போர் விமானங்களை வைத்து பல மாதங்கள் ஹிரோஷிமா மக்களை ஏமாற்றிய அமெரிக்கா
இந்த வேலைகள் எல்லாம் முடிந்த நிலையில்....
ஆகஸ்ட் 6, 1945.
அமெரிக்காவின் மியாமி நகரில் 57 வயதான எனோலா கே தன் வீட்டு வேலைகளில் மூழ்கியிருக்க, அவரது பெயர் சூட்டப்பட்ட ஒரு B-29 Superfortress போர் விமானம் லிட்டில் பாய் என்ற அணுகுண்டை ஏந்தியபடி டினியன் என்ற பசிபிக் தீவில் இருந்து அதிவேகத்தில் கிளம்புகிறது.
அந்த விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தது ஏனோலா கேவின் மகனான பைலட் பால் டிபிட்ஸ். இவரது தலைமையிலான டீம் தான் ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டைப் போட்டது. விமானத்துக்கு தனது தாயாரின் பெயரை சூட்டியது இவர் தான். யுரேனியம் கன்-டைப் அடிப்படையிலான இந்த லிட்டில் பாய் அணுகுண்டு 10 அடி நீளம் கொண்டது. 5 டன் எடை கொண்ட இந்த குண்டு 20,000 டன் டி.என்டி வெடிப்புக்கு சமமானது.
6 மணி நேர பயணத்துக்குப் பின் காலை 6.30 மணிக்கு மேகக் கூட்டங்களில் மாறி மாறி நுழைந்து, வெளியேறி என ஜப்பானை நெருங்கியது எனேலோ கே.
ஹிரோஷிமாவை நெருங்க நெருங்க விமானத்தின் பறக்கும் உயரமும் 31,000 அடிக்கு உயர்த்தப்பட்டது. ஆகஸ்ட் மாதம் ஹிரோஷிமாவில் கோடை காலம். மேகக் கூட்டங்கள் குறைவான இந்த மாதம் தான் அணுகுண்டின் தாக்கத்தை பல மடங்கு அதிகரிக்க உதவும் என்பதால் இந்த நாளை தேர்வு செய்திருந்தனர் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள்.
ஹிரோஷிமாவை எனோலா கே விமானம் நெருங்கும் வேளையில், அமெரிக்காவின் வானிலை ஆய்வு விமானமான Straight Flush அங்கே தலையைக் காட்டியது. வானிலை சரியாக இருப்பதாக தகவல் தர வேகமாக முன்னேறியது எனோலா கே. முன்னதாக 1945ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்தே அமெரிக்காவின் B-29 போர் விமானங்கள் ஹிரோஷிமா மீது பறப்பதும், அப்போது ஆரஞ்சு வண்ணத்திலான ‘pumpkins' எனப்படும் சாதாரண ரக வெடிகுண்டுகளைப் போட்டுவிட்டுப் பறப்பதும் வழக்கமாக இருந்தது. இதனால் இந்த B-29 ரக அமெரிக்க விமானங்கள் தங்கள் நகருக்கு மேலே பறப்பதையும, ‘pumpkins' குண்டுகள் விழுவதையும் ஹிரோஷிமா மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்ட காலம் வந்திருந்தது. நகர் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தாலும் கூட B-29 போர் விமானங்கள் தங்கள் தலைக்கு மேலே பறந்தால், மக்கள் பங்கர்களுக்குள் ஓடி ஒளிவதை பெரும்பாலும் கைவிட்டுவிட்டிருந்தனர். இதைத் தான் அமெரிக்காவும் எதிர்பார்த்தது. இதனால் தான் B-29 போர் விமானங்களை வைத்து பல மாதங்கள் ஹிரோஷிமா மக்களுக்கு விளையாட்டு காட்டி ஏமாற்றி வந்தது.