வெடித்தது ரஷ்ய ஏவுகணையா, ஏன் அணுக்கதிர் வீச்சு பரவியது..?- மூடி மறைக்கப்படும் எதிர்கால ஆயுதங்கள்
Recommended Video
-ஏ.கே.கான்
வட ரஷ்யாவின் அர்கான்ஜெல்ஸ்க் பகுதியில் உள்ள கடற்படையின் ஏவுகணை ஆய்வு மையத்தில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி பெரும் வெடி விபத்து நடக்கிறது. வழக்கமான ஏவுகணை வெடிப்பாக இருந்தால் உயிர் சேதம் பொருட் சேதங்கள் நடந்திருக்கும். ஆனால், இந்த விபத்து நடந்த சில மணி நேரத்தில் 40 கி.மீ. தூரத்தில் உள்ள செவரோட்வின்ஸ்க் நகரில் பெரும் பதற்றம்.. காரணம் அந்தப் பகுதியில் திடீரென அணுக் கதிர்வீ்சசின் அளவு அதிகரித்தது தான்.
2 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த நகரின் நலத்துறை அதிகாரிகள் உடனே இது குறித்து தங்கள் இணையத்தளத்தில் தகவல் வெளியிட்டதோடு, உடனடியாக அனைவரும் அதிக அளவில் அயோடினை உட்கொள்ளுமாறு அவரச செய்தியை மக்களிடம் பரப்பினர். அணுக் கதிர்வீச்சால் ஏற்படும் தாக்கத்தை அயோடின் ஓரளவுக்கு கட்டுப்படுத்தும். இந்த தகவல் வெளியான சிறிது நேரத்தில் மக்கள் மருத்துவமனைகள், மெடிக்கல் ஷாப்கள், வேதிப் பொருட்கள் விற்கும் கடைகளில் குவிய ஆரம்பிக்க, அடுத்த சில மணி நேரங்களில் அங்கு அயோடினுக்கு பெரும் தட்டுப்பாடு.
இந்த விவகாரம் மெதுவாக ரஷ்யாவின் பிற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்த சில மணி நேரத்தில் செவரோட்வின்ஸ்க் நலத்துறையின் இணையத்தளத்தில் இருந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அந்த பக்கமே காணாமல் போனது. காரணம், ரஷ்ய உளவுத்துறையிடம் இருந்து அதிகாரிகளுக்கு வந்த உத்தரவு தான்.
இதற்குள் இந்த விவகாரம் மெதுவாக பிற நாடுகளுக்கும் பரவிவிட வழக்கம்போல் ரஷ்யா இதை மூடி மறைக்கும் வேலையை ஆரம்பித்தது.
ஏவுகணை வெடிப்புக்கும் கதிர்வீச்சுக்கும் என்ன தொடர்பு, ஒருவேளை ஏவுகணையில் அணு ஆயதம் ஏதும் இருந்ததா.. அதுவும் சேர்ந்து வெடித்ததா என உலக நாடுகள் மத்தியில் கேள்விகள் எழ ஆரம்பிக்க பிற நாட்டு உளவுப் பிரிவுகள் தரும் தகவல்கள் அதிரிச்சிகரம்.
சில ஆண்டுகளாகவே ரஷ்யா புதிய ரக ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது அரசல் புரசலாக வெளியே தெரிந்த செய்தி தான் என்றாலும் இந்த ஏவுகணை விபத்தும் அதில் ஒரு பகுதியே என்பது தான் அச்சமூட்டும் விவகாரமாகும்.
இந்த விபத்து குறித்து பல நாட்டு ஊடகங்களும் யூகத்தின் அடிப்படையில் செய்திகளை வெளியிட ஆரம்பித்த நிலையில், கொஞ்சமே கொஞ்சம் விளக்கத்துடன் ரஷ்ய பாதுகாப்புத்துறை ஒரு அறிக்கையை தந்தது. அதில், திரவ எரிபொருள் ஏற்றப்பட்ட ஒரு ஏவுகணை வெடித்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.
முதலில் ஏவுகணை வெடி விபத்து, அடுத்தது அணுக் கதிர்வீச்சு என தகவல்கள் வந்த நிலையில் இப்போது தான் முதன்முதலாக பல உயிர்கள் பலியான தகவலையும் ரஷ்யா வெளியிட்டது. ரஷ்யா குறித்து நன்கு அறிந்தவர்கள் இந்த உயிர் பலி கணக்கை நம்பவில்லை. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
ஏவுகணை வெடித்தது, 5 பேர் பலியாகிவிட்டனர் என்பதோடு ரஷ்ய பாதுகாப்புத்துறை தனது விளக்கத்தை நிறுத்திக் கொண்டுவிட்டது. ஆனால், அணுக் கதிர்வீச்சு ஏன் ஏற்பட்டது. எதற்காக இந்த விபத்து நடந்த பகுதிக்கு அருகே உள்ள ஒயிட் சீ கடல் பகுதியில் கப்பல்கள் வர தடை விதிக்கப்பட்டது என்பதற்கான விவரம் சொல்லப்படவில்லை.
