சுதந்திர நாடாக அறிவித்த உக்ரைன்:
அந்த சூழலைப் பயன்படுத்தி 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது உக்ரைன் நாடாளுமன்றம்.
இதைத் தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி நடந்த வாக்கெடுப்பில் 90 சதவீத மக்கள் தனி நாடு ஆனதை ஆதரித்து வாக்களித்தனர்.
இதையடுத்து டிசம்பர் 21ம் தேதி சோவியத் யூனியன் கலைக்கப்பட்டு உலகின் மாபெரும் வல்லரசு சிதறுண்டது. பல நாடுகளும் சோவியத் யூனியனிடம் இருந்து பிரிந்து போயின. ஆனால், சோவியத் யூனியனின் பிரிவை/ சரிவைத் துவக்கி வைத்தது உக்ரைன் தான்.
இதைத் தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் உக்ரைனின் பொருளாதாரம் படுபாதாளத்துக்குப் போனது. ஊழலும் குற்றங்களும் பெருமளவில் அதிகரித்தன. பெரும் பணவீக்கத்தோடு வேலையில்லாமையும் அதிகரிக்கவே அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.
2004ம் ஆண்டில் பெரும் முறைகேடுகளுக்கு இடையே விக்டர் யனுகோவ்ச் பிரதமரானார். 2006லும் இவரே பிரதமரானார். ஆனால், ஆட்சி கவிழ்ந்து 2007ல் நடந்த தேர்தலில் டிமோசென்கோ பிரதமரானார்.
இவருக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நல்லுறவு இல்லாமல் போனதால், உக்ரைனுக்கு எரிவாயு சப்ளையை நிறுத்தியது ரஷ்யா. இதனால் மக்கள் பெரும் திண்டாட்டத்துக்கு ஆளாயினர். 2010ம் ஆண்டு முன்னாள் பிரதமர் விக்டர் யனுகோவ்ச் அதிபர் பதவிக்கு போட்டியிட்டு வென்றார். இந்தத் தேர்தலில் பல முறைகேடுகள் நடந்ததாகவும் அதற்கு ரஷ்யாவே காரணம் என்றும் புகார்கள் எழுந்தன.