என்னாது.. கோவிட் தடுப்பூசி போட்ட புடின் மகள் உயிரிழப்பா?.. வேகமாக பரவும் பொய் செய்தி!
மாஸ்கோ: ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொண்ட அதிபர் விளாதிமிர் புடினின் மகள் உயிரிழந்துவிட்டதாக தவறான ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியில் துளி கூட உண்மையில்லை.
உயிர்க் கொல்லியான கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் போட்டி போட்டு கொண்டு இறங்கியுள்ளன. இந்த நிலையில் ரஷ்யாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.
தடுப்பு மருந்தை கண்டுபிடித்த முதல் நாடு ரஷ்யா என்றும் சொல்லப்பட்டு வந்தது. இதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாகவும் அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்த தடுப்பு மருந்தின் முதல் டோஸை எனது மகளுக்கு கொடுத்துள்ளோம். அவருக்கு ஆரம்பத்தில் காய்ச்சல் இருந்தது.
அது உடனடியாக சரியாகிவிட்டது. அவரது உடலில் ஆன்டிபாடிகள் அதிகரித்து அவர் நலமுடன் இருப்பதாக புடின் தெரிவித்திருந்தார். எனினும் இந்த தடுப்பு மருந்தின் நம்பகத்தன்மை குறித்து விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பிய நிலையிலும் இந்த மருந்தை புடின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் புடின் மகள் குறித்தும் ரஷ்யாவின் தடுப்பு மருந்து குறித்தும் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.
அதில் ஒன்று, தடுப்பு மருந்து போடப்பட்ட புடின் மகள் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. அதாவது அவருக்கு இரண்டாவது டோஸ் மருந்து கொடுக்கப்பட்டவுடன் அவரது உடலின் வெப்பநிலை அதிகரித்ததாகவும் அதனால் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு இறந்ததாகவும் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள்.
இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அவிகன் மருந்து அறிமுகம் .. டாக்டர் ரெட்டி நிறுவனம்
இந்த தகவல்களில் துளிக் கூட உண்மை இல்லை. எனவே இதை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இது போல் பொய்யான செய்தியை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கைகள் வலுக்கின்றன.