டெல்லி பலாத்கார வழக்கு:4 குற்றவாளிகளுக்கான தண்டனை வெள்ளியன்று அறிவிப்பு!!
டெல்லி: டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் 4 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் குற்றவாளிகள் என்று தெற்கு டெல்லி விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
டெல்லி பலாத்கார வழக்கு:4 குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை அறிவிப்பு! தூக்கு விதிக்கப்படும்?
4 குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாகுர் சிங் ஆகியோர் மீது, பிரிவு 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 376 (2),(ஜி) (கூட்டுப்பாலியல்), 377 (இயற்கைக்கு விரோதமாக குற்றம் இழைத்தல்), 395 (கொள்ளை), 396 (கொள்ளையடிக்கும்போது கொலை செய்தல்), 120பி (உள்நோக்கத்துடன் குற்றம்புரிதல்), 364 (கொலை செய்யும் நோக்கில் கடத்திச் செல்லுதல்), தவறான நோக்குடன் கடத்தி ரகசியமாக குற்றம்புரிதல் (365), 394 (வழிப்பறியில் ஈடுபடும்போது காயம் ஏற்படுத்துதல்), 412 (வழிப்பறியில் ஈடுபடும்போது சட்டவிரோதமாக சொத்துகளைக் கொள்ளையடித்தல்) ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது சார் கோட்டாட்சியரிடம் அளித்த மரண வாக்குமூலம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடுமை நேர்ந்தபோது நேரில் பார்த்த அவரது நண்பர் அளித்த சாட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில் இத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த 4 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 11 மணி முதல் என்ன தண்டனை விதிப்பது என்பது தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
குற்றவாளிகள் 4 பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குற்றவாளிகளின் குற்றச் செயலின் தன்மையைப் பொறுத்து குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்றும் தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது என்றும் வாதிட்டனர். ஆனால் அரசுத் தரப்பிலோ குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மதிய உணவு இடைவேளையின்றி தொடர்ந்து நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவில் வரும் வெள்ளிக்கிழமையன்று தண்டனை விதிக்கப்படும் என்று டெல்லி நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.