விவசாய சட்டங்களின் நன்மைகள் குறித்து டிச. 25-ல் விரிவாக விளக்கம் தருகிறேன்... பிரதமர் மோடி உறுதி
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களின் நன்மைகள் குறித்து டிச. 25-ல் விரிவாக விளக்கம் தர இருப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் குளிர்பதன உள்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகளுக்கான அடிக்கல்லை நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது:
விவசாயிகள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும், பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை முறையாக சேமித்து வைக்கும் வசதி இல்லை என்றால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். நவீன சேமிப்பு வசதிகள், குளிர்பதன வசதிகள் மற்றும் புதிய உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் ஆகியவற்றுக்குப் தொழில்துறை பங்களிக்க வேண்டும். இது விவசாயிகளுக்கும், நாட்டுக்கும் பயனளிக்கும்.
வளர்ந்த நாடுகளில் உள்ள விவசாயிகளுக்குக் கிடைக்கும் வசதிகள் இந்திய விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும். இதை இனிமேலும் தாமதப்படுத்த முடியாது. வேகமாக மாறிவரும் உலகத்தில், இந்திய விவசாயிக்கு வசதிகளும், நவீன முறைகளும் கிடைக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவே மிகவும் தாமதம்.
விவசாய சீர்திருத்தச் சட்டங்கள் குறித்த ஆலோசனைகள் கடந்த இருபது வருடங்களுக்கும் மேல் நடைபெற்று வருகின்றன. இவை ஏதோ ஒரே இரவில் கொண்டு வரப்படவில்லை. நாட்டின் விவசாயிகள், விவசாய அமைப்புகள், வேளாண் நிபுணர்கள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் முற்போக்கு விவசாயிகள் ஆகியோர் விவசாயத்துறையின் வளர்ச்சிக்காக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இந்தச் சீர்திருத்தங்கள் குறித்து இடம் பெற்றன. அவை சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. ஏற்கனவே விவாதிக்கப்பட்ட சீர்திருத்தங்களும் தற்போது செய்யப்பட்டுள்ளவையும் வெவ்வேறானவை அல்ல.
எட்டு வருடங்களுக்கும் மேலாக சுவாமிநாதன் குழுவின் அறிக்கையை முந்தைய அரசுகள் செயல்படுத்தவில்லை. விவசாயிகளின் போராட்டம் கூட இவர்களின் மனசாட்சியை உலுக்கவில்லை. விவசாயிகளுக்காக அரசு அதிகம் செலவு செய்யத் தேவையில்லை என்பதை இவர்கள் உறுதி செய்தனர்.
எதிர்க்கட்சிகள் விவசாயிகளை வைத்து அரசியல் செய்யும் அதே நேரம், தமது அரசு விவசாயிகளுக்காக தன்னை அர்ப்பணித்து உள்ளது. விவசாயிகளை உணவளிப்பவர்களாகக் கருதுகிறேன். சுவாமிநாதன் குழுவின் அறிக்கை இந்த அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் செய்த செலவை விட ஒன்றரை மடங்கு அதிகம் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது.
பிரதமரின் விவசாயி திட்டத்தின் கீழ், சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு, அந்தப் பணம் ஒவ்வொரு விவசாயிக்கும் சென்றடைகிறது. முந்தைய அரசுகள் விவசாயிகளின் மீது உண்மையாகவே அக்கறை கொண்டு செயல்பட்டு இருந்தால், சுமார் 100 பெரிய பாசனத் திட்டங்கள் பல தசாப்தங்களாக கிடப்பில் கிடந்திருக்காது.
விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் - விவசாயிகளுக்கு மோடி உறுதி
தற்போது இந்தத் திட்டங்களை துரித கதியில் செயல்படுத்த, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை நமது அரசு செலவழித்துக் கொண்டிருக்கிறது. தேனீ வளர்ப்பு, விலங்குகள் நலம் மற்றும் மீன்வளம் ஆகியவற்றையும் விவசாயத்துக்கு இணையாக அரசு ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.
மீன்வளத் துறையை ஊக்குவிப்பதற்காக நீலப்புரட்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பிரதமர் மத்சய சம்பட யோஜனா என்னும் திட்டமும் சில காலத்துக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த முயற்சிகளின் காரணமாக, மீன் உற்பத்தியில் இதற்கு முன் செய்யப்பட்ட அனைத்து சாதனைகளும் முன் எடுக்கப்பட்டுள்ளன.
அரசால் சமீபத்தில் செய்யப்பட்டுள்ள வேளாண் சீர்திருத்தங்களை சந்தேகப்படுவதற்கான எந்த காரணமும் இல்லை. அவற்றில் எந்தப் பொய்களும் இல்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை அமைப்பை நீக்குவது அரசின் நோக்கம் என்றால், சுவாமிநாதன் குழுவின் அறிக்கையை அரசு ஏன் செயல்படுத்த வேண்டும்?
விவசாயிகளின் நலன் கருதி, விதைப்பதற்கு முன்பே குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரின் போதும், குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் தொடர்ந்து நடைபெற்றது. குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு அதிகரித்ததோடு, குறைந்தபட்ச ஆதரவு விலையில் அதிக கொள்முதல்களையும் செய்தோம்.
நாடு ஒரு காலத்தில் பருப்புப் பஞ்சத்தைச் சந்தித்தது. நாட்டில் பற்றாக்குறை நிலவியதைத் தொடர்ந்து வெளிநாட்டிலிருந்து பருப்புகள் வாங்கப்பட்டன. தமது அரசு 2014-இல் கொள்கையை மாற்றியது. 2014-க்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் வெறும் 1.5 இலட்சம் மெட்ரிக் டன் பருப்புகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், 112 இலட்சம் மெட்ரிக் டன் பருப்புகளை விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் தமது அரசு வாங்கியது.
இன்றைக்கு பருப்பு விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. விலைகள் குறைந்துள்ளன, ஏழைகள் பயனடைந்துள்ளனர்.
மண்டியில் அல்லது மண்டிக்கு வெளியில், எங்கு இலாபம் அதிகம் கிடைக்கிறதோ அங்கு, தமது விளைபொருள்களை விவசாயி விற்கலாம் என்ற சுதந்திரத்தை புதிய சட்டம் வழங்கியுள்ளது. புதிய சட்டத்திற்குப் பிறகு ஒரே ஒரு மண்டி கூட மூடப்படவில்லை. வேளாண் பொருள்கள் சந்தைப்படுத்துதல் குழுக்களை நவீனப்படுத்த ரூபாய் 500 கோடிக்கும் அதிகமாக தமது அரசு செலவழித்து வருகிறது.
பலவருடங்களாக நாட்டில் அது நடைமுறையில் இருப்பதுதான் விவசாய ஒப்பந்தங்கள். வேளாண் ஒப்பந்தத்தில், பயிர்கள் அல்லது விளைபொருள்கள் மட்டுமே பரிவர்த்தனை செய்யப்படும் என்றும், விவசாயியிடமே நிலம் இருக்கும். நிலத்தின் உரிமைக்கும், ஒப்பந்தத்திற்கும் தொடர்பில்லை. இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால் கூட முழுப் பணமும் விவசாயிக்குக் கிடைக்கும். புதிய சட்டத்தின் மூலம் எண்ணற்ற இலாபங்கள் விவசாயிகளுக்குக் கிடைக்கும்.
விவசாய சட்டங்களின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாளான டிசம்பர் 25 அன்று இது குறித்து தாம் மீண்டும் பேச இருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.