கொரோனாவை குணப்படுத்துமா ஆஸ்பிரின் மாத்திரை? உண்மை என்ன?
சென்னை: கொரோனா ஒரு பாக்டீரியாதான் என்றும் ஆஸ்பிரின் மாத்திரை மூலம், கொரோனா பரவலை குணப்படுத்த முடியும் என்றும் வாட்ஸ்அப்பில் ஒரு போலி தகவல் பரவி வருகிறது.
இந்த பாக்டீரியா ரத்த உறைவு உருவாக வழிவகுக்கிறது என்றும் எனவே நோயாளியின் மரணத்திற்கு காரணமாகிறது என்றும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனி COVID-19ஐ முறியடித்துவிட்டதாகவும் அது கூறுகிறது.
இது ஒரு போலி தகவல். முதலில் COVID-19 ஒரு வைரஸ் என்று நிறுவப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இப்போதைக்கு, அதை குணப்படுத்த வேண்டுமானால் அலோபதியில் எந்த சிகிச்சையும் இல்லை. தடுப்பூசியை பரிசோதிக்கும் சோதனை கட்டத்தில் பல நிறுவனங்கள் இன்னும் உள்ளன. சில நிறுவனங்கள் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசி கிடைக்கக்கூடும் என்று கூறியுள்ளன.
இருப்பினும், அனஸ்தீசியா மற்றும் அனல்ஜீசியா இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் குறைந்த அளவிலான ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வது ஓரளவு கொரோனா பாதிப்பிலிருந்து உடலை காக்க உதவும் என கூறப்பட்டிருந்தது. ஆஸ்பிரின் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்ட நோயாளிகள், தீவிர சிகிச்சைபிரிவில் சேர்க்க வேண்டிய வாய்ப்பு 43 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது. 44 சதவீதம் பேர் வெண்டிலேட்டரில் வைக்கப்பட வேண்டிய வாய்ப்பை குறைப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டது.
இருப்பினும் இந்த ஆய்வு முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. அதற்குள்ளாக சிலர் கதை கட்டிவிட்டனர்.
Fact Check
வெளியான செய்தி
கொரோனா வைரஸ் ஒரு பாக்டீரியா மற்றும் ஆஸ்பிரின் மூலம் குணப்படுத்த முடியும்.
முடிவு
கொரோனா வைரஸ் என்பது இதுவரை எந்த மருந்துகளாலும் அழித்துவிட முடியாத வைரஸ் ஆகும்.