மக்கள் தொகையைக் குறைக்க கொரோனாவை கண்டுக்காமல் இருக்கிறதா ஹூ.. உலா வரும் பொய்ச் செய்தி!
டெல்லி: உலக மக்கள் தொகையை குறைக்க கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனம் தவறான தகவல்களை தருவதாக இத்தாலிய மருத்துவர்கள் புதிதாக கண்டறிந்ததாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் உலா வருகிறது. இந்த தகவலில் உண்மை இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் வந்தாலும் வந்தது, அன்று முதல் தினம் ஒரு தகவல் சமூகவலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. இதில் பாதி உண்மை, பாதி கட்டுக் கதைகளாக உள்ளன. அண்மையில் ஒரு தகவல் உலா வருகிறது.
அதில் கொரோனா வைரஸ் குறித்து இத்தாலிய மருத்துவர்கள் சில ரகசியங்களை கண்டறிந்ததாக ஒரு தகவல்கள் உலா வருகின்றன. அதில் கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனம் தவறான தகவலை கொடுத்து மக்கள் வழி நடத்துவதாகவும் அனைவரும் தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கவும் உலக மக்கள் தொகையை குறைக்கவும் இவ்வாறு அந்த நிறுவனம் செய்வதாக ஒரு தகவல் வெளியானது.
மகாராஷ்டிராவில் இருந்து ஹரித்துவாருக்கு ரயிலில் திரும்பிய 87 பேருக்கு கொரோனா பாதிப்பு
சிகிச்சைகள்
அதுபோல் இத்தாலி மருத்துவர்கள் கண்டறிந்ததாக கூறப்படும் கட்டுரையில் கொரோனா குறித்த சிகிச்சைகள், நோயின் தன்மை, நோய் உருவானது எப்படி, இறப்பின் முக்கிய காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக கொரோனா வைரஸ் ஒரு வைரஸே அல்ல என்றும் அது பாக்டீரியா என்றும் கூறப்பட்டுள்ளது.
பேஸ்புக்
அது போல் நோய் எதிர்ப்பி எனப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் கொரோனாவை குணப்படுத்தும் என்றும் கொரோனா வைரஸ் நோயாளிகளின் இறப்பிற்கு முக்கிய காரணம் ரத்த உறைதல்தான் காரணம் என்றும் நிமோனியா அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செயற்கை சுவாச கருவிகளோ தீவிர சிகிச்சை பிரிவுகளோ தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேற்கண்டவற்றை இத்தாலி மருத்துவர்கள் கண்டறிந்ததாக பேஸ்புக், வாட்ஸ் ஆப்பில் தகவல்கள் உலா வருகின்றன.
சமூகவலைதளங்கள்
உண்மை என்னவெனில் சமூக வலைதளங்களில் வைரலாகும் செய்திகள் மக்களை திசை திருப்பும் செயலாகும். கொரோனா வைரஸா அல்ல பாக்டீரியாவா என கண்டறிய லான்செட் ஆய்வறிக்கையை படித்து பார்க்க வேண்டும். லான் செட் ஆய்வறிக்கையில் கொரோனா வைரஸ் குறித்த மரபணுத் தன்மை மற்றும் தொற்றுநோய் குறித்த தகவல்கள் இருக்கும். அதை படித்து பார்த்தால் கொரோனா வைரஸா பாக்டீரியாவா என தெரியவரும்.
தொற்று
அறிவியல் ரீதியாக பார்த்தோமானால் ஆன்டீபயாட்டிக்குகள் கொரோனா வைரஸை குணப்படுத்தாது. இந்த ஆன்டிபயாடிக்குகள் இரண்டாம் நிலை மற்றும் இணை பாக்டீரியா தொற்றுகளை எதிர்க்கவே உதவுகின்றன. கோவிட் 19 நோயாளிகள் இறக்க முக்கிய காரணமாக நிமோனியா அல்ல என்றும் ரத்த உறைதல் என்றும் கூறப்படுகிறது. இதுதவறான தகவல். கொரோனா நோயாளிகளுக்கு ரத்தம் உறைதல் என்பது ஒரு பிரச்சினையாக காணப்படுகிறது. இதனால்தான் உலக சுகாதார நிறுவனமும் ரத்தம் உறைதலை தடுக்க குறைந்த எடையிலான மூலக்கூறுகள் கொண்ட ஹெபரின் மருந்துகளை கொடுக்க அறிவுறுத்தியுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவுகள்
ரத்தம் உறைதல்தான் கொரோனா நோயாளி உயிரிழக்க முக்கிய காரணம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை, நுரையீரல் கோளாறே பெரும்பாலான கொரோனா நோயாளி உயிரிழப்பிற்கு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். அதுபோல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செயற்கை சுவாச கருவிகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள் தேவையில்லை என்பது தவறான தகவல்.
சிறுநீரக கோளாறு
உண்மையில் பல்லுறுப்பு கோளாறு, சிறுநீரக கோளாறு, தீவிர சுவாச கோளாறுகளுடன் உள்ள கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு செயற்கை சுவாசம் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே மக்கள் தொகையை குறைக்க உலக சுகாதார நிறுவனம் மருத்துவர்களை தவறாக வழிநடத்துவதாக கூறுவது தவறான தகவல், அதுபோல் இன்டர்நெட்டில் உலா வரும் கட்டுரையிலும் உண்மை இல்லை.