ரூபாய் மதிப்பு குறைந்ததால் 'பர்சனல் லோன்' வாங்கி இந்தியாவுக்கு அனுப்பும் என்ஆர்ஐகள்.. ஏன்?!
-ஏ.கே.கான்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில ஆண்டுகளில் 20 ரூபாய் சரிந்துவிட்டது. அதாவது 45 சதவீதம் குறைந்துவிட்டது. இதனால் ஏகப்பட்ட பிரச்சனைகளை நாடு சந்தித்தாலும் ஏற்றுமதியாளர்கள் மத்தியில் கொண்டாட்ட சூழ்நிலை நிலவுகிறது.
டாலரின் மதிப்பு அதிகரித்துவிட்டதால் அதை ரூபாயாக மாற்றும்போது ஏற்றுமதி செய்த பொருளுக்கான மதிப்பு அதிகமாகிவிட்டது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
என்ஆர்ஐக்கள்...
இந் நிலையில் அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களும் இந்த ரூபாய் மதிப்பு சரிவை தங்களுக்கு சாதகமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அந் நாட்டு வங்கிகளில் பர்சனல் லோன் வாங்குவது திடீரென அதிகரித்துள்ளது. இந்தப் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி நிலம் வாங்குவது, வீடு வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்கா, வளைகுடா...
அந்த நாடுகளில் வாங்கும் லோனின் மதிப்பு இந்தியாவுக்கு அனுப்பி ரூபாயாக மாற்றும்போது மிகவும் அதிகரித்துவிடுகிறது. இதனால் இந்தப் பணத்தை இந்தியாவில் நிலம், வீடு ஆகியவற்றில் முதலீடு செய்ய இது மிகச் சரியான தருணமாக உள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, ஓமன், குவைத், செளதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் பர்சனல் லோன் வாங்குவதும், இந்தியாவுக்கு பணம் அனுப்புவதும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
டிவி கொண்டு வந்தால் வரி:
இந் நிலையில் வெளிநாடுகளில் இருந்து டிவி கொண்டு வந்தால் அதற்கு 10 சதவீதம் சுங்க வரியும், 12.5 சதவீதம் countervailing duty-ம் விதிக்கப்பட்டுவிட்டது. கடந்த வாரம் இது அமலுக்கு வந்தது. தேவையில்லாத இறக்குமதியைத் தவிர்த்து நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை சீராக்க இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது மத்திய அரசு.
டிராலியும் டிவியும்...
இதுவரை ரூ. 35,000 மதிப்புள்ள டிவிக்களை கொண்டு வர வரி ஏதும் இல்லாமல் இருந்தது. இதனால் துபாய், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து சென்று வருவோர் தாங்கள் கொண்டு போன பையை திரும்பிக் கொண்டு வருகிறார்களோ இல்லையோ ஒரு பிளாட் ஸ்கீரின் எல்இடி அல்லது எல்சிடி டிவியை டிராலியில் வைத்து விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவது கட்டாயமாக இருந்தது. (இதன் விலை 35% முதல் 50% வரை அங்கே குறைவு) அவர்களை வரவேற்க வரும் உறவினர்கள் கூட டிராயில் டிவி இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டே, வாப்பா.. என்று 'வாயார' அழைத்தனர். அதிலும் கை வைத்துவிட்டது மத்திய அரசு.
ரூபாயை காப்பாற்ற 4 முக்கிய விதிகள்:
இந் நிலையில் ரூபாயின் மதிப்பைக் காப்பாற்ற மத்திய அரசு 5 முக்கிய விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
இது ஒரு வட்டம் பாஸ்...
1. இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து கொண்டே இருக்கும் என்ற கனவில் இருந்து முதலில் அரசும், மக்களும், தனியார் நிறுவனங்களும் வெளியே வர வேண்டும். இது ஒரு வட்டம். பொருளாதாரம் ஏறும், இறங்கும்.. மழை பொய்த்தால் கூட பொருளாதாரம் பாதிக்கப்படும், அமெரிக்காவுக்கு பிரச்சனை வந்தால் கூட நமது பொருளாதாரம் பாதிக்கப்படும். இது தான் நிதர்சனம்.
மானியமே காரணம்...
2. ஓட்டுக்காக பெட்ரோல், டீசல், அரசி, கோதுமை, மண்ணெண்ணெய் என்று எல்லாவற்றும் மானியத்தை அள்ளித் தந்துக் கொண்டிருக்கக் கூடாது. இதனால் பொருளாதாரம் 'உருப்படுவது' நிச்சயம் பாதிக்கப்படும்.
அன்னிய செலாவணி கையிருப்பு...
3. நம்மகிட்ட இல்லாத அன்னிய செலாவணியா.. அதெல்லாம் சமாளிச்சுறலாம் என்ற அதீத நம்பிக்கை கூடவே கூடாது. அன்னியச் செலாவணி (டாலர்) கையிருப்பை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வர வேண்டும். இதற்கு ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.
பணவீக்கம் 'மன வீக்கம்'...
4. பணவீக்கத்தைவிட நாட்டின் வளர்ச்சியே முக்கியம் என்று வெட்ட சவடால் கூடாது. பணவீக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், நாட்டின் வளர்ச்சி விகிதம் நல்லா இருக்குல்ல, அப்புறம் எதுக்கு கவலை என்ற பேச்சே கூடாது. பணவீக்கம் அளவை மீறும்போது மட்டும் ரிசர்வ் வங்கியைவிட்டு வங்கிகளைப் 'புழிவது', அவர்கள் பதிலுக்கு மக்களை நசுக்குவது.. சந்தை புழக்கத்தில் உள்ள ரூபாயை குறைப்பது.. என்பது உதவாத வேலை என்கின்றனர்.