ஐரோப்பாவின் இதயத்தை உலுக்கிய 3 வயது சிறுவனின் உடல்!
-ஏ.கே.கான்
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போர், இராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலால் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலை, ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலையெடுக்கும் தலிபான்கள்... என பயங்கரமான சூழல்களால் இந்த மூன்று நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் நாடுகளை விட்டு ஓடி வருகின்றனர்.
2011ம் ஆண்டு சிரியாவில் அதிபர் பஸார் அல் ஆசாதுக்கு எதிராக தொடங்கிய உள்நாட்டுப் போரால் இதுவரை 40 லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நாட்டின் பெரும்பாலான நகரங்கள் நாசமடைந்துவிட்டன. நாட்டின் மக்கள் தொகையில் 5ல் ஒரு பங்கு மக்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்பதை வைத்தே இந்த நாட்டில் நிலவும் மோசமான சூழலை உணர முடியும்.
பஸார் அல் ஆசாத் ஷியா பிரிவின் உட்பிரிவான அலவைத் பிரிவைச் சேர்ந்தவர். இவருக்கு எதிராக சன்னி பிரிவினர் தொடங்கிய கலவரம் உள்நாட்டுப் போராக மாற, பஸாருக்கு ஆதரவாக ஷியா பிரிவினர் ஆயுதம் ஏந்த, சன்னி பிரிவினருக்கு செளதி அரேபியா தலைமையிலான நாடுகள் ஆயுதம் தர, பதிலுக்கு ஷியா பிரிவினருக்கு ஈரான் ஆயுதங்கள் வழங்க, பஸாருக்கு உதவியாக லெபனானின் ஹிஸ்புல்லா போராளிக் குழுவினர் தங்கள் படைகளை அனுப்ப, எல்லாவற்றுக்கும் மேலாக ரஷ்யாவும் பஸாருக்கு ஆதரவாக ஆயுதங்கள் மற்றும் சர்வதேச ஆதரவைத் தர சிரியா சின்னாபின்னாவாகிவிட்டது.
மக்கள் ஷியா, சன்னி, குர்து என மூன்று பிரிவாகப் பிரிந்து மோதலில் இறங்க, ஒரு பிரிவு ராணுவத்துக்கு ஆதரவாக இருக்க, இந்த கலங்கிய குட்டையில் மீன் பிடித்துவிட்டது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு. நாட்டின் வட பகுதியில் பெரும் பிரதேசங்களைக் கைப்பற்றி தனி நாடாக அறிவித்ததோடு, பக்கத்தில் உள்ள இராக்கின் பல பகுதிகளும் இந்த நாட்டில் அடக்கம் என்று கூறியுள்ளது.
சிரியாவில் நிலைமை இப்படி என்றால், இராக்கில் இன்னும் மோசம். அங்கே அமெரிக்காவுக்கு எதிராக சதாம் ஹூசேனின் ஆதரவாளர்கள் ஒரு பக்கம் ஆயுதம் தூக்க, அவர்களை ஒடுக்கி ஷியா அரசை நிறுவ ஈரான் ஆதரோடு ஷியா பிரிவினர் ஆயுதம் தூக்க, சதாம் ஆதரவாளர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் துணை நிற்க, குர்து இன மக்களை இந்த ஐஎஸ்ஐஎஸ் கொன்று குவித்தது. பதிலடியாக குர்து இனத்தினரும் தனி ராணுவத்தை உருவாக்கி அமெரிக்க உதவியோடு தாக்குதலில் இறங்க இராக் முழுவதுமே இனப் போர்.
ஆப்கானிஸ்தானில் அல் கொய்தா- தலிபான்களை விரட்ட வந்த அமெரிக்கப் படையினருக்கு எதிராக பாகிஸ்தானின் ஆதரவோடு நடந்த தாக்குதல்கள், அமெரிக்கப் படைகள் வெளியேறிவிட்ட நிலையில், மீண்டும் தலைதூக்கிவிட்ட தலிபான்கள் வசம் நாட்டின் பல பகுதிகள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. இங்கே மீண்டும் பாகிஸ்தான் மறைமுக ஆட்சியை நடந்த முயற்சித்து வரும் நிலையில். அதைத் தடுக்க ஈரான், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் பல்வேறு வேலைகளை செய்து வருகின்றன. இதனால் ஆப்கானில்தானில் வழக்கம்போல ஸ்திரமற்ற சூழல்.
