ஒரு கனவும் இந்தக் கண்ணீரும்- பாகம் 2
ஒபாமாவின் தந்தை ஹூசேன் ஒபாமா கென்யாவைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் படிப்பதற்காக ஹவாய் தீவுக்கு வந்தவர். பின்னர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றார். ஹவாயில் படித்தபோது அங்கு கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த வெள்ளையினப் பெண்ணான ஆன் டுன்ஹாமை சந்திக்க, இருவருக்கும் காதல் மலர, 1961ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.
ஒபாமா பிறந்ததும் ஹவாய் தீவில் தான். அவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது பெற்றோர் பிரிந்துவிட்டனர். தந்தை கென்யாவுக்கே திரும்பிவிட தாயின் அரவணைப்பில் தான் வளர்ந்தார் ஒபாமா.
பின்னர் டு்ன்ஹாம் லோலோ சோயிடரோ என்பவரை மணக்க , குடும்பம் இந்தோனேஷியாவுக்கு இடம் பெயர்ந்தது. 10 வயது வரை ஒபாமா வளர்ந்தது ஜகார்த்தாவில் தான். பள்ளிப் படிப்பை அங்கே ஆரம்பித்த ஓபாமா, பின்னர் அமெரிக்கா திரும்பி தாய் வழி பாட்டி, தாத்தாவுடன் தான் வளர்ந்தார்.
லாஸ் ஏஞ்செலஸ், நியூயார்க் கல்லூரிகளில் பொலிடிகல் சயின்ஸ் படித்த ஒபாமாவின் ஆர்வம் சர்வதேச உறவுகளில் இருந்தது.
இதையடுத்து சிகாகோவில் வளரும் சமூகங்கள் திட்டம் என்ற கருப்பினரின் வளர்ச்சிக்கு உதவும் கிருஸ்துவ அமைப்பின் திட்டத்தில் பணிக்குச் சேர்ந்தார். அதுவரை அரசியல் ஆர்வம் ஏதும் இல்லாமல் இருந்த ஒபாமாவின் வாழ்க்கையை மாற்றியது இந்தப் பணி தான்.
வெள்ளையின குடும்பத்தில் வளர்ந்த ஒபாமாவுக்கு கருப்பின மக்கள் படும்பாட்டை நேரடியாக அறியும் வாய்ப்பு கிடைத்தது.
இதைத் தொடர்ந்து 1988ம் ஆண்டில் சட்டம் படிக்க ஹாவர்ட் சட்டப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு பல்கலைக்கழக ஜர்னவலில் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அவரது அறிவுப்பூர்வமான எழுத்துக்கள் அனைவரையும் கவர, அந்த பத்திரிக்கையை தலைமையேற்கும் வாய்ப்பும் வந்தது.
அதில் அவர் எழுதிய கட்டுரைகள் பல்வேறு அமெரிக்க பத்திரிகளைகளிலும் வெளியாயின. தனது புதிய சிந்தனைகளால் எழுத்துக்களால் பலரின் கவனத்தையும் ஈர்த்தார் ஒபாமா.
சட்டப் படிப்பை முடித்துவிட்டு மீண்டும் சிகோகோவுக்குத் திரும்பிய அவர் 'இன உறவுகள்' குறித்த புத்தகத்தை எழுத ஆரம்பித்தார். இதையறிந்த சிகாகோ சட்டப் பள்ளி, அவருக்கு தேவையான நிதி உதவியையும் வேலையும் தர முன் வந்தது.
வேலையோடு புத்தகம் எழுதுவது சிரமமாக இருக்கவே, எழுத்துப் பணிக்கு முழு நேரத்தையும் ஒதுக்குவதற்காக, வேலையை உதறிவிட்டு இந்தோனேஷியாவின் பாலி தீவுக்கு தனது மனைவி மிசேலுடன் இடம் பெயர்ந்தார் ஒபாமா.
1995ம் ஆண்டில் என் தந்தையின் கனவுகள் என்ற தலைப்பில் அவர் எழுதிய அந்தப் புத்தகம் வெளியானது.
இதையடுத்து இலினாய்ஸ் திரும்பிய ஒபாமா அந்த மாகாணத்தில் புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் திட்டத்துக்கு தலைமை தாங்கினார் ஒபாமா. அங்கு ஓட்டு போடுவதைப் பற்றி கொஞ்சமும் கவலையில்லாமல் இருந்த 1.5 லட்சம் கருப்பினத்தினரை வாக்காளர் பட்டியல் சேர வைத்துக் காட்டினார்.
அப்போது மக்களோடு மிக நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைக்கவே அதை மிக அழகாகப் பயன்படுத்திக் கொண்டார்.
சிகாகோ பல்கலைக்கழகத்தில் அரசியல் சட்ட விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டே சிவில் உரிமைகளுக்காகப் போராடும் சட்ட அலுவலகத்திலும் தன்னை இணைத்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நீதிமன்றங்களின் படியேற ஆரம்பித்தார். சிகோகோ மக்களின் செல்லப் பிள்ளையானார்.
இந் நிலையில் வந்தது திருப்பம். 1996ம் ஆண்டில் இலினாய்ஸ் செனட்டுக்கு தேர்வானார். ஏழைகளுக்கு ஆதரவான சட்டங்களை அமலாக்குவதில் தீவிரம் காட்டினார்.
ஏழை மக்களின் வரியைக் குறைக்கவும், அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை கிடைக்கவும், குழந்தைகள் நலத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கவும் சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்தி அந்த சட்டங்கள் நிறைவேறவும் காரணமாக இருந்தார்.
ஒபாமாவின் இந்த நேர்மை, ஏழை-எளியவர்கள் மீதான அவரது அன்பும் வெள்ளையின மக்களையும் அவர்பால் ஈர்த்தது. இதையடுத்து மீண்டும் மீண்டும் இரண்டு முறை இலினாய்ஸ் மாகாண செனட்டுக்கு தேர்வானார்.
2005ம் ஆண்டு அமெரிக்க நாட்டு செனட்டுக்கே தேர்வானார். அடுத்த இரண்டே ஆண்டுகளி்ல் அவரை அதிபர் தேர்தலில் முன் நிறுத்தும் அளவுக்கு இருந்தன அவரது செயல்பாடுகள்....
(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)