துபாயில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்ற இந்திய வர்த்தக கண்காட்சி
துபாய்: துபாயில் இந்திய வர்த்தக கண்காட்சி கடந்த 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஃபெஸ்டிவல் சிட்டி இன்டர்கான்டினென்டல் ஹோட்டலில் நடைபெற்றது.
அமீரகத்துக்கான இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் வர்த்தக கண்காட்சியினை துவங்கி வைத்தார். இவ்வர்த்தக கண்காட்சியின் மூலம் இந்தியப் பொருட்களை சந்தைப்படுத்த ஒரு நல் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அமீரகம் இந்தியாவின் ஒரு சிறந்த வர்த்தகப் பங்காளி எனக் குறிப்பிட்டார்.
துபாய் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா, இந்திய வர்த்தக கவுன்சில் தலைவர் பரஸ் சஹ்தாத்புரி, இந்திய வர்த்தக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.
இக்கண்காட்சிக்கு மஸ்கட்டின் சில்வர் ஸ்டார் கார்ப்பரேஷன் ஏற்பாடு செய்திருந்தது. கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட இந்திய மாநிலங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.