5 ஆண்டுகளில் அதி வேகமாக கடன் வாங்கி குவித்த மாநிலம் தமிழகம் தான்!-இது ரிசர்வ் பேங்க் கணக்கு
-ஏ.கே.கான்
திருவிளையாடல் படத்தில் உலகத்துலேயே பெரிய மலை நம்ம மலை தான் என்பார் சிவபெருமானாக வரும் சிவாஜி, தருமியாக வரும் நாகேஷிடம். அது மாதிரி கடந்த 5 ஆண்டுகளில் நாட்டிலேயே மிக அதிகளவில் கடன் வாங்கியுள்ள மாநிலம் நம்ம மாநிலம் தான்.
இப்போதைக்கு நாட்டிலேயே அதிகளவில் கடன் வைத்திருக்கும் மாநிலம் மகாராஷ்டிரம் தான். அதாவது இந்த மாநிலத்தின் மொத்த கடன் ரூ. 3,38,730 கோடி. ஆனால், விரைவிலேயே இந்த சாதனையை தமிழகம் முறியடிக்கும் என்றே தெரிகிறது.
ரிசர்வ் வங்கியின் ஆவணங்களின் அடிப்படையில் இந்தியா ஸ்பென்ட் நடத்தியுள்ள ஆய்வில் தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த தகவல்கள் தலை சுற்ற வைக்கின்றன.
ஒரு அரசாங்கம் கடன் வாங்குவது என்பது தனி மனிதன் கடன் வாங்குவது மாதிரி தான். வரவுக்கும் செலவுக்கும் இடையே பஞ்சப்பாடு ஏற்படும்போது யாரிடமாவது கை நீட்டுவது மாதிரி தான் அரசும் தனது வருமானம் போதவில்லை என்றால் கடன் வாங்குகிறது.
வழக்கமாக இந்த மாதிரி கடன்களை அரசாங்கம் வாய்க்கும் வயிறுக்கும் வாங்குவதில்லை. நாம் வீடு கட்ட, நிலம் வாங்க என வளர்ச்சிக்காக, முதலீடுகளுக்காக கடன் வாங்குவது மாதிரி அரசும் சாலைகள் அமைக்க, மருத்துவமனை கட்ட, பாலம் கட்ட, ஊழியர்களுக்கு சம்பளம் தர என கடன் வாங்குகிறது.
இது தவிர அரசாங்கம் வாங்கும் கடனில் பெரும் பகுதி முன்பு வாங்கிய கடனுக்கான வட்டியைக் கட்டவே செலவாகி விடுகிறது. அதாவது வட்டி குட்டி போட்டு அரசின் கஜானைவை சுரண்டிக் கொண்டே இருக்கிறது.
இந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து மாநிலங்களின் கடன் அளவும் சராசரியாக 66 சதவீதம் அதிகரித்துள்ளது. 2010ம் ஆண்டில் மாநில அரசுகளின் கடன் ரூ. 16,48,650 கோடியாக இருந்தது. அது இப்போது ரூ. 27,33,630 கோடியாக அதிகரித்துள்ளது.
இதில் டாப் 10 வரிசையில் இருப்பவை மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரா, குஜராத், தமிழகம், கர்நாடகம், ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப் ஆகியவை.
இதில் தமிழகத்துக்கு ஒரு விஷேசம். கடந்த 5 ஆண்டுகளில் மிக வேகமாக, மிக அதிகமாக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான். அதாவது கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் அளவு 92 சதவீதம் அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரம் தான் மிக அதிகமான கடனை வாங்கியுள்ளது. தமிழகம் பின்னால தானே இருக்கு என புரட்சித் தலைவி புராணம் பாடி சப்பை கட்டு கட்டலாம். உண்மை என்னவெனில், மகாராஷ்டிரத்தின் மக்கள் தொகை 11.42 கோடி. தமிழக மக்கள் தொகை 6.78 கோடி. அந்த வகையில் பார்த்தால் சராசரியாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் உள்ள கடன் அளவு ரூ. 28,778. மகாராஷ்டிரத்தைப் பொறுத்தவரை இது ரூ. 29,661. இப்போது தெரிகிறதா தமிழகத்தின் உண்மையான நிலவரம்?.
கடன் வாங்கினால் அதற்கு வட்டி கட்ட வேண்டுமே... கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வட்டி கட்டும் அளவு குறைந்து கொண்டே வந்துள்ளது, தமிழகம் மற்றும் ஹரியாணாவைத் தவிர. தமிழகம் கட்டும் வட்டியின் அளவு 2012-13ல் 10.5 சதவீதமாக இருந்தது. இது 2014-15ல் 11.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நம்மைப் போலே அதிக கடன் வாங்கிய மகாராஷ்டிரம் கூட தனது வட்டியைக் குறைத்துள்ளது. அதாவது வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தியுள்ளது. ஆனால், தமிழகம் தான் கடனை வாங்கிக் குவித்து, அதிகளவில் வட்டியைக் கட்டிக் கொண்டுள்ளது.
இதில் ஒரே ஒரு நல்ல விஷயம், கடன் அதிகரித்தாலும் அதற்கு இணையான மாநில ஒட்டு மொத்த உற்பத்தியும் அதிகரித்து வருவது தான்...
நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்து நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் பாக்கெட்டிலும் ரூ.15 லட்சத்தை எப்படியாவது திணித்து பாக்கெட்டை கிழிப்பேன் என்ற பிரதமர் மோடி ஒரு பக்கம் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள சட்டை - பேண்ட் அணிந்து போஸ் குடுத்துக் கொண்டிருக்க, மறுபக்கம் தமிழகத்தில் வாழும் ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூ. 28,778 கடனை ஏற்றி வைத்திருக்கும் அம்மா அரசு மறுபக்கம்..
மொத்தத்தில் மக்கள் பாவம்!