தான் போலீஸ் கமிஷனர். என்னோட ரிட்டன் உத்தரவு இல்லாமே யாரும் அந்த பங்களாவுக்குள்ளே நுழையக்கூடாது ”
திரிபுரசுந்தரி சொல்லிக்கொண்டிருக்கும் போதே அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் சடகோபன் வேக நடையில் அறைக்குள் நுழைந்து சுள்ளென்று உத்யோக தோரணையில் சல்யூட் அடித்துவிட்டு ” எஸ் மேடம்” என்றார்.
” உட்கார்ங்க சடகோபன் ”
வளர்மதிக்குப் பக்கத்தில் இருந்த இருக்கை நுனியில் உட்கார்ந்து நிமிர்ந்தார்.
” பழைய ஜட்ஜ் பங்களாவில் நேத்து ராத்திரி யாராவது ஸ்டே பண்ணியிருந்தாங்களா ? ”
சடகோபனின் பரந்த நெற்றி சில கோடுகளோடு வியப்புக்கு உட்பட்டது.
” அது எப்படி மேடம் அந்த பங்களாவில் தங்க முடியும் அங்கேதான் யாரும் ஸ்டே பண்ண பர்மிஷன் இல்லையே ? ”
” ஆனா ....நேத்து ராத்திரி அங்கே யாரோ தங்கியிருந்திருக்காங்க.... பங்களாவுக்குள்ளே ஆள் நடமாட்டம் இருந்ததை ஒரு நபர் பார்த்திருக்கார்...... ”
” அந்த நபர் வேற ஏதாவது ஒரு பங்களாவைப் பார்த்து தவறுதலாய் சொல்லியிருக்கலாம் மேடம் ”
” சொன்ன நபர் என்னோட நம்பிக்கைக்கு உரிய ப்ரஸ் ரிப்போர்ட்டர். அவர்க்கு அந்த பங்களாவைப்பத்தின எல்லா விவரங்களும் தெரியும் ”
” அப்படீன்னா அந்த பங்களாவில் செக்யூரிட்டிகளாய் பணி புரிகிற ராயப்பனையும் ரஹ்மானையும் என்கொயர் பண்ணிடலாம் ” சடகோபன் சொல்லிக்கொண்டே தன்னுடைய செல்போனை எடுத்தார்.
திரிபுரசுந்தரி கேட்டாள்.
” போன் பண்ணப் போறீங்களா ? ”
”ஆமா...... ”
” வேண்டாம் ..... நேர்ல போயிடுவோம். நேத்து ராத்திரி அப்படி யாராவது அந்த பங்களாவில் ஸ்டே பண்ணியிருந்தாங்கன்னா பங்களாவுக்குள்ளே ஏதாவது மாற்றங்கள் தெரியலாம் ”
” நீங்க சொல்றதும் சரிதான் மேடம்..... எப்ப புறப்படலாம் ”
” இப்பவே...... ஜீப்பை ரெடி பண்ணுங்க. நான் பத்து நிமிஷத்துல கீழே வர்றேன் ”
” எஸ் மேடம் ”
அசிஸ்டெண்ட் கமிஷனர் எழுந்து நின்று ஒரு சல்யூட்டை தந்துவிட்டு அறையினின்றும் வெளியேறிப் போக, திரிபுரசுந்தரி வளர்மதியை ஏறிட்டாள்.
” நீ நர்மதா வீட்டுக்குப் போய் அங்கே சில்பா இருந்தா நான் அவங்களைப் பார்க்க விரும்பறதா சொல்லு. இல்லேன்னா சில்பாவை என்கிட்டே பேசச் சொல்லு. நான் அதுக்குள்ளே இந்த பழைய ஜட்ஜ் பங்களாவுக்குள்ளே என்ன நடந்ததுன்னு பார்த்துட்டு வந்துடறேன் ”
” ஒ.கே மேடம் ” வளர்மதி தலையசைத்துக் கொண்டே எழுந்து கொண்டாள்.
------
ஆர்.எஸ்.புரம் பிரகாசம் ரோட்டின் மையத்தில் இருந்த அந்த பழைய ஜட்ஜ் பங்களாவின் பிரதான காம்பெளண்ட் கேட்டுக்கு முன்பாய் ஜீப் நின்று ஹார்ன் சத்தத்தை எழுப்ப அடுத்த சில விநாடிகளில் கேட் திறக்கப்பட்டு ஜீப் உள்ளே போயிற்று. அந்த பெரிய போர்டிகோவின் பரந்த பரப்பில் போய் நின்றது.
கமிஷனர் திரிபுரசுந்தரியும், அசிஸ்டெண்ட் கமிஷனர் சடகோபனும் ஜீப்பை விட்டு இறங்க செக்யூரிட்டிகள் ராயப்பனும், ரஹ்மானும் பவ்யத்தோடு சல்யூட் வைத்துவிட்டு சற்றுத்தள்ளி நின்றார்கள்.
திரிபுரசுந்தரி அவர்களை நெருங்கி நின்று உன்னிப்பாய் பார்த்தபடி கேட்டாள்.
” நேத்து ராத்திரி இந்த பங்களாவுக்குள்ளே யார் தங்கியிருந்தாங்க..?”
ராயப்பன் இரண்டடி முன்னால் வந்து நின்று தயக்கமாய் பேச ஆரம்பித்தான்.
” அது.... அது.... வந்து மேடம் ” ராயப்பன் மேற்க்கொண்டு பேசும் முன்பு அவனுடைய சட்டைப் பாக்கெட்டில் செல்போன் குரல் கொடுத்தது.
அவன் செல்போனை எடுக்கத் தயங்க திரிபுரசுந்தரி குரல் கொடுத்தாள்.
” செல்போனை எடுத்து யார்ன்னு பாரு. ஸ்பீக்கரை ஆன் பண்ணிட்டு பேசு........ ”
ராயப்பன் அவஸ்தையாய் எச்சில் விழுங்கிவிட்டு ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு ” ஹலோ” என்று குரல் கொடுத்தான் மெல்ல.
” என்ன ராயப்பா..... காலையிலிருந்து போனையே காணோம். பேசின அமெளண்ட் கைக்கு வந்துச்சா இல்லையா ? ”
(தொடரும்)
[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 ]