கோபால் எப்படிப்பா இருக்க?: டாலர் ரேட் ஜாஸ்தி ஆயிருச்சாமே.. அப்புறம் ஏன்டா காசு குறையுது?!
-ஏ.கே.கான்
எனக்கே என் பொண்டாட்டிக்கிட்ட மதிப்பில்ல, அப்புறம் ரூபாவுக்கு மதிப்பு இருந்தா எனக்கென்ன இல்லாட்டி என்ன என்று கோபம் வந்தாலும், இதை மேற்கொண்டு நீங்கள் தொடர்ந்து படிப்பதே நல்லது.....
ரூபாயின் மதிப்பு கடந்த மே மாதத்தில் இருந்து 13 சதவீதம் சரிந்துவிட்டது. அதாவது, ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61 ஆகிவிட்டது. இது தான் எல்லோரும் டெய்லி போடும் நியூஸ்.
ஆனால், ரூபாய் மதிப்பு சரிவதால் என்னென்ன பிரச்சனைகள் என்ற கொஞ்சம் மண்டையைக் குழப்பும், சிக்கலான பொருளாதார விஷங்களை, ஈசியாக, பாயிண்ட் பை பாயிண்டாக பார்ப்போமே...
1. நடப்புக் கணக்கு பற்றாக்குறை (Current account deficit):
இது நாட்டின் ஏற்றுமதி-இறக்குமதி சம்பந்தப்பட்ட விஷயம். அதாவது நம் நாட்டிடம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பு (டாலர் தான்), நமக்குத் தேவைப்படும் பெட்ரோல்-கேஸ் உள்ளிட்ட இறக்குமதிகள் ஆகியவை இதில் சம்பந்தப்படும். ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டதால் இறக்குமதிக்காக நம் நாடு அதிகமாக செலவு செய்ய வேண்டிய நிலை. இதனால் மத்திய அரசின் அன்றாட 'பாக்கெட் மணி' கணக்கில் பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டுள்ளது.
2. அன்னிய முதலீடுகளைக் காணவில்லை!:
இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தபோது, இங்கே காசைப் போட்டால், பல மடங்கு எடுக்கலாம் என்று ஓடி வந்து நமது பங்குச் சந்தைகளிலும் அரசின் பத்திரங்களிலும் காசைப் போட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ரூபாயின் மதிப்பைப் பார்த்து பயந்து, போட்ட காசை திரும்ப எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்துள்ளனர். இதே காசை டாலரில் போட்டால் (அமெரிக்க பங்குகளில்) இன்னும் அள்ளலாமே என்னதே காரணம். இதனால் பங்குச் சந்தைகளில் 'டாஸ்மாக்' தள்ளாட்டம். இந்த முதலீடுகளை நம்பி தொழிலை விரிவாக்க நினைத்திருந்த தனியார் நிறுவனங்கள், இந்தக் காசை எடுத்து ரோடு போடலாம், பாலம் கட்டலாம் என நினைத்திருந்த மத்திய அரசு ஆகியவை திட்டங்களை ஒத்தி வைக்க வேண்டிய நிலை. இதன் நேரடி பாதிப்பு, வேலைவாய்ப்புகள் குறையும்.
3. சட்டி சுட்டதடா...
ஏற்கனவே ஏகப்பட்ட அளவில் கடன் வாங்கி திட்டங்களை விரிவாக்கிவிட்ட நிறுவனங்கள், மேலும் நிதியை எதிர்பார்த்துக் காத்திருக்க, சட்டி சுட்டதடா.. கை விட்டதடா நிலை உருவாகியுள்ளது. இதனால் பாதிப்பு... இருக்கும் வேலைவாய்ப்புக்களும் ஆபத்து என்பது தான்.
4. அதை ஏன் வாங்கினே...?
போன மாதம் வரை 100 ரூபாய்க்கு இறக்குமதி செய்த பொருளின் இன்றைய இறக்குமதி விலை ரூ. 120 ஆகிவிட்டது. குறிப்பாக பெட்ரோல், டீசலுக்காக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஏகப்பட்ட டாலர்களை இந்தியா செலவழிக்க வேண்டிய நிலைமை. இதனால் பெட்ரோல்-டீசல் விலை இனி அடிக்கடி உயரும். இதன் நேரடி பாதிப்பு, விலைவாசி உயரும், பாக்கெட் கிழியும்.
