ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ: சிட்னிவாசிகள் வெளியேற்றம்
சிட்னி: மேற்கு சிட்னி மற்றும் நியூ சவுத் வேல்ஸில் உள்ள ப்ளூ மவுன்டெய்ன்ஸ் பகுதியில் பரவியுள்ள காட்டுத்தீயால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் கிழக்கு பதியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருக்கும் ப்ளூ மவுன்டெய்ன்ஸ் மற்றும் மேற்கு சிட்னி பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டு பரவியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மொத்தம் 63 இடங்களில் தீப் பற்றி எரிவதாகவும் அதில் 31 கட்டுக்கடங்காமல் உள்ளதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இந்த காட்டுத் தீயால் சிட்னியில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு வீரர்களில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒரு வீடு முற்றிலும் எரிந்துவிட்டது. இந்த தீயால் சிட்னியில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வசந்த காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை உள்ளது.
தீயை அணைக்கும் பணியில் 999 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தீயால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், மின்தடையும் ஏற்பட்டுள்ளது. மக்கள் கண் எரிச்சல் மற்றும் புகை மூட்டத்தால் மூச்சுவிட சிரமப்பட்டு வருகின்றனர்.
மின்சாரம் இல்லாமல் இருக்கும் 730 வீடுகளில் 530 வீடுகளுக்கு இன்று இரவுக்குள் மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.