பெங்களூரில் குவிந்த சர்வதேச போர் விமானங்கள்.. சாகஸங்கள்!
-ஏ.கே.கான்
போர் விமானங்களின் சாகஸ நிகழ்ச்சிகளோடு இந்தியாவின் மாபெரும் விமானக் கண்காட்சி பெங்களூரில் இன்று துவங்கியுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி பயணிகள் மற்றும் போர் விமான தயாரிப்பு நிறுவனங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள், ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள், ஆள் இல்லா உளவு விமானங்கள் தயாரிப்பு நிறுவனங்களும் இதில் பங்கேற்றுள்ளன.
வரும் 10ம் தேதி வரை நடக்கும் இந்தக் கண்காட்சியில் 700 மொத்தம் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
ரஷ்யாவை முந்தும் இஸ்ரேல்...
இதில் போயிங், லாக்ஹீட் மார்ட்டின், நார்த்ராப் க்ரும்மன், ஜெனரல் டைனமிக்ஸ், பெல் ஹெலிகாப்டர் ஆகியவை அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களாகும்.
அதே போல ரஷ்யாவின் சுகோய் போர் விமான தயாரிப்பு நிறுவனம், மிக் போர் விமான நிறுவனம், பிரான்சின் ரெய்தியான், ரபேல் ஆகியவையும் இதில் அடங்கும்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தக் கண்காட்சியில் மிக அதிக அளவில் இடம் பெற்றிருப்பது இஸ்ரேல் நாட்டு ராணுவ, விமானத் தயாரிப்பு நிறுவனங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 3வது இடத்தில் தான் ரஷ்யா உள்ளது. இந்தியாவுக்கு ஆயுத ஏற்றுமதி செய்வதில் ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தை இஸ்ரேல் பிடித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா கொண்டு வந்துள்ள விமானங்கள்:
இந்தக் கண்காட்சியில் அனைவரையும் கவர்ந்துள்ளது அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்துள்ள சி-17 குளோப்மாஸ்டர் விமானமாகும். இது பெருமளவில் படையினரை ஏற்றிச் செல்ல உதவும் கார்கோ விமானமாகும். ஆப்கானிஸ்தான் போரில் இந்த ரக விமானங்களை மிக அதிகளவில் பயன்படுத்தி வருகிறது அமெரிக்கா.
இந்தியாவுக்குக் குறி:
இந்தியா தனது ஆயுதங்களில் 70 சதவீதத்தை ரஷ்யாவிடம் இருந்து தான் வாங்கி வருகிறது. ஆனால், நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ஆயுதங்கள் பக்கமாக இந்தியா திரும்பி வருகிறது. இதனால் அமெரிக்காவிடம் இருந்து விமானங்களையும், இஸ்ரேலிடமிருந்து நவீன கருவிகளையும் வாங்க ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் தான் இந்த விற்பனையை மேலும் பல மடங்காக்க தனது மிகச் சிறந்த போர் விமானங்களை அமெரிக்கா இந்தக் கண்காட்சிக்குக் கொண்டு வந்துள்ளது. இதை இந்தியாவுக்கு விற்கவும் தயாராக உள்ளது.
200 மில்லியனில் இருந்து 14 பில்லியன்..
2001ம் ஆண்டு அமெரிக்காவிடம் வெறும் ரூ. 100 கோடிக்கு ஆயுதங்களை இறக்குமதி செய்த இந்தியா கடந்த ஆண்டு மட்டும் ரூ. 70,000 கோடிக்கு ஆயுதங்களை, விமானங்களை வாங்கியுள்ளது. இதனால் அமெரிக்காவின் ஆயுத தயாரிப்பு, போர் விமானத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரிய அளவில் ஆர்டர் கிடைத்தது மட்டுமல்லாமல், அந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளும் பல மடங்காகியுள்ளன.
ரஷ்யாவை நாக் அவுட் செய்த அமெரிக்கா:
சமீபத்தில் போயிங் நிறுவனத்திடம் இருந்து 22 அபாச்சி AH-64D ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய விமானப் படை ஒப்பந்தம் செய்தது. மொத்தம் 22 ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு ரூ. 7,500 கோடிக்கு விற்கவுள்ளது போயிங். இதை முதலில் ரஷ்யாவிடமிருந்து வாங்கவே இந்தியா திட்டமிட்டிருந்தது. ஆனால், ரஷ்யாவின் Mi-28N Night Hunter ஹெலிகாப்டரை விட போயிங் ஹெலிகாப்டர்கள் சிறந்தவை என்பதை அதை இந்தியா வாங்குகிறது.
விமானங்களை தாக்கும் ஏவுகணைகள்:
இதோடு போர் விமானங்களைத் தாக்கும் Stinger anti-aircraft missiles ஏவுகணைகளும், இரவு, பகல் என எல்லா நேரமும் டாங்கிகளைத் தேடிப் பிடித்து தாக்க உதவும் தாக்கவும் Hellfire anti-tank ஏவுகணைகளையும் போயிங்கிடம் இருந்து இந்தியா வாங்கவுள்ளது.
