யனுகோவ்ச்- புடினால் வந்த வினை
தீவிர ரஷ்ய ஆதரவாளரான யனுகோவ்ச் தனது நாட்டின் கொள்கைகளை ரஷ்யாவுக்கு சாதகமாக மாற்றினார். ஆனால், மக்களோ உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்கக் கோரி போராட்டங்களில் குதித்தனர்.
2013ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி ரஷ்ய அதிபர் புடினின் ஆலோசனையால் ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்தார் யனுகோவ்ச். இதை எதிர்த்து மக்கள் போராட்டங்களை ஆரம்பிக்கவே, அதை ராணுவத்தைக் கொண்டு அடக்கினார் யனுகோவ்ச். இதில் பலர் பலியாயினர்.
இதையடுத்து உள்நாட்டுக் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் அரசுக் கட்டடங்களை ஆக்கிரமித்துக் கொள்ள, ராணுவத்தின் ஒரு பிரிவும் அவர்களை ஆதரிக்க ஆரம்பித்தது. இதையடுத்து நடந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் உக்ரைன் அதிபருக்கு உதவும் வகையில் அந்த நாட்டு அரசின் 15 பில்லியன் டாலர் கடன் பத்திரங்களை ரஷ்யா வாங்கும் என்றும், உக்ரைனுக்கான எரிவாயு விலையை குறைப்பதாகவும் புடின் அறிவித்தார். ஆனால் மக்கள் போராட்டம் தொடர்ந்து வலுக்கவே அதிபர் யனுகோவ்ச்சுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்தார் உக்ரைன் பிரதமர் அஸாரோவ்.