மே.வங்கத்தில் காளியின் சிலை அவமதிக்கப்பட்டதா? வைரலாகும் புகைப்படம்.. உண்மை என்ன?
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் காளியின் சிலையை சமூக விரோதிகள் அவமதித்து விட்டதாக பொய்யான தகவல் பரவி வருகிறது. இணையத்தில் இது தொடர்பாக வதந்தி பரவுவதாக மேற்கு வங்க போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் பகுதியில் இருக்கும் காளி கோவில் மிகவும் பிரபலம். துர்கை அம்மன் வழிபாட்டில் மேற்கு வங்க மக்கள் ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முர்ஷிதாபாத் பகுதியில் இருக்கும் காளி கோவிலில் இருக்கும் காளியின் முகத்தில் கரி பூசப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலானது.
உடல் முழுக்க கருப்பு கரி பூசப்பட்ட புகைப்படம் வைரலானது. இதை பேஸ்புக்கில் பகிர்ந்து மேற்கு வங்க பாஜக எம்பி அர்ஜுன் சிங், சமூக விரோதிகள் இந்து மதத்தை அவமதிக்க வேண்டும் என்று இப்படி செய்துள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மமதாவின் ஜிஹாதி அரசியல் காரணமாக இந்து கடவுள் அவமதிக்கப்படுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் இந்த தகவலை அம்மாநில போலீஸ் மறுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் காளியின் சிலையை சமூக விரோதிகள் அவமதித்து விட்டதாக பொய்யான தகவல் பரவி வருகிறது என்று அம்மாநில போலீஸ் கூறியுள்ளது. அதில், இந்த கோவில் சிலையை யாரும் அவமதிக்கவில்லை.
இங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிலை சேதம் அடைந்துள்ளது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து இது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கொல்கத்தா போலீஸ் கூறியுள்ளது. மேலும் இது தொடர்பாக வதந்தி பரப்பிய பாஜக எம்பி அர்ஜுன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில போலீஸ் கூறியுள்ளது.
Fact Check
வெளியான செய்தி
மேற்கு வங்கத்தில் காளியின் சிலையை சமூக விரோதிகள் அவமதித்து விட்டதாக பரவும் தகவல்.
முடிவு
இந்த தகவலை அம்மாநில போலீஸ் மறுத்துள்ளது. இந்த கோவில் சிலையை யாரும் அவமதிக்கவில்லை.இங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிலை சேதம் அடைந்துள்ளது.