கால்வன் பள்ளத்தாக்கில் இந்திரா காந்தி ராணுவ வீரர்களிடையே உரையாற்றினாரா? பொய் செய்தி என விளக்கம்
டெல்லி: லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ராணுவ வீரர்களிடையே உரையாற்றுகிற படம் என சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுவது பொய்யான படம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் ஒரு படத்தை பகிர்ந்து வருகின்றனர். அதாவது தற்போது சீனாவுடன் மோதல் நிகழ்ந்த கால்வன் பள்ளத்தாக்கில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ராணுவ வீரர்களிடையே உரையாற்றினார் என்பதாக அந்த படம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
அனைத்து சமூக வலைதளங்களும் படுவேகமாக இந்த படம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திரா காந்தி, ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய படம் அல்ல இது என்பது உறுதியாகி உள்ளது.
1971-ம் ஆண்டு லே பகுதியில் ராணுவ வீரர்களிடம் இந்திரா காந்தி உரையாற்றிய படம்தான் அது. தற்போது மோதல் நிகழ்ந்த இடத்தில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ளது லே. இந்த படத்தை பிடிஐ ஏஜென்சிதான் படம்பிடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.