வட இந்தியாவை நடுநடுங்க வைக்கும் சைபீரியா!
-ஏ.கே.கான்
ரஷ்யாவுல மழை பெய்தா எனக்கென்ன.. வெயில் அடிச்சா எனக்கென்ன.. என்று நினைப்பவரா நீங்கள்.. அப்ப நீங்க இந்தக் கட்டுரையை படித்தே ஆக வேண்டும்.
சென்னை உள்ளிட்ட தென் மாநிலப் பகுதிகளில் வசிக்கும் நமக்கு நவம்பர், டிசம்பர் மாதம் தான் கொஞ்சம் நிம்மதியான காலம். வெயில் கம்மியாக இருக்கும், ஊமை வெயிலாக அடிக்கும். இதற்கே நம்மவர்களில் சிலர் ''ஊதக் காத்து வீசுது'' என்று கூறிக் கொண்டு 'ராம்கி ஸ்டைல்' மப்ளர் எல்லாம் கட்டிக் கொண்டு கலக்குவதும் வழக்கம்.
டெல்லியை வாட்டி எடுக்கும் குளிர்..
ஆனால், வட மாநிலங்களில் அப்படியில்லை. வெயிலுக்கு வெயில், குளிருக்கு குளிர் என அங்கே எல்லாமே எக்ஸ்ட்ரீம் தான். இந்த முறை குளிர் வழக்கத்தை விட மிக அதிகமாகவே உள்ளது. ஏராளமானோர் குளிரால் உயிரிழந்திருக்கின்றனர். டெல்லியில் சாலைகளில் வசிப்போர் தான் மிக மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீடு வாசல் இல்லாத இவர்களுக்கு இரவு நேரத்தில் மட்டும் தங்கிக் கொள்ள முகாம்களைத் திறந்துவிட்டுள்ளது டெல்லி அரசு. ஆனால், லட்சக்கணக்கானோர் வீடுகள் இல்லாத நிலையில், வெறும் 7,500 பேருக்கு மட்டுமே இந்த இரவு நேர தங்கும் முகாமில் இடம் இருக்கிறது. இங்கு இரண்டு கம்பளிகள் தரப்படுகின்றன. விரிக்க ஒன்று, போர்த்திக் கொள்ள ஒன்று. இதில் இடம் கிடைப்பவர்கள் மட்டுமே இயற்கையின் கடும் தாக்கத்திலிருந்து தப்புகின்றனர்.
சரக்கு விற்பனை படுஜோர்...
கடும் குளிர் காரணமாக வட மாநிலங்களில் மதுபான விற்பனை கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளது. கடந்த ஒரே மாதத்தில் ஒயின், விஸ்கி, ரம் வகைகளின் விற்பனை 40 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறதாம்.
அதே போல குளிர்கால உடைகள், வாட்டர் ஹீட்டர்கள்.. இத்யாதி ஆகியவற்றின் விற்பனையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தப்பியது கோதுமை..
இதற்கிடையே இந்த கடும் குளிரால் பயிர்கள் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் வட இந்திய விவசாயிகள். குறிப்பாக காய்கறிகள், பயறுகள், எண்ணெய் வித்துக்களை பயிரிட்டுள்ளோருக்கு பாதிப்புகள் ஆரம்பித்துவிட்டன. கடும் குளிரால் காய்கறிகள் உற்பத்தி குறைந்துவிட்டதாம், குறிப்பாக பஞ்சாபிலும் ராஜஸ்தானிலும்.
ஆனால், அதிர்ஷ்டவசமாக கடும் குளிரைத் தாங்கும் கோதுமைப் பயிர் தப்பிவிட்டது. வெப்பநிலை 1 டிகிரிக்கும் கீழே போனாலும் கூட கோதுமைப் பயிர் தாங்கிவிடும் என்கின்றார் கர்னாலில் உள்ள கோதுமை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனரான சர்மா.
ரஷ்யா, சைபீரியான்னு ஆரம்பிச்சியே..
சரி. ஆனால், கட்டுரையை ரஷ்யா.. மழை என்று ஆரம்பித்தாயே அந்த பாயிண்டுக்கு வா என்று நீங்கள் கூப்பிடலாம். இதோ வந்துட்டேன்.
வட இந்தியாவில் வழக்கத்தை விடவும் இந்த ஆண்டு கடும் குளிர் நிலவக் காரணம் சைபீரியாவில் இருந்து வீசும் குளிர் காற்று தான் என்கிறார் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் டைரக்டர் ஜெனரல் லட்சுமண் சிங் ரத்தோர்.
ரஷ்யாவின் சைபீரியப் பகுதியில் உருவாகியுள்ள அதிக காற்றழுத்த நிலை காரணமாக அங்கிருந்து கடும் குளிர் காற்று தென் பகுதியை நோக்கி வீசி வருகிறது.
மங்கோலியா, சீனா, இந்தியாவில் கடும் குளிர்..
இதன் காரணமாக மங்கோலியாவிலும் சீனாவிலும் கடும் குளிர் நிலை உருவாகியுள்ளது. சீனாவில் ஏராளமானோரை பலி வாங்கியுள்ளது இந்தக் குளிர். அதே போல இந்தியாவில் மத்தியப் பிரதேசம் வரை இந்தக் குளிர் காற்றின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் தான் வட இந்தியாவே குளிரில் நடுநடுங்கிக் கொண்டுள்ளது என்கின்றனர் வானிலை ஆய்வு மையத்தினர்.
சைபீரியாவில் நிலைமை மேலும் மோசமாகிக் கொண்டிருப்பதால், இன்று முதல் இந்தியாவிலும் குளிரின் அளவும் இன்னும் அதிகமாகும் என்கின்றனர்.