இப்படியாக இந்த மூன்று நாடுகளிலும் நிலவும் கவலையான சூழல் பல லட்சக்கணக்கான மக்களை நாடுகளை விட்டு வெளியேற வைத்துவிட்டது. இவர்கள் துருக்கி, லெபனான், ஜோர்டன், லிபியா ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஆனால், லட்சக்கணக்கில் அலை அலையாக வந்து கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு போதிய வசதிகளை இந்த நாடுகளால் செய்ய முடியவில்லை. இதனால் இந்த நாடுகளை விட்டும் வெளியேற வேண்டிய நிலைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நாடுகளில் இருந்து வெளியேறி மத்திய தரைக்கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குள் நுழைந்துவிடுவதே உயிரையும் குடும்பத்தையும் காப்பாற்ற ஒரே வழி என்ற சூழல். இதனால் குழந்தைகள், முதியோர் என குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் பெரும் அபாயகரமான பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பாவுக்குள் புகுந்து வருகின்றனர்.
துருக்கி, லிபியாவில் இருந்து சட்ட விரோதமாக படகுகள் மூலம் கிரீஸ் நாட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்து ஹங்கேரி வழியாக ஜெர்மனி, பிரான்ஸுக்கு செல்ல இந்த மக்கள் படும் பாட்டை சொல்லி மாளாது.
50 பேர் செல்லக் கூடிய படகுகளில் 300 பேர் ஏறி, இரவு நேரங்களில் கடல் கடந்து கிரீஸ் நாட்டுக்குள் புகுந்து வருகின்றனர். இதில் வழியில் பல படகுகள் கவிழ்ந்து ஆயிரக்கணக்கானோர் பலியாகியும் வருகின்றனர். கிரீஸ் நாட்டிலிருந்து பல்கேரியா, ஹங்கேரி, செர்பியா வழியாக ஜெர்மனிக்குச் செல்ல, லாரிகளிலும் ரயில்களிலும் ஏறி பயணித்து வருகின்றனர்.
லாரிகளில் நூற்றுக்கணக்கானோர், ரயில்களில் ஆயிரக்கணக்கானோர் என அளவுக்கு அதிகமாக ஏறி மூச்சுத் திணறி இறப்போரின் எண்ணிக்கையும் ஏராளம்.
பல்கேரியா, ஹங்கேரியில் தெருக்களிலும், கடற்கரைகளிலும் திறந்த வெளிகளில் குழந்தைகள், பெற்றோருடன், பசியும் பட்டினியுமாக குடும்பம் குடும்பமாக படுத்து உறங்கி ஜெர்மனிக்குள் நுழைய இவர்கள் நடத்தும் போராட்டத்தை எளிதாக விவரித்துவிட முடியாது.
இந்த அகதிகளை நாம் ஏன் அனுமதிக்க வேண்டும் என இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலியில் எதிர்க் குரல்கள். இவர்களை திருப்பி அனுப்ப முடியாமல், அடுத்த நாட்டுக்குள் தள்ளிவிட இத்தாலி, ஆஸ்திரியா, கிரீஸ், பல்கேரியா ஆகிய நாடுகள் முயல, தங்கள் நாட்டுக்குள் நுழைந்துவிடாமல் தடுக்க பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை முயற்சித்து வருகின்றன.
முள்வேலிகள் அமைத்தால் இவர்களைத் தடுத்துவிடலாம் என பல்கேரியாவும் ஹங்கேரியும் செர்பியாவுடனான தங்கள் எல்லையில் 160 கி.மீக்கு வேலிகளை அமைத்தன. ஆனால், அது பலனளிக்கவில்லை. முள் வேலிகள் மீது ஏறி உடல்களைக் கிழித்துக் கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லை கடந்து வருகின்றனர்.
இவர்களைத் தடுக்க ஹங்கேரி- ஜெர்மனி இடையிலான ரயில்களை நிறுத்திவிட, மக்கள் நடந்தும், லாரிகள், பஸ்கள், டாக்ஸிகள் என பல வகைகளிலும் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். வழியெங்கும் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகியும் வருகின்றனர்.
ஏராளமானோர் குழந்தைகளை சுமந்தபடி நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்தும் எல்லைகள் தாண்டி ஜெர்மனிக்குள் நுழைந்து வருகின்றனர். இவ்வாறு பலியாகி வருவோரில் பெரும்பாலானவர்கள் முதியோரும் குழந்தைகளும் பெண்களும் தான்.
