ஆல்....த..... பெஸ்ட்... பைவ் ஸ்டார் துரோகம் (இறுதி பாகம்)
-ராஜேஷ் குமார்
சென்னையின் வருமானத்துறை அலுவலகம். மாலை ஏழு மணி.
சீப் கமிஷனர் ஆஃப் இன்கம்டாக்ஸ் அருள் தன்னுடைய லேப்டாப்க்குள் முக்கியமான தகவல் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த விநாடி அறைக்கதவு மெலிதாய் தட்டப்படும் சத்தம் கேட்டது.
“எஸ்“ என்றார்.
நித்திலனும், சாதுர்யாவும் உள்ளே நுழைந்தார்கள். அருள் தான் பார்த்துக்கொண்டிருந்த லேப்டாப்பை மூடினார். சிரிப்போடு கேட்டார்.
“ என்ன.... கடந்த நாலைஞ்சு நாளாய் ரெண்டு பேரும் என்னோட கண்ணுல படலை...... ? “
நித்திலன் சொன்னான் “ஸாரி ஸார்.......இந்த வாரம் பூராவும் நகைக்கடை ரெய்ட்.... உஸ்மான் ரோட்ல இருக்கிற அத்தனை கடைகளையும் தடவிப்பார்க்க வேண்டியதாயிடுச்சு.... “
எந்த திமிங்கலமாவது மாட்டிச்சா...... ? “
“ஒரு அயிரை மீன் கூட மாட்டலை ஸார்...... எல்லா நகைக் கடைக்காரங்களும் நம்ம டிபார்ட்மெண்ட் நம்பற மாதிரி ஹோம்வொர்க் பண்ணி வெச்சிருக்காங்க..... யார் மேலேயும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியலை ஸார் “
“ஆடிட்டர்ஸ் எல்லாரும் இன்னிக்கு ரொம்பவும் புத்திசாலிகளாய் இருக்காங்க.... நம்ம டிபார்ட்மெண்ட்ல இருக்கிறவங்க இன்னமும் அந்த அளவுக்கு வளரலை“ என்று பேசிக்கொண்டே போனவர் சாதுர்யாவைப் பார்த்துட்டு நெற்றியைச் சுருக்கினார்.
“நீ ஏம்மா இவ்வளவு டல்லாய் இருக்கே .. ? “ நித்திலன் குறுக்கிட்டு சொன்னான். “ ஸார்.... சாதுர்யாவோட டல்னஸூக்கு காரணம் எனக்குத் தெரியும் ஸார்“
“ என்ன ? “
“ முகில்வண்ணன் கேஸ்ல எந்த ஒரு தடயமும் கிடைக்கலை. நாம எதுக்காக இந்த ஆக்டோபஸ் ஆபரேஷனை ஆரம்பிச்சமோ அது நிறைவேறலை என்கிற விஷயத்தில் சாதுர்யா நிறையவே அப்செட்.... கடந்த ஒரு வாரமாய் இதே உம்மணாமூஞ்சிதான் “
அருள் சாதுர்யாவிடம் திரும்பினார்.
“ ஏம்மா..... அப்படியா ? “
“ ஆமா ஸார்...... நம்ம ஐ.டி. டிபார்ட்மெண்ட், அமலாக்கப்பிரிவு இப்படி இத்தனை பேர் முயற்சி பண்ணியும் அந்த 500 கோடி ரூபாய் எங்கே இருக்குன்னு கண்டுபிடிக்க முடியலை. மணிமார்பன், செந்தமிழ் கொலைகளை பண்ணினது யார்ன்னும் தெரியலை. எல்லாத்துக்கும் மேலா காணாமல் போன முகில்வண்ணனும், சாமுவேலுவும் உ.யிரோடு இருக்காங்களா இல்லையாங்கிற விபரமும் தெரியலை. நாம இன்வெஸ்டிகேஷன்ல இறங்கின எந்த ஒரு கேஸூம் இவ்வளவு பெரிய தோல்வியைக் கொடுத்தது இல்லை...... இதையெல்லாம் நினைக்கிற ஒவ்வொரு விநாடியும் எனக்கு அவமானமாய் இருக்கு ஸார்.... நானும் நித்திலனும் முகில்வண்ணன் மறைச்சு வெச்சிருக்கிற அந்த 500 கோடி ரூபாயை கண்டுபிடிக்க கஜபதியின் உதவியோடு எவ்வளவு முயற்சி பண்ணினோம். ஆனா கிடைச்ச ரிசல்ட் ஒரு பெரிய சைபர் “
சாதுர்யா சொன்னதைக் கேட்டு அருள் மெல்லச் சிரித்தார்.
