'ஐ'... அந்தகூபம், கும்பிபாகம்!!
-ஏ.கே.கான்
ஷங்கரிடம் சரக்கு வெகு வேகமாக தீர்ந்து கொண்டிருப்பதை மறைக்காமல் எடுத்துக் காட்டும் படம் தான் 'ஐ'.
கிட்டத்தட்ட மூன்றரை மணி நேர சோதனை, ரோதனை.
கொஞ்சம் அறிவியல் சப்ஜெக்ட். அதை சுஜாதா இருந்திருந்தால் இன்னும் தெளிவாக எடுத்துச் சொல்லி காட்சிகளை வடிவமைக்க வைத்திருப்பார். சுஜாதா இல்லாத குறை படம் முழுவதுமே தெரிகிறது.
அந்நியன் படத்தில் கருட புராணத்தில் கூறியபடி அந்தகூபம் முறைப்படி கும்பிபாகம் உள்ளிட்ட பல டெக்னிக்குகளை பயன்படுத்தி தவறு செய்பவர்களை விக்ரம் தண்டிப்பார். இந்தப் படத்திலும் அதே மாதிரியான வேலைகளை தான் செய்கிறார் 'ஐ' விக்ரம். கிட்டத்தட்ட அந்நியன் பார்ட்-2 மாதிரியே இருக்கிறது படம்.
ஆபாசம், டபுள் மீனிங்கைப் பொறுத்தவரை இது பாய்ஸ்- பார்ட் 2.
பாடல் காட்சிகளில் எந்திரன் படத்தில் வருவது மாதிரியான செட்டுகள். பேக்கிரவுண்ட் மியூசிக்கில் ரஹ்மான் அசத்தியிருக்கிறார். ஆனால், ''என்னோடு நீயிருந்தால், உயிரோடு நானிருப்பேன்'', ''பூக்களே சற்று ஓய்வெடுங்கள்'' தவிர மற்ற பாடல்கள் ரொம்ப சுமார்.
ஆமி ஜாக்சன் காதலைச் சொல்லும் காட்சிகளில், விக்ரமைப் போய் தனுஷ் மாதிரி வசனம் பேச வைத்திருப்பது காலக் கொடுமை.
படத்தின் ஒரே பலம், முழு பலம்.. விக்ரம், விக்ரம் மட்டுமே.
மனிதரை பாடாய் படுத்தி எடுத்திருக்கிறார்கள். அவரும் அசராமல் வளைந்து, குனிந்து, உடம்பை ஏத்தி, வத்த வைத்து தன் உடலையும் மனதையும் வருத்தி எடுத்திருக்கிறார்.
விக்ரமுக்கு மெட்ராஸ் பாஷை நல்லா இல்லை, நல்லா இல்லை.
காசு தருகிறார்கள் என்பதற்காக இது மாதிரியான வெளங்காத, முக்கியத்துவமே இல்லாத கேரக்டர்களில் சந்தானம் தொடர்ந்து நடிக்காமல் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் சூரி விரைவிலேயே சந்தானத்துக்கு பரோட்டா போட்டுவிடுவார்.
ஷங்கர் படம் என்றாலே ஹீரோ 100 பேரை அடிக்க வேண்டுமே.. இதிலும் அடிக்கிறார். அதுவும் பாடி பில்டர்களை அடித்து, துவைத்து, பிழிந்து, அயர்ன் பண்ணி விடுகிறார். உஷ்ஷ்...
அதே போல இங்கிலீஷ் படங்களில் வருவது மாதிரி சைக்கிள் சண்டை. அதையும் சரியாக செய்யவில்லை. படம் பூராவுமே அறைகுறைத்தனம்.
70, 80களில் வந்த படங்களில் 'பண்ணையார்' செந்தாமரை, தேங்காய் சீனிவாசன், வீ.கே.ராமசாமி, வெண்ணிற ஆடை மூர்த்தி என வில்லன்கள் கூட்டாக சேர்ந்து தண்ணியடித்தவாறே ஹீரோவை பழிவாங்க திட்டம் போடுவார்கள். இதிலும் கூட்டமாக சேர்ந்து, அதிலும் விஜய் மல்லையா லெவலில் இருக்கும் ராம்குமார் தன் நிறுவனத்துக்காக மாடலாக இருக்கும் ஒரு டுபாக்கூர், ஒரு அலங்கார நிபுணர் ஆகியோருடன் சேர்ந்து ஹீரோவை பழி வாங்குகிறாராம்..
இப்படி பல ஓட்டைகளுடன் படத்தை எடுத்திருந்தாலும் மிக விவரமாக பாடல் காட்சிகளை எல்லாம் விளம்பரங்களாகவே எடுத்து, விற்று கல்லா கட்டியிருக்கிறார்கள். இதில் காட்டிய திறமையை திரைக்கதையில் காட்டியிருந்தால் 'ஹையா' என்று சொல்ல மனசு வரும்.
ஆனால், இந்தப் படத்தை பார்த்துவிட்டு மெட்ராஸ் பாஷையில் 'அய்யே' என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
இனிமேல் ஷங்கர் படம் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருக்காது. அந்த வகையில் 'ஐ' ரசிகர்களுக்கு ஒரு கண் திறப்பு!!
ஷங்கர் சுதாரிக்கனும்!!