இதனால், இந்த விவகாரத்தில் மேலும் சந்தேகங்கள் வலுக்கவே, வேறு வழியின்றி ரஷ்ய அணு ஆராய்ச்சி நிறுவனமான ரோஸடோம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், ஏவுகணைக்கான திரவ எரிபொருளில் அணு சக்தியை ( isotope power source) பயன்படுத்தும் ஆய்வில் ஈடுபட்டிருந்த 5 பேர் ஏவுகணை வெடிப்பில் பலியாகிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்துத் தான் இந்த விவகாரத்தின் முழுப் பின்னணியையும் புரிந்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டு தனது நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின், இதுவரை இல்லாத புதிய வகையான ஏவுகணைகள் தயாரிப்பில் ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக மட்டும் தெரிவித்திருந்தார்.
அவர் குறிப்பிட்ட ''இதுவரை இல்லாத ரகம்'' என்பது ஏவுகணைகளுக்கான எரிபொருளாகவே அணு சக்தியை பயன்படுத்துவது தான். வழக்கமாக அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளை அணு சக்தி அல்லாத திரவ, திட எரிபொருட்கள் கொண்டு இயக்குவது தான் வழக்கம். இப்போது எரிபொருளாகவே அணு சக்தியை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் இறங்கியுள்ளது ரஷ்யா.
இதனால் ஏவுகணையின் தாக்குதல் தூரத்தை இதுவரை இல்லாத அளவுக்கு எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நீட்டிக்க முடியும். தூரம் ஒரு பிரச்சனையே அல்ல என்பதால் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை எதிர்கொள்ள, திசையை- பாதையை- உயரத்தை மாற்றிக் கொண்டு, தேவைப்பட்டால் பூமியையே பல முறை சுற்றி வந்து கூட இலக்கை தாக்க முடியும்.
இந்த ஏவுகணைகளை வானிலேயே சுட்டு வீழ்த்த, இனி எதிர்ப்பு ஏவுகணைகளையும் அணு சக்தியைக் கொண்டே இயக்க வேண்டிய கட்டாயத்துக்கு எதிரி நாடுகள் (அமெரிக்கா) தள்ளப்படும்.
மேலும் அணு சக்தியை எரிபொருளாக பயன்படுத்தும் ஏவுகணைகள் வெளியேற்றும் புகையும் கூட கதிர்வீச்சுடன் தான் இருக்கும். இதனால் ஏவுகணைகள் தாக்கிய பின்னர் ஏற்படும் சேதங்கள் இனி ஏவுகணை புறப்பட்ட நொடியில் இருந்தே ஆரம்பித்துவிடும்.
மொத்தத்தில் எதிர்காலத்தில் ஏவுகணைகள் ஏந்தி வருவது மட்டும் அணு ஆயுதமாக இருக்காது. ஏவுகணையே அணு ஆயுதமாக இருக்கப் போகிறது.
இப்போது இந்த வகையான எரிபொருளை மிகக் குறைந்த அளவில் அண்ட வெளியில் பல கோள்களை தாண்டிச் செல்லும் விண்வெளிக் கலங்கள், செயற்கைக் கோள்களில் தான் பயன்படுத்தி வருகிறோம். காரணம், ஏவப்பட்டு 20, 30 ஆண்டுகள் பயனிக்கும் இந்தக் கலங்களில் பேட்டரிகளின் வாழ்நாளை நீட்டிக்க முடியாததும், சூரியனிலிருந்து பல மில்லியன் கி.மீ. தொலைவில் வெளிச்சமே இல்லாத இன்டர்ஸ்டெல்லார் இருட்டில் சோலார் பேனல்களைக் கொண்டு உந்து சக்தியை பெற முடியாது என்பதுமே காரணம்.
ஆனால், இதில் பயன்படுத்தப்படுவது Radioisotope Thermoelectric Generator (RTG) எனப்படும் மிகச் சிறிய வகை அணு சக்தி ராக்கெட்டுகள். இதில் அணுக் கழிவுகள் வெளியேறுவது இல்லை. அணுக்களை பிளந்தோ (Fission), இணைத்தோ (Fusion) உருவாகும் வெப்ப சக்தியை வைத்து மின்சாரத்தையோ ஏவுகணைக்கான உந்து சக்தியையையோ உற்பத்தி செய்யும்போது தான் அணுக் கழிவுகள் வெளியேறும். ஆனால் RTG தொழில்நுட்பத்தில் அணுவை பிளப்பதோ, இணைப்பதோ இல்லை. இயற்கையாகவே ஐசோடோப்புகள் சிதையும்போது உருவாகும் வெப்பத்தையே விண்கலங்களுக்கு உந்து சக்தியாக பயன்படுத்துகின்றனர்.
ஆனால், ஏவுகணைகளை செலுத்த RTG தொழில்நுட்பம் போதாது. மிகப் பெரிய அளவிலான அணு சக்தி பூஸ்டரகள் தேவைப்படும். இங்கே தான் அணுக் கதிர்வீச்சு கொண்ட கழிவுகள் வெளியேறுகின்றன. இதெல்லாம் தெரிந்து தான் ரஷ்யா இந்த வகை ஏவுகணைகளை தயாரிக்கும் வேலையை ஆரம்பித்துள்ளது.
இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும் ரஷ்யா ஏன் இதைச் செய்ய வேண்டும்..
அதற்குக் காரணம் அமெரிக்காவின் கிலோ பவர்...