இனி இன்டர்ஸ்டெல்லார்... கொஞ்சம் அறிவியலுடன்...
சோளக் காடுகளுக்கு நடுவே ஆரம்பிக்கிறது படம். அமெரிக்காவின் ஒரு பெரும் சோளக் காட்டுக்கு மேல் பறக்கும் இந்தியாவின் ஆளில்லா உளவு விமானம்... என்று தொடங்குகிறது கதை....
பெட்ரோலியம் உள்பட இயற்கை வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தி முடித்துவிட்ட பூமி. மீண்டும் விவசாயத்தை சார்ந்து வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. அதிலும் மற்ற பயிர்கள் எல்லாம் ஒவ்வொன்றாக அழிந்துவிட, மிச்சம் இருப்பது சோளம் மட்டும். இதுவும் கூட அழிய ஆரம்பிக்கிறது. விரைவில் உணவு இல்லாமல் பட்டினியால் அழியப் போகும் பூமி.
இந்த நிலையில் சனி கிரகத்துக்கு அருகே ஈர்ப்பு விசையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்படுகிறது (Gravitational anamoly). இதற்குக் காரணம், அங்கே உருவாகும் வார்ம்ஹோல் (Wormhole).
மாபெரும் அண்டத்தின் இரு பகுதிகளை இணைக்கும் ஒரு குறுக்கு சந்து தான் வார்ம்ஹோல். இந்த தியரியைச் சொன்னவர்கள் ஐன்ஸ்டைனும் நேதன் ரோசன் என்பவரும். இதனால் இதற்கு Einstein-Rosen Bridge என்ற பெயரும் உண்டு.
இது போன்ற குறுக்கு வழிகள் சாத்தியம் என்கின்றனர் இயற்பியல் உலகின் வாழும் மாபெரும் மூளைகளான ஸ்டீபன் ஹாங்கிங்கும், கிப் த்ரோனும்.
இதில் கிப் த்ரோன் இன்டர்ஸ்டெல்லார் படத்தின் இணைத் தயாரிப்பாளராகவும் சேர்ந்ததோடு, படத்தின் கதையை உருவாக்குவதில் முக்கிய பங்கும் வகித்துள்ளார்.
மீண்டும் படத்துக்கு வருவோம்.. அழியப் போகும் பூமியில் இருந்து மனித இனத்தைக் காக்க இருக்கும் ஒரே வழி மனிதன் வாழத் தக்க இன்னொரு பூமியை கண்டுபிடிப்பதே. அதைக் கண்டுபிடிக்கும் வேலையில் இறங்குகிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா. சோத்துக்கே வழியில்லாத பூமியில் நாஸாவின் பெரிய ஆராச்சிகளுக்கு எல்லாம் நிதி நிறுத்தப்பட்டு புதிய பூமி ஏதாவது உள்ளதா என்ற ஒரே ஒரு ஆராய்ச்சியை மட்டும் செய்யும் ஒரு சிறிய அமைப்பாக சுருங்கிக் கிடக்கிறது நாஸா.
இந்தப் பிரிவின் தலைவரான பேராசிரியர் பிராண்ட் மனிதன் வாழக்கத்த பூமிகள் இருக்கிறதா என்பதை கண்டறிய Lazarus missions என்ற பெயரில் பல்வேறு விண்கலங்களை மனிதர்களோடு அனுப்புகிறார். இவர்களில் Miller, Edmunds, Mann ஆகிய விஞ்ஞானிகளோடு சென்ற விண்கலங்கள் Gargantua என்ற பிளாக் ஹோலுக்கு (block hole) அருகே மனிதன் வசிக்கத்தக்க 3 பூமிகள் இருப்பதை கண்டுபிடிக்கின்றன. ஆனால், இந்த 3 பேரும் திரும்பி வரும் வசதிகளோடு செல்லவில்லை. ஒன்-வே டிராபிக் தான். மனித இனத்தைக் காக்க இவர்கள் தங்களை தியாகம் செய்து பூமிகளை கண்டுபிடிக்கச் செல்கின்றனர். அவர்களிடம் இருந்து வரும் அரைகுறைத் தகவல்கள் 3 பூமிகளிலும் மனிதர்கள் வசிக்கலாம் என்கின்றன.
இந் நிலையில் இந்த பூமிகளுக்குச் சென்று திரும்பி வரும் வசதி கொண்ட Endurance என்ற பெரும் விண்கலத்தை நாஸா வெற்றிகரமாகத் தயாரிக்கிறது.