Fact check: பொது இடத்தில் சில்மிஷம்.. ஓங்கி அறைவிட்ட குஷ்பு.. அது பாஜக தொண்டர் கிடையாதுங்க
சென்னை: பாஜக தொண்டர் ஒருவரை குஷ்பு, கன்னத்தில் அறைந்து விட்டார் என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.
கடந்த 12ஆம் தேதி பாஜகவில் இணைந்தார் குஷ்பு. அதற்கு முன்பு அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.
பாஜகவில் சேர்ந்தவுடன் பாஜக தொண்டர்கள் குஷ்புவிடம், பொது இடத்தில் முறைகேடாக நடந்து கொண்டனர் என்று கூறி ஒரு வீடியோ ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.
இந்த வீடியோவின் நம்பகத்தன்மை பற்றி 'ஒன் இந்தியா' ஆய்வு மேற்கொண்ட போது, அது போலி வீடியோ என்பது தெரியவந்தது. பொது இடத்தில் தன் மீது கை வைத்த ஒரு வாலிபரை குஷ்பு கன்னத்தில் அறைந்தது உண்மைதான். ஆனால் இந்த சம்பவம் நடைபெற்றது 2019 ஆம் தேதி ஏப்ரல் 12 ஆம் தேதி.
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு பெங்களூரு வந்திருந்தார் குஷ்பு. அப்போதுதான் ஒரு நபர் மோசமாக நடந்துகொள்ள, கோபத்தில் குஷ்பு அவர் கன்னத்தில் அறைந்தார்.
இந்த சம்பவம் பல்வேறு மீடியாக்களில் அப்போது வெளியானது. சில்மிஷம் செய்த நபர் மீது குஷ்பு போலீசில் புகார் தரவில்லை. காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
தி வீக், இதழ் வெளியிட்ட செய்தியில், சில்மிஷம் செய்த நபர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை செய்து வந்ததாக கூறப்படுகின்றது. எனவே குஷ்பு பாஜகவில் சேர்ந்ததற்கும், இந்த சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பது தான் உண்மை.
Fact Check
வெளியான செய்தி
பாஜக தொண்டரை குஷ்பு, கன்னத்தில் அறைந்தார்.
முடிவு
இது, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் தொடர்பான பழைய வீடியோ. இதற்கு, பாஜக தொண்டர்கள் தொடர்பு கிடையாது.