என்னாது தடுப்பூசி போட்டு கொள்ள முதியவர்களை போனில் அழைக்கிறதா மத்திய அரசு?.. நம்பாதீங்க!
டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மூத்த குடிமக்களின் ஆதார் கார்டு, வங்கி கணக்குகளை மத்திய அரசு கேட்பதாக வரும் தகவல்கள் பொய்யானது. அப்படி ஒரு தகவலை மத்திய அரசு கேட்கவே இல்லையாம்.
வரும் ஜனவரி 13-ஆம் தேதி முதல் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத வயதானவர்களை கொரோனா அதிகம் தாக்குவதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த நிலையில் வயதானவர்களை குறி வைத்து ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. சிலர் 12 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். வயதானவர்கள் அதாவது மூத்த குடிமக்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றனவாம்.
அதில் பேசுபவர்கள் ஜனவரி 13-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படுகிறது. அந்த இலவச தடுப்பூசி உங்களுக்கு போட நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். எனவே உங்களது ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு தகவல்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொல் ஆகியவற்றை தருமாறு கேட்கிறார்களாம்.
இதை நம்பி கொடுத்தவுடன் தங்கள் வங்கிக் கணக்குகளில் உள்ள மொத்தப் பணமும் சுரண்டப்படுவதாக புகார் அளிக்கிறார்கள். தடுப்பூசி போடுவதற்கான நெறிமுறைகளே இன்னும் தெளிவாகவில்லை, இதில் ஒரு பக்கம் இவர்கள் ஏமாறுகிறார்கள். இது போன்ற முறைகேடு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
எனவே தடுப்பூசி போட்டுக் கொள்ள மூத்த குடிமக்களின் தகவல்களை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கேட்கவில்லை என மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. எனவே போலி நபர்களை கண்டு ஏமாற வேண்டாம்.
Fact Check
வெளியான செய்தி
முதியவர்களுக்கான கொரோனா தடுப்பு மருந்து ஒதுக்கீடு தயார் நிலையில் இருக்கிறது என்று இந்திய மருந்து ஆணையம் தொலைபேசியில் அழைத்து வங்கி தகவல்களை கேட்கிறது.
முடிவு
இந்திய மருந்து ஆணையம் யாரையும் அழைப்பதில்லை. அது ஒரு மோசடியான அழைப்புகளாகும்.