கணினி அறிவியல் ஆசிரியர்களை நியமிக்க 60 ஆயிரம் வேலையில்லா கணினி பட்டதாரிகள் கோரிக்கை
சென்னை: கணினி அறிவியல் பாடத்தை மற்ற பாடங்களை போன்று கட்டாய பாடமாக கொண்டு வந்து அதற்கு கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என 60000 கணினி ஆசிரியர்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் குமரேசன் வெளியிட்டுள்ள கோரிக்கையில், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் கணினி அறிவியல் பாடத்தை கொண்டுவருவது வரவேற்கத்தக்கது. எனினும் கணினி அறிவியல் பாடம் இன்றைய காலகட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
கணினி அறிவியல் பாடத்தை தனி பாடமாகவும் கட்டாயப் பாடமாகவும் ஒன்றாம் வகுப்பிலிருந்தே கொண்டு வர வேண்டும். 2011ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடம் சமச்சீர் கல்வியில் தனி பாடமாக கொண்டுவரப்பட்டது.
ஆனால் அந்த புத்தகம் இன்றளவும் மாணவர்களுக்கு பயன்படாத வண்ணம் உள்ளது . நமது சமச்சீர் கல்வியை பின்பற்றி கேரளா ,தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்கள் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்து கட்டாய தனி பாடமாக உள்ளது.
அரசுத் தேர்வுகளிலும் கணினி அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றால்தான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற முடியும். கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்து அதற்கான கணினி ஆசிரியர்களை நியமித்து உள்ளது. இதனால் வருடம் வருடம் மாணவர் சேர்க்கை அங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழக அரசிடம் பல ஆண்டுகள் கோரிக்கை வைத்து கணினி அறிவியல் பாடத்தை தற்போது ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தி இருக்கிறது அரசு.
அரசு திட்டம்: கணினி அறிவியல் பாடத்தை கற்றுத் தர கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள்.
ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு மறுத்து விட்டால் அரசுப் பள்ளிகளில் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு பாடம் பயிற்றுவிக்கப்படும். அதற்காக அவர்களுக்கு பிரத்யேக பயிற்சிகளும் வழங்கப்படும். அடுத்த கல்வியாண்டு முதல் இந்த திட்டத்தை அமல்படுத்த பரிசீலனை செய்துள்ளோம். இதன்மூலம் மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த முடியும் என்று அரசு கூறியுள்ளது.
கணினி ஆசிரியர்கள் கோரிக்கை: தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் போன்ற பாடங்களை கற்பிக்க தனித்தனியே அதற்கான துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளது போன்று. இதற்காக பல ஆண்டுகள் கணினி அறிவியலில் b.ed முடித்து விட்டு வேலையின்றி காத்திருக்கும் எங்களை பணியமர்த்த வேண்டும்.
கிட்டத்தட்ட 60 ஆயிரம் ஆசிரியர்கள் நாங்கள் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றோம் எங்களை அரசுப் பள்ளியில் நியமனம் செய்து கணினி அறிவியல் பாடத்தை திறன்பட மாணவர்களுக்கு கொண்டு சேர்த்திட வேண்டுகிறோம்.
அதுமட்டுமல்லாமல் கணினி அறிவியல் பாடம் நாளைய சமுதாய மாணவர்களுக்கு மிக மிக முக்கியம். மற்ற ஆசிரியர்கள் கொண்டு பயிற்சி அளிப்பதைவிட கணினி அறிவியலில் b.ed முடித்த ஆசிரியர்களை பணி அமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.