Fact check: குடியரசு தலைவர் திறந்து வைத்த புகைப்படத்தில் இருப்பவர் நேதாஜியா இல்லை நடிகரா?
டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை திறந்து வைத்த படத்தில் இருப்பவர் நேதாஜி இல்லை, அவரை போல இருக்கும் நடிகர் என ட்விட்டரில் ஒரு சாரார் பதிவிட்டு வருகின்றனர்.
சுபாஷ் சந்திர போஸ் நமது நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட முக்கிய தலைவர்களில் ஒருவர். பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராட நம் நாட்டின் முதல் ராணுவத்தைக் கட்டமைத்த பெருமைக்கு சொந்தக்காரர்.
இவர் ஒடிசாவின் கட்டக் நகரில் கடந்த 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி பிறந்தவர், இவரது 125ஆவது பிறந்த நாள் சனிக்கிழமை நாடு முழுவதும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நேதாஜியின் சாதனைகளைச் சிறப்பிக்கும் வகையில் நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மேலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை நேதாஜியின் புகைப்படத்தையும் திறந்து வைத்தார். இந்தப் புகைப்படம்தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. குடியரசுத் தலைவர் திறந்து வைத்த புகைப்படத்தில் இருப்பவர் நேதாஜியே இல்லை என்றும் அவர் வேடத்தில் நடித்த நடிகர் என்றும் ஒரு சாரார் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதாவது அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் பிரபல நடிகர் புரோசென்ஜித் சாட்டர்ஜி என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கிய கும்னாமி என்ற படத்தில் நேதாஜியாக நடித்தவர்தான் புரோசென்ஜித் சாட்டர்ஜி.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டரில், "அயோத்தி ராமர் கோயிலுக்கு ஐந்து லட்ச ரூபாய் நன்கொடை அளித்த பிறகு, நடிகர் புரோசென்ஜித் சாட்டர்ஜியின் புகைப்படத்தைத் திறந்து வைத்து நேதாஜிக்கு மரியாதை செலுத்தியுள்ளார் நம் குடியரசுத் தலைவர். கடவுள்தான் இந்த தேசத்தைக் காப்பாற்ற வேண்டும். ஏனென்றால் அரசு நிச்சயம் தேசத்தைக் காப்பாற்றாது" என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீடையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இருப்பினும், அந்த குடியரசுத் தலைவர் திறந்து வைத்து நேதாஜி புகைப்படத்தை அடிப்படையாக வைத்து வரையப்பட்ட ஒன்று என்றும் தேவையின்றி சிலர் பொய்யான செய்திகளைப் பரப்பி வருவதாகவும் சிலர் ட்வீட் செய்துள்ளனர். ராஷ்டிரபதி பவனில் திறந்து வைக்கப்பட்ட நேதாஜியின் ஓவியம் அவரது வம்சாவளியைச் சேர்ந்த ஜெயந்தி போஸ் ரக்ஷித் என்பவரிடமிருந்து பெறப்பட்ட புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டது.
இந்த ஓவியத்தை வரைந்தவர் பத்ம ஸ்ரீ விருது பெற்ற பரேஷ் மைட்டி என்ற ஓவியர். இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பாக அரசு தரப்பில் எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை என்றாலும்கூட குடியரசுத் தலைவர் திறந்த வைத்தது நடிகரின் புகைப்படம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
Fact Check
வெளியான செய்தி
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை திறந்து வைத்த படத்தில் இருப்பவர் நேதாஜி இல்லை, அவரை போல இருக்கும் நடிகர்
முடிவு
குடியரசுத் தலைவர் திறந்து வைத்தது நேதாஜியின் புகைப்படத்தை அடிப்படியாக வைத்து வரையப்பட்ட ஓவியம். இந்த ஓவியத்தை வரைந்தவர் பத்ம ஸ்ரீ விருது பெற்ற பரேஷ் மைட்டி என்ற ஓவியர்.