5. டாலர் இல்லாட்டி, டாலர் இல்லாத செயின் போட்டுக்கோ!:
இப்போது மீண்டும் மூன்றாவது பாயிண்டை ஒட்டி ஒரு கருத்து. அன்னிய முதலீடுகள் (டாலர்கள்) ஒரு பக்கம் குறைந்து கொண்டே இருக்க, அதே நேரத்தில் ரூபாயின் மதிப்பு சரிந்ததால், இறக்குமதிக்காக நமக்குத் தேவைப்படும் டாலரின் அளவு அதிகமாகிக் கொண்டே உள்ளது. நிலைமை இப்படியே போனால், கையில் அன்னிய செலாவணி கையிருப்பு மிகவும் குறைந்து டாலருக்கு அலைய வேண்டிய நிலை வரும்.
டாலர் இல்லாட்டி, டாலர் இல்லாத செயின் போட்டுக்கோ என்பவரா நீங்கள்... உங்களுக்கு ஒரு 'குட்டி' நினைவூட்டல்...
வெறும் 44 எம்பிக்களை மட்டுமே வைத்துக் கொண்டு சந்திரசேகர் என்ற ஒருவர் ராஜிவ் காந்தியின் புண்ணியத்தால் நமது பிரதமராக இருந்தபோது நம்மிடம் பெட்ரோல் வாங்க டாலர் இல்லை. இதனால் ரிசர்வ் வங்கி தன்னிடம் இருந்த தங்கத்தை விமானங்களில் சுவிட்சர்லாந்துக்கு பார்சல் அனுப்பி, அடகு வைத்து டாலர்களை வாங்கிக் கொண்டு வந்து, பெட்ரோலை இறக்குமதி செய்தது. இப்போ தெரியுதா அன்னிய முதலீடுகளின் முக்கியத்துவம்.
6. வெளிநாட்டுக்குப் போறீங்களா?:
யாராவது வெளிநாட்டுக்கு சொந்த காசில் போக இது தான் இருப்பதிலேயே மிக மட்டமான காலம். கையில் 10,000 டாலர் கொண்டு போய் ஹாயா இருக்கப் போறேன் என்று பழைய கணக்கில் போக முடியாது. நீங்கள் அதே 'பழைய' 10,000 டாலரைப் பெற 13 சதவீதம் அதிகம் ரூபாயைத் தந்தாக வேண்டும். ''ரூபா மதிப்பு சரிஞ்சு போச்சுப்பா''.. என்று ஜனகராஜ் மாதிரி ஒரு கண்ணை பாதி மூடி (திறந்து?) நமக்கு நாமே புலம்பிக் கொள்ள வேண்டியது தான்.
7. வட்டி குறையாது...
வழக்கமாக பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உயரும்போது சந்தையில் அதிக பணத்தை புழங்க வைக்க ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகளின் வட்டி விகிதத்தைக் குறைக்கும், சிஆர்ஆர், ரெபோ ரேட்களை (இதுக்கு பல முறை விளக்கம் சொல்லியாச்சு பாஸ்) குறைக்கும். ஆனால், ரூபாயின் மதிப்பு தேய்ந்து கொண்டிருக்கையில் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கியே நினைத்தாலும் குறைக்க முடியாது. அந்த அளவுக்கு சிக்கல்கள்.. இதனால் வீட்டுக் கடன், பர்சனல் லோனுக்கான வட்டிகள் இப்போதைக்கு குறையாது.
இதெல்லாம் ரூபாயின் மதிப்பு சரிவதால் உருவாகியுள்ள பிரச்சனைகள்.
உங்கள் மகன் வெளிநாட்டில் இருக்கிறாரா..:
ஆனால், உங்கள் மகன் வெளிநாட்டில் இருக்கிறாரா.. அப்போ நீங்கள் கொஞ்சம் சந்தோஷப்படலாம்.
இந்த மாதம் உங்கள் மகனிடமிருந்து உங்களுக்கு 10% அதிகமாகவே பணம் வரலாம். காரணம், அவர் இந்தியாவுக்கு அனுப்பும் டாலர் இங்கே ரூபாயாக மாறும்போது 10 சதவீதம் எக்ஸ்ட்ராவாக உங்கள் கைக்கு வரும்.
அப்படி வராவிட்டால் போனை போடுங்கள்.. காரணம், அவர் அங்கேயே எக்ஸ்சேஞ்ச் ரேட்டை கணக்குப் போட்டு சில டாலர்களை 'அமுக்கிவிட்டு', உங்களுக்கு வழக்கமாக வரும் பணத்துக்கு ஏற்ற மாதிரி டாலரை குறைத்து அனுப்பியுள்ளார் என்று அர்த்தம்.
இதுக்கு உங்களை தூண்டிவிடவே, மேலே போட்ட 'ஹெட்டிங்'!