இந்திய தயாரிப்புகளுக்கு பெரும் பாதிப்பு வரும்....
சீனாவின் கரன்சி மதிப்பு குறைப்பால் டாலரின் மதிப்பு அதிகரிக்க, ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டது. இதனால், இந்தியாவின் இறக்குமதிகளுக்கு அதிக டாலர்களை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதே போல சீன கட்டுமானத்துறையை நம்பியிருந்த நமது இரும்பு, எஃகு ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் அடி விழலாம். இதனால், இந்திய கனிமத்துறையில் ஆரம்பித்து இரும்பு ஏற்றுமதியாளர்கள் வரை வீழ்ச்சியை சந்திக்க நேரிடும்.
அதே போல சீன ஏற்றுமதி பொருட்களின் விலை குறையும் என்பதால் அவை இந்தியாவிலும் குவியும் நிலை உருவாகும். குறிப்பாக சீன செல்போன்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் இன்னும் விலை குறைவாக மற்ற நாடுகளை சென்றடையும். இந்தியாவில் இவை குவிந்தால், இந்திய தயாரிப்புகளுக்கு பெரும் பாதிப்பு வரும்.
அதே நேரம் டாலரின் மதிப்பு அதிகரிப்பால் இந்திய ஏற்றுமதிகளுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டும். ஆனால், கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார சரிவு ஒட்டு மொத்த ஐரோப்பாவையே சிக்கலில் மாட்ட வைத்திப்பதால், ஐரோப்பாவை சார்ந்த இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, சாப்ட்வேர் துறை உள்பட, பிரச்சனை தான்.
அதே போல டாலரின் மதிப்பு அதிகரிப்பால் இந்தியாவின் பெட்ரோலிய இறக்குமதிக்கு அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்திருந்தாலும் இறக்குமதிக்கு அதிக செலவாகும் என்பதால், கச்சா எண்ணெய் விலை வீழ்ந்தும் இந்தியாவுக்கு லாபம் இல்லை.
ரூபாயின் மதிப்பை அதிகரிக்க வேண்டுமானால், நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் நம்மிடம் இருப்பில் உள்ள அன்னிய செலாவணியான டாலர்களை விற்பது தான். இதன்மூலம் ரூபாய் மதிப்பு அதிகரிக்கும். ஆனால், இதனால் கிடைக்கும் லாபம் பெரிதல்ல.
காரணம், அடுத்த மாதம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் துறை தனது கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதனால், அமெரிக்க வங்கிகளுக்கு டாலர் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் டாலரின் மதிப்பு மேலும் உயரும். இதன் காரணமாக, டாலர் பங்குகளில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை உயரும். அப்போது இந்திய பங்குச் சந்தைகளில் பணம் போட்டுள்ள பெரும் முதலீட்டாளர்கள் தாங்களாகவே அதை அமெரிக்காவுக்கு இடம் மாற்ற வாய்ப்புண்டு. அந்த நிலைமையில் டாலரின் மதிப்பு மேலும் அதிகரித்து ரூபாயின் மதிப்பு மேலும் சரிய வாய்ப்புண்டு. இதனால் இருக்கும் டாலர்களை பத்திரமாக வைத்திருப்பதே நமக்கு நல்லது.