இதுவரை உலகம் பார்த்திராத மாபெரும் ஒளிப் பிழம்பு.. மனிதம் மரித்த அந்த நாள்...!
-ஏ.கே.கான்
ஏப்ரல் 30, 1945.
ஜெர்மனிக்குள் நுழைந்த ரஷ்யப் படைகள் பெர்லின் நகரை சுற்றி வளைத்துவிட, அங்கே பங்கரில் பதுங்கியிருந்த ஹிட்லர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இதையடுத்து ஹிட்லரின் படைகள் நேரடியாக போரை நிறுத்திவிட்டாலும் ஆங்காங்கே சிறிய அளவில் அமெரிக்கக் கூட்டணி, சோவியத் யூனியன் படைகளுடன் மோதிக் கொண்டிருந்தன.
மே 8, 1945.
இந் நிலையில் ஜெர்மனியின் முப்படையினரும் மே 8ம் தேதி அமெரிக்க- பிரான்ஸ் அதிகாரிகள் முன்னிலையில் சோவியத் யூனியனிடம் சரணடையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இத்தோடு ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
ஆனால், அமெரிக்க கூட்டுப் படையினரிடம் ஜப்பான் சரணடைய மறுக்கவே இரண்டாம் உலகப் போர் பசிபிக் பிராந்தியத்தில் தொடர்ந்தது. இதையடுத்து ஜூலை 26ம் தேதி ஜப்பானுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகியவை ஒரு இறுதி எச்சரிக்கை விடுத்தன. உடனடியாக சரணடையாவிட்டால் ஜப்பான் மீது அழிவு மிகுந்த தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தது Potsdam Declaration எனப்படும் அந்த எச்சரிக்கை.
இதை ஜப்பான் நிராகரித்துவிட்டது. முன்னதாக 1941ம் ஆண்டில் டிசம்பர் 7ம் தேதி ஹவாய் தீவில் உள்ள தனது பியர்ல் ஹார்பரில் நூற்றுக்கணக்கான போர் விமானங்களைக் கொண்டு ஜப்பான் தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களைக் கொன்றதோடு, நூற்றுக்கணக்கான போர்க் கப்பல்களையும் மூழ்கடித்ததற்கு பதிலடி தருவதில் ஆவேசமாக இருந்தது அமெரிக்கா.
(பியர்ல் ஹார்பர் மீது ஜப்பான் ஏன் தாக்குதலை நடத்தி அமெரிக்க கப்பற்படையின் பசிபிக் பிரிவையே நீருக்குள் மூழ்கடிக்க வேண்டும்... இந்தப் பகுதியில் முகாமிட்டிருந்த அமெரிக்கக் கடற்படை, ஜப்பானின் கடல் வழி வர்த்தகத்தை முடக்கலாம் என்ற சந்தேகம் தான்)
ஜப்பான் மீது உலகம் இதுவரை பார்த்திராத அளவுக்கு ஒரு தாக்குதலை நடத்த அன்றே திட்டமிட்டது. Manhattan Project என்ற பெயரிலான இந்தத் திட்டம் மூலம் தான் உலகிலேயே முதன்முதலாக அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. இதில் கனடாவும் இங்கிலாந்தும் அமெரிக்காவுக்கு முழு அளவில் உதவின. விஞ்ஞானிகள், ராணுவ வீரர்கள், உளவுப் பிரிவினர், ஆயுத நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என ஆயிரக்கணக்கானோர் இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அமெரிக்க ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் லெஸ்லி குரோவ்ஸ் அணு விஞ்ஞானி ராபர்ட் ஓபன்ஹெய்மர் ஆகியோர் தலைமையில் மிக ரகசியமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
நியூமெக்சிகோ பாலைவனத்தில் முதல் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடக்க, அணுகுண்டை ஏந்திச் செல்ல வசதியாக போயிங் B-29 Superfortress போர் விமானங்களை மாற்றி வடிவமைக்கும வேலையும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.