யார் தருவார் இந்த அரியாசனம்.. மத்திய அரசு வேலை.. ரொம்ப இஸி.. கவனித்தீர்களா நீங்கள்!
சென்னை: தமிழகத்தில் மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்தே கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.
ஏனெனில் யுபிஎஸ்சி தேர்வு நடத்தும் பல்வேறு மத்திய அரசின் பல்வேறு துறை பணிகள், வருமான வரிதுறை ரயில்வே வேலை, அஞ்சலக வேலை, பாதுகாப்பு துறை, அமைச்சக பணிகள், வங்கி பணிகளில் அண்மைக்காலமாக தமிழகத்தைச் சேர்ந்தவர்களை விட அதிக அளவு மற்ற மாநிலத்தவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
உதாரணமாக தெற்கு ரயில்வேயில் ரயில் பணிகளில் அதிக அளவு வடமாநிலத்தவர் தேர்வு ஆனார்கள். கடந்த ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டும். ரயில்வேயில் கிட்டதட்ட 80 ஆயிரம் வேலைகளுக்கு ஆள் எடுத்தார்கள். இந்த பணிகளுக்கு செல்ல நம் மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டினார்களா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அய்யோ எம்மா என்னை காப்பாத்துங்க.. தீவைத்துக் கொண்டு கதறிய பெண்.. காதில் வாங்காத மக்கள்
விழிப்புணர்வு இல்லை
ஐஏஏஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற சிவில் சர்விஸ் பணிகளில் இருக்கும் ஆர்வம் கூட மத்திய அரசின் மற்ற பணிகள் குறித்து நமது மாணவர்களிடையே இல்லை. இதற்கு முக்கியமான காரணம் போதிய விழிப்புணர்வு இன்மை தான்.. ஆண்டு தோறும் மத்திய அரசு எத்தனை பணிகளுக்கு எத்தனை பேரை எடுக்க போகிறது. எந்த வேலைக்கு என்ன படிக்க வேண்டும். அதை எப்படி படிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு நம்முடைய மாணவர்களுக்கு போய் சேரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆங்கில புலமை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான டிஎன்பிஎஸசி தேர்வில் விண்ணப்பிக்க பல லட்சம் பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் மத்திய அரசு பணிகளில் அதே அளவு ஆர்வம் காட்டுவது கிடையாது. இதற்கு காரணம் மத்திய அரசு பணிகளுக்கு ஆங்கில புலமை அவசியம் என்று நினைப்பது தான். ஆங்கிலப்புலமை அவசியம்தான். ஆனால் எல்லா பணிகளுக்கும் ஆங்கிலம் அவசியம் இல்லை.
ரயில்வே வேலைகள்
ரயில்வே பணிகளுக்கு இந்தி, ஆங்கிலம் மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்பட இந்திய அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் ரயில்வே தேர்வுகள் கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பபடுகிறது. இதில் அலுவலக எழுத்தர், கணக்கு எழுத்தர், டிக்கெட் கலெக்டர், கமர்ஷியல் எழுத்தர், ரயில் எழுத்தர், நூலக எழுத்தர் உள்ளிட்ட பதவிகள் குரூப்-சி பதவிகளாகும். இதற்கான பாடத்திட்டங்களும் ஆண்டுதோறும் மத்திய அரசால் அறிவிக்கப்படுகின்றன. எனவே சரியான முறையில் படித்து எளிதாக வெற்றி பெற முடியும்.
வருமான வரி பணி
இதேபோல் அஞ்சல் துறையிலும் ஏரளாமன பணிகளுக்கு ஆண்டுதோறும் விண்ணப்பிக்க முடியும். தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் அஞ்சல் துறை நடத்தப்படுகிறது. இதில் 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். வருமான வரித்துறையிலும் ஆண்டுதோறும் காலிப்பணியிடங்கள அறிவிக்கப்படுகின்றன. இதில் அதிகாரி பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். மற்ற உதவியாளர் பணிகளுக்கு 12, 10வது படித்தவர்களும் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.
நாட்டில் அதிக வேலை
நாட்டில் அதிக வேலைவாய்ப்பு உள்ள ஒரு துறை என்றால் வங்கி பணிதான். இதற்கு முறையாக தயார் செய்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். இதேபோல் பொதுத்துறை நிறுவனங்ளும் நிறைய காலி பணியிடங்களை அறிவிக்கின்றன. எனவே மத்திய அரசு பணிக்கு செல்ல இன்றைய இளைஞர்கள் அதிக அளவு ஆர்வம் காட்ட ஊக்குவிக்க வேண்டும். இதற்கு மொழியோ, விழிப்புணர்வு இன்மையோ தடையாக இருக்கக்கூடாது.
எதில் மக்களுக்கு ஆர்வம்
தினசரி செய்தி தாள் படிப்பது, குறிப்புகளை எடுப்பது, மத்திய அரசின் எந்த வேலைக்கு எந்த பாடத்திட்டம், எப்படி புத்தகங்களை வாங்குவது உள்ளிட்டவற்றை சரியாக செய்து ஆர்வத்துடன் படித்து தயார் செய்தால் நிச்சயம் மத்திய அரசு பணிகள் தமிழக மாணவர்களுக்கு எட்டும் தூரம் தான். இவ்வளவு தூரம் இதை சொல்ல காரணம். அண்மைக்காலமாக ஐடி பணிகள், வெளிநாட்டு பணிகளில் நம் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
கிராமப்புற மாணவர்கள்
கிராமப்புற மாணவர்களுக்கு 8ம் வகுப்பில் இருந்தே மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை அதற்கு தயார் என்கிற அளவிற்கு வளர்க்க வேண்டும். இதன் மூலம் இனி வரும் போட்டி உலகத்தில் நம் மக்கள் பிரகாசிப்பார்கள். படித்து முடித்து பட்டதாரி ஆன பின்னர் போட்டிக்கு தயார் ஆவதை விட எட்டாம் வகுப்பில் இருந்தே சரியான முறையில் தயார் படித்தினால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மத்திய அரசு பணிகளில் வென்றவர்கள் அவர்களுக்கு வழிகாட்ட முன்வர வேண்டும்.