இந்த ஸ்டிங்கர் ஏவுகணைகளை தோளிலேயே சுமக்கக் கூடிய ராக்கெட் லாஞ்சர் மூலம் ஏவ முடியும். இதை வைத்து விமானங்கள், ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்த முடியும். இந்த ஏவுகணைத் தான் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனை எதிர்த்துப் போட்டியிட்ட போராளிகளுக்கு அமெரிக்கா 1980களில் வழங்கியது. இவை தான் சோவியத் யூனியனை தோற்கடிக்க முக்கிய பங்கு வகித்தன.
கடலோர கண்காணிப்புக்கு உதவும் Super Hercules C-130J:
மேலும் கடலோரப் பகுதி கண்காணிப்புக்கும், தாக்குதலுக்கும் உதவும் Super Hercules C-130J விமானங்கள் ஆறையும் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்திடம் இந்தியா வாங்கியது. இதே நிறுவனம் தான் நமக்கு USS Trenton என்ற போர்க் கப்பலையும் வழங்கியது. இதை தான் INS Jalashwa என்ற பெயரில் இந்திய கடற்படை இயக்கிக் கொண்டுள்ளது. அதே போல நீண்ட தூரம் பயணிக்கும் கடலோரக் கண்காணிப்பு விமானமான P-8I ரக விமானங்களையும் இந்தியா வாங்க ரூ. 11,000 கோடிக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இப்போது புரிகிறதா ஏன் இந்த விமானக் கண்காட்சியில் அமெரிக்க நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்கின்றன என்று!
ரஷ்யா-இந்தியாவின் கூட்டுத் தயாரிப்பான FGFA போர் விமானம்:
இந்தக் கண்காட்சியில் மிக ஆர்வமாக எல்லா நாடுகளாலும் பார்க்கப்படவுள்ள ஒரு விமானம் fifth-generation fighter aircraft (FGFA) எனப்படும் போர் விமானம் தான். இதை ரஷ்யாவின் போர் விமானத் தயாரிப்பு நிறுவனமான Rosoboronexport, அதே நாட்டின் சுகோய் போர் விமான நிறுவனம் மற்றும் இந்தியாவின் எச்ஏஎல் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன. அடுத்த தலைமுறை விமானமான இது உலகில் இதுவரை தயாரிக்கப்பட்ட போர் விமானங்களை விட மிக நவீனமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இது அடுத்த ஆண்டு தயாராக உள்ளது என்றாலும் அதன் prototype இந்தக் கண்காட்சியில் இடம் பெறவுள்ளது.
ரஷ்யா என்ன கொண்டு வந்திருக்கு?:
இந்தக் கண்காட்சியில் ரஷ்யாவின் மிக், சுகோய், Rosoboronexport உள்பட ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில் போர் பயிற்சி விமானமான Yakovlev-130, நடுவானில் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப உதவும் Ilyushin டேங்கர் விமானங்கள், தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு உதவும் Be-200 ஆகிய விமானங்களை ரஷ்யா இந்தக் கண்காட்சியில் இடம் பெறச் செய்துள்ளது.
ஏவுகணை எதிர்ப்பு எவுகணைகள்:
இவை ஒரு பக்கம் இருந்தாலும் அனைவரையும் மிகவும் ஈர்க்கப் போவது ரஷ்யாவின் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் தான். எதிரி நாட்டு ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்துத் தாக்க உதவும் Antey-2500, Tor-M2E, Buk-M2E and Pantsyr-S-1 ஆகிய ஏவுகணைகளை ரஷ்யா கொண்டு வந்துள்ளது. இதில் முக்கியமான விசேஷம், இதை இந்தியாவுக்கு விற்கவும் ரஷ்யா தயாராக உள்ளது தான்.
முதல் முறையாக சீனா..
இந்தியாவின் விமானக் கண்காட்சியில் இந்த ஆண்டு தான் சீனா முதன்முதலாக பங்கேற்கவுள்ளது. இதில் பங்கேற்க சீனா பல ஆண்டுகளாக ஆர்வம் காட்டினாலும் இந்தியா அனுமதி தரவில்லை. இந்த ஆண்டு சீன பாதுகாப்புக் குழு கண்காட்சிக்கு வந்தாலும், அவர்களது தயாரிப்புகள் ஏதும் கண்காட்சியில் இடம் பெறாது என்றெ தெரிகிறது.
செக் குடியரசும் உண்டு..
இந்தக் கண்காட்சியில் கடந்த பல ஆண்டுகளாகவே கலந்து கொண்டுள்ள முக்கிய நாடு செக் குடியரசாகும். இந்த நாட்டின் போர் பயிற்சி விமானங்கள் பேர் போனவை. அதை விட முக்கியம், இந்த நாட்டில் தயாராகும் துப்பாக்கிகளைத் தான் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் ராணுவங்களும் கமாண்டோ படைகளும் பயன்படுத்துகின்றன. மேலும் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து நாட்டு போர் விமான, ஆயுத தயாரிப்பு நிறுவனங்களும் காண்ட்ராக்ட்கள் கனவுகளோடு இதில் பங்கேற்று தங்களது தயாரிப்புகளை காட்சிக்கு வைத்துள்ளன.