“ சாதுர்யா.... நீ நினைக்கிற மாதிரி இந்த முகில்வண்ணன் கேஸ் இன்னமும் முடியவில்லை. மறுபடியும் நீங்க ரெண்டு பேரும் இன்வெஸ்டிகேட் பண்ண வேண்டியிருக்கும் “
நித்திலனும், சாதுர்யாவும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.
“ என்ன ஸார் சொல்றீங்க ? “
அருள் அவருடைய செல்போனை எடுத்து ஆடியோ ரிக்கார்டிங் ஆப்ஷனுக்குப் போய் அதற்கு உயிர் கொடுத்துக்கொண்டே சொன்னார்.
“ இன்னிக்கு காலையில் நான் ஆபீஸூக்கு வந்ததுமே எனக்கு ஒரு போன்கால் வந்தது. அது ஒரு பப்ளிக் போன் பூத் நெம்பர். யாரோ ஒருத்தர் பேசினார்.
எனக்கும் அந்த நபர்க்கும் நடந்த கான்வர்சேஷனை அப்படியே ரிக்கார்ட் பண்ணிட்டேன். அதை நீங்களும் கேளுங்க“
செல்போனை ஆன் செய்தார் அருள்.
சில விநாடிகளுக்குப் பிறகு குரல் கேட்டது. ஒரு கரகரப்பான ஆண் குரல். “ ஹலோ “
“ எஸ் “
“ ஹலோ அது ஐ.டி. டிபார்ட்மெண்ட் ..? “
“ எஸ் “
“ நான் சீஃப் கமிஷனர்கிட்டே ரெண்டு நிமிஷம் பேசணும்“
“ என்ன விஷயம்..... நீங்க யாரு ? “
“ அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம்..... “
“ நான் சீஃப் கமிஷனர்தான் பேசறேன்“
மறுமுனையில் குரல் சற்றே தயங்கி பின் “ ஸார்..... முகில்வண்ணன் கேஸ்ல மூளை குழம்பிப் போய் இருப்பீங்கன்னு நினைக்கிறேன். நான் இப்ப சொல்லப் போகிற விஷயம் உண்மையா பொய்யான்னு எனக்கே தெரியாது. இருந்தாலும் எனக்குத் தெரிஞ்சதைச் சொல்ல வேண்டியது என்னோட கடமை. சொல்லட்டுமா...... வேண்டாமா? “
“ சொல்லுங்க “
“ முகில்வண்ணன் அந்த 500 கோடி ரூபாயை மறைச்சு வெச்ச இடம் சென்னையில் இருக்கிற பண்ணை வீடோ, செந்தட்டி கிராமத்தில் இருக்கிற வீடோ கிடையாது ? “
“ அப்புறம் ? “
“ சமாதியில் “
“ சமாதியா ? “
“ ஆமா.... செந்தட்டி கிராமத்தில் முகில்வண்ணனோட அம்மா, அப்பா சமாதி இருக்கு. அந்த சமாதிகளில் அவர் மணி மண்டபமாய் கட்டியிருப்பார். அவ்வளவு பெரிய மணி மண்டபத்தை அங்கே கட்ட வேண்டிய அவசியம் என்ன? கொஞ்சம் யோசனை பண்ணிப்பாருங்க...பணம் பாதாளம் வரைக்கும் பாயும்ன்னு சும்மாவா சொன்னாங்க......ஏதோ எம்மனசுக்குப்பட்டதைச் சொல்லிட்டேன். நடவடிக்கை எடுக்கறதும் எடுக்காததும் உங்க விருப்பம்“
ஆடியோ ரிக்கார்டிங் உரையாடல் முடிந்து போயிருக்க நித்திலனும், சாதுர்யாவும் திகைத்த விழிகளோடு நிமிர்ந்தார்கள்.
“ என்ன ஸார்..... இது புது பூதம் ? “
“ பூதம்தான்....... என்ன பண்ணலாம் சொல்லுங்க “
“ பேசினது யார்ன்னு தெரியலையே ? “
“ அவன் யாராகவோ இருந்துட்டுப் போகட்டும். அவன் சொன்னது ஏன் உண்மையாய் இருக்கக்கூடாது ? “
“ ஸார்....... “ என்றாள் சாதுர்யா.
“ என்ன சொல்லும்மா ? “
“ நானும் நித்திலனும் மறுபடியும் இந்த முகில்வண்ணன் கேஸை கையில் எடுக்கிறோம். உண்மைகளை வெளியே கொண்டு வரப் போறோம்“
“ஆல்....த..... பெஸ்ட்.... “ என்று எழுந்து நின்று கை கொடுத்தார் அருள்
(முற்றும்)
[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]