ஊழியர்களுக்கு கொரோனா பாதித்தால் நிறுவன உரிமையாளர் கைது.. பரவும் போலி மெசேஜ்
டெல்லி: ஊழியர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால், அந்த நிறுவன உரிமையாளரை கைது செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று, அரசு தெரிவித்துள்ளது.
லாக்டவுனில், சில துறைகளுக்கு மட்டும் தளர்வு அறிவித்துள்ளது அரசு. இதையடுத்து, அதுபோன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டின் பேரில், நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்து ஒரு செய்தி, வைரலாக சுற்றி வந்தது.
கேள்வி, பதில் பாணியில், இந்த செய்தி வைரலாக சுற்றி வருகிறது. வேலை செய்யும் எந்தவொரு நபராவது பாதிக்கப்பட்டிருந்தால், யார் பொறுப்பாவார்கள்?
இதற்கு பதில், '100 சதவீதம் தொழிற்சாலை உரிமையாளர்தான் பொறுப்பு. உரிமையாளர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். தொழிற்சாலை சீல் வைக்கப்படும். இதில் தொடர்புடைய அனைத்து நபர்களும் 14-28 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். இவ்வாறு கூறுகிறது அந்த மெசேஜ்.
ஆனால் உள்துறை அமைச்சகம், லாக்டவுன் தளர்வு அறிவிப்பின்போது, இவ்வாறு கூறவில்லை. பேரழிவு மேலாண்மை சட்டம் 2005ன் கீழ், அபராதம் விதிப்பு பொருந்தும்.
பணியிடங்கள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கடுமையான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது. ஊழியர்களின் சமூக விலகல் மற்றும் சுத்திகரிப்பு அவசியம் என்று உத்தரவு கூறுகிறது. ஆனால், நிறுவன உரிமையாளர் கைது செய்யப்படுவார் என அந்த உத்தரவு கூறவில்லை.