திருப்பதிக்கு செப்14,15-ல் யாரும் வராதீங்க.. 48 மணி நேரம் முழு அடைப்பு- போராட்டக் குழு!
திருப்பதி: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 48 மணி நேர முழு அடைப்புப் போராடத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால் செப்டம்பர் 14,15 தேதிகளில் திருப்பதிக்கு வர வேண்டாம் என்று போராட்டக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாக சீமாந்திராவில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.
இந்நிலையில் திருப்பதியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கான போராட்டக் குழுத் தலைவர் ராமச்சந்திர ரெட்டி, செப்டம்பர் 13-ந் தேதி நள்ளிரவு முதல் 48 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அன்றைய நாளில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு எந்த ஒரு வாகனமும் இயக்கப்படமாட்டாது.
அனைத்து தனியார் வாகன உரிமையாளர்களும் போராட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த 2 நாட்களில் மட்டும் பக்தர்கள் திருப்பதிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.