ஆன்லைனில் ஜிஎஸ்டி பணம் திரும்ப தரப்படுகிறது என்பது பொய் செய்தி!
டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஜி.எஸ்.டி. தொகையும் ஆன்லைனில் திருப்பி தரப்பட்டு வருகிறது என பரவி வரும் செய்தி பொய் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 40 நாட்கள் லாக்டவுன் முடிவடைந்துள்ளன.
தற்போது மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருப்பதால் வங்கி கடன்கள் உள்ளிட்ட பலவற்றில் அரசு சலுகைகளை அறிவித்திருக்கிறது.
இதை பயன்படுத்திக் கொண்டு ஒரு கும்பல், ஆன்லைனில் ஜி.எஸ்.டி. தொகை திரும்ப செலுத்தப்படுகிறது. ஆகையால் கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள் என ஒரு செய்தியை பரப்பி வருகிறது. ஆனால் இது உண்மை அல்ல என்று வரிகளுக்கான மத்திய ஆணையம் சிபிஐசி விளக்கம் அளித்திருக்கிறது.
சிபிஐசி தம்முடைய விளக்கத்தில், இத்தகைய விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இத்தகைய போலியான லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம். ஜிஎஸ்டி தொடர்பாக அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் அறிவிப்புகளை பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.