சட்டப் படிப்புகளுக்கான கிளாட் 2020 தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதாக பரவும் பொய் செய்தி
டெல்லி: பொது சட்டப் படிப்புகளுக்கான கிளாட் 2020 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி ஷேர் செய்யப்படுகிறது. ஆனால் இது பொய்யான செய்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் கிளாட் 2020 தேர்வுகள் குறித்து ஒரு செய்தி பரப்பப்படுகிறது. அதில், தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களுக்கான குழு கடந்த ஆக.25-ந் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில் வரும் செப்டம்பர் 7-ந் தேதி நடைபெற உள்ள கிளாட் 2020 தேர்வுகளை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஷேர் செய்யப்படும் செய்தி பொய்யானது என்றும் மாணவர்கள் இதனை நம்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஏற்கனவே திட்டமிட்டபடியே செப்டம்பர் 7-ந் தேதி கிளாட் 2020 தேர்வுகள் நடைபெறும்; இதற்காக அட்மிட் கார்டுகளை விரைவில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 22 தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களின் இளங்கலை, முதுகலை சட்டப்படிப்புகளில் சேர இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கொரோனா வைரஸால் இந்த கிளாட் தேர்வுகள் பல முறை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. ஏப்ரல் மாதமே நடைபெற வேண்டிய இந்த தேர்வு மே 24-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஆகஸ்ட் மாதத்துக்கும் ஒத்தி வைக்கப்பட்டு தற்போது செப்டம்பர் 7-ந் தேதி நடைபெற உள்ளது.
Fact Check
வெளியான செய்தி
கிளாட் 2020 தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு என்பது செய்தி
முடிவு
கிளாட் 2020 தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படவில்லை. செப்டம்பர் 7-ந் தேதி திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்.