யூசுப் பாய் அப்பாவோட பேண்டை.. ஒரு ஜான் கம்மி பண்ணுங்க...!
-ஏ.கே.கான்
இந்திய ரூபாயின் மதிப்பை பார்க்கும்போது 5 ஸ்டார் சாக்லேட் விளம்பரம் தான் நினைவுக்கு வருகிறது.
சுரேசும் ரமேசும் அப்பாவின் பேண்ட்டை கொஞ்சம் ஆல்டர் செய்ய, டெய்லர் கடைக்குச் சென்று, 5 ஸ்டார் சாக்லேட்டை சாப்பிட்டுவிட்டு, உலகத்தையே மறந்து, பேண்ட்டை ஆளுக்கு 2 ஜான் வெட்டச் சொல்லிய பின் அப்பாவுக்கு டவுசர் மட்டுமே மிஞ்சுகிறது. அதிலும், பாக்கெட்டுகள் இரண்டும் வெளியே நீட்டியபடி..
கிட்டத்தட்ட ரூபாய் மதிப்பும் இதே நிலைக்குத் தான் வந்துவிட்டது.
முதலில் ரூபாயின் மதிப்பை சரிய ஆரம்பிக்க, அதை சரி செய்ய ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை எடுத்து டாலர்கள் வெளியேறாமல் தடை விதிக்க, இதனால் பயந்து போன முதலீட்டாளர்கள் டாலர்களோடு வேறு நாடுகளுக்குப் போய்விட்டனர், முதலீடு செய்ய. இதன் பலன், மீண்டும் ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து கொண்டே வருகிறது.
பேன்டைக் கொண்டு போய் டவுசர் ஆக்கிய கதை தான்...
இப்போது மீண்டும் விளம்பரத்துக்கு வருவோம்.. பேண்ட் டவுசரானதால் கடுப்பான அப்பா, ரமேஷ் மற்றும் சுரேசின் கன்னத்தில் விடும் அறையில், பல் எல்லாம் ஆடிப் போய், மூஞ்சி எல்லாம் வீங்கிப் போய் தடுமாறும் அந்த சகோதரர்களுக்கு மீண்டும் ஒரு கவலை வருகிறது....
அது, ''இப்ப நாம எப்படி 5 ஸ்டார் சாக்லேட் சாப்பிடப் போறோம்'' என்பதே. மத்திய அரசுக்கும் இது போன்ற 'கவலைகளே' நிறைய இருப்பதாகத் தெரிகிறது... இல்லாவிட்டால் இந்த நேரத்தில் பொருளாதாரத்தை மேலும் சிக்கலாக்கும் உணவு பாதுகாப்பு மசோதா போன்ற வேலைகளில் ஈடுபடுவார்களா?
டவுசர்கள் நிறைய தேவைப்படும் போலிருக்கிறது!!