ஆனால், இந்தப் பலிகள் ஐரோப்பாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஆனால், ஒரே ஒரு குழந்தையின் உடல் ஐரோப்பாவின் இதயத்தை உலுக்கிவிட்டது.
2 வயதான ஒரு சிறுவனின் உடல் துருக்கி கடற்கரையில் ஒதுங்க, அதை ஒரு துருக்கி வீரர் எடுத்துச் செல்லும் படம் உலக நாடுகளை அதிர வைத்துவிட்டது. துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டின் கோஸ் தீவுக்கு அகதிகளுடன் சென்ற படகு விபத்துக்குள்ளாகியிருக்கிறது. அதில் பலியான ஒரு குழந்தையின் உடல் தான் இது.
ஐலான் குர்தி என்ற இந்த 3 வயது சிறுவன் தனது தாயார், 5 வயது சகோதரன் காலிப் ஆகியோருடன் கடலில் மூழ்கி பலியாகியுள்ளான்.
இதையடுத்து ஐரோப்பா முழுவதும் அகதிகளுக்கு ஆதரவான குரல்கள் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது.
இதுவரை அகதிகள் விஷயத்தில் மிகவும் கண்டிப்பு காட்டி வந்த ஜெர்மன் அதிபர் மெர்கல், இப்போது அதிகமான அகதிகளை ஜெர்மனி உள்ளே அனுமதிக்கும் என்று அறிவித்திருக்கிறார். அதே போன்ற ஒரு அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் ஹோலன்டும் வெளியிட்டுள்ளார். இதுவரை அதிகமான கண்டிப்பு காட்டிய இங்கிலாந்தும் கூட அகதிகளை ஏற்க முன்வந்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.2 லட்சம் அகதிகளை அனைத்து ஐரோப்பிய நாடுகளும் பிரித்து, ஏற்றுக் கொள்வது என்ற முடிவுக்கு வந்துள்ளன. உள்ளே வந்தவர்களை திருப்பி அனுப்புவதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளன. அதே நேரத்தில் மேலும் அகதிகள் ஐரோப்பாவுக்குள் வருவதைத் தடுக்க, ஜோர்டன், லிபியா, துருக்கியில் அகதி முகாம்களுக்கு அதிக நிதியுதவி வழங்கவும் முன்வந்துள்ளன ஐரோப்பிய நாடுகள்.
அதே போல ஐரோப்பாவின் பல்வேறு மாணவர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்களும் ஆங்காங்கே முகாம்கள் அமைத்து இந்த மக்களுக்கு உதவி வருகின்றனர்.
ஆனால், ஜெர்மனியில் இந்த அகதிகள் மீது தாக்குதல் நடத்தும் கும்பல்களும் அதிகரித்து வருகின்றன. இனரீதியில் இந்த மக்களை விமர்சிப்பதோடு, எங்கள் நாட்டுக்கு சுமையாக வந்தவர்களே என்று கூறியபடி ஏற்கனவே வாடி, வதங்கிப் போன இந்த குடும்பங்கள் மீது தாக்குதல் நடத்தியும் வருகின்றனர்.
அதே போல ஹங்கேரியில் இருந்து ஆஸ்திரியாவுக்குள் நுழையும் மக்களை அந் நாட்டு அரசே வலுக்கட்டாயமாக வெளியேற்றி ஹங்கேரியில் போய் இறக்கிவிட்டு வருகிறது.
ஆனால், ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த பல மாணவர் அமைப்புகள் பேஸ்புக் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு இந்த மக்களை தங்களது 200 கார்கள் மூலம் ஹங்கேரி எல்லையில் இருந்து அழைத்து வந்து பத்திரமாக ஜெர்மனி, ஆஸ்திரியாவுக்குள் இறக்கிவிட்டு வருகின்றனர்.
இந்தக் குழுவுக்கு தலைமை தாங்கும் Erzsebet Szabo கூறுகையில், ''இதற்காக என்னை அரசாங்கம் கைது செய்தாலும் கவலை இல்லை. இந்த மக்கள் படும்பாட்டை விட நான் ஒன்றும் அதிகமான கஷ்டத்தை சிறையில் அனுபவித்துவிடப் போவதில்லை!''