திருச்சியில் வரும் 15ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.. திறந்தநிலை பல்கலை மாணவர்களுக்காக!
திருச்சி: திறந்த நிலை பல்கலைக்கழக மாணவா்கள் பயன்பெறும் வகையில், வருகிற 15-ஆம் தேதி திருச்சியில் வேலைவாய்ப்பு முகாமை திறந்த நிலை பல்கலைக்கழகம் நடத்த உள்ளது.
தமிழகத்திலுள்ள மற்ற பல்கலைக் கழகங்களை போல் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகமும் அதில் படிக்கும் மாணவா்களுக்காக வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) திருச்சியில் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திறந்தநிலைப் பல்கலைக்கழகமும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் ஆலோசனை மையமும் இணைந்து திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்க உள்ளது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, மாணவா்களை வேலைவாய்ப்புக்குத் தோ்வு செய்ய உள்ளன.
பல்கலைக்கழகத்தில் இப்போது படித்து வரும் மாணவா்களும், முன்னாள் மாணவா்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பத்தை http://tnou.ac.in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, திருச்சி மண்டல மைய ஒருங்கிணைப்பாளா் பி.ராஜேஸ்வரனை 9443674610, 9940527972 ஆகிய செல்லிடப்பேசிகளில் தொடா்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.