ஹேப்பி நியூஸ்.. சென்னையில் தொழிற்சாலை துவங்குகிறது "அமேசான்.." சீன இறக்குமதி 'கட்'
சென்னை: அமேசான் நிறுவனம் சென்னையில் தனது உற்பத்தி பிரிவை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் இருந்து தற்போது தனது உற்பத்திப் பொருட்களை இங்கே கொண்டு வருவது இதன் மூலமாக நிறுத்தப்படும்.
மத்திய அரசின், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அமேசான் சென்னையில் தனது உற்பத்தி பிரிவை துவங்க உள்ளதாக முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
ஃபயர் டிவி ஸ்டிக்
ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து பயர் டிவி ஸ்டிக் தயாரிப்பில் அமேசான் ஈடுபட இருக்கிறது. இந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் சென்னையில் உற்பத்திப் பிரிவு துவங்கும் என்று கூறப்படுகிறது. சீனாவில் இருந்துதான் இப்போது பெருமளவுக்கு பயர் டிவி ஸ்டிக் கொள்முதலை அமேசன் செய்து வருகிறது. தாய்வான் நாட்டில் இருந்தும் இந்திய சந்தைக்கு அமேசான் இவற்றை இறக்குமதி செய்து வருகிறது.
சென்னை தொழிற்சாலை
அதேநேரம், இந்தியாவில் இவற்றுக்கான தேவை அதிகரித்து வருவதால், உள்நாட்டிலேயே உற்பத்தி பிரிவை துவங்க உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தி பிரிவை தூங்குவதன் மூலமாக உள்ளூர் பொருளாதாரம் வளர்ச்சி அடையும், கூடுதலாக வேலைவாய்ப்புகள் உருவாகும், இந்தியர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கு வழிவகை பிறக்கும் என்கிறார் இந்தியாவுக்கான அமேசான் நிறுவன தலைவர் அமித் அகர்வால்.
ரவி சங்கர் பிரசாத்
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அமேசான் தலைவர் அமித் அகர்வால் மற்றும் அதன் நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஏற்கனவே ஆலோசனை நடத்தியிருந்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்திக்கு பல்வேறு பெரிய நிறுவனங்களும் முன்வர தொடங்கியுள்ளன. அமேசான் நிறுவனம் தற்போது இந்த பட்டியலில் இணைந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.
10 லட்சம் வேலைவாய்ப்புகள்
ரவிசங்கர் பிரசாத் மேலும் கூறுகையில், அமேசான் நிறுவனம் இந்திய உள்நாட்டு தயாரிப்புகள் மற்றும் ஆயுர்வேதிக் தயாரிப்புகளை தனது இ-காமர்ஸ் கட்டமைப்பு மூலமாக உலகம் முழுமைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் சமீபத்தில் கூறுகையில், 10 லட்சம் வேலைவாய்ப்புகளை 2025 ஆம் ஆண்டிற்கு முன்பாக உருவாக்க வேண்டும் என்பது தங்கள் நிறுவனத்தின் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். அதில் சென்னை ஒரு முக்கிய பங்காற்றப்போகிறது.