மீண்டும் வேலைக்கு வாங்க.. ஆறுதல் அளிக்கும் நிறுவனங்கள்.. உயரும் வேலைவாய்ப்பு! நௌக்ரி.காம் குட்நியூஸ்
பெங்களூரு: கொரோனா துயரம் ஒரு பக்கம் என்றால் வேலை இல்லாதது இன்னொரு துயரம். இந்த துயரத்தை கடக்க மக்கள் வாழ்வாரத்தை உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இந்த சூலில் கடந்த மாதம் நாட்டில் மீண்டும் பல்வேறு வேலைகளுக்கு பணியமர்த்தல் நடவடிக்கைகள் 5% அதிகரித்துள்ளதாக பிரபல வேலைவாய்ப்பு தளமான நௌக்ரி.காம் கூறியுள்ளது,.
கொரோனாவால் உயிரை காப்பாற்ற போராடி வரும் மக்கள், மறுபுறம் வேலையை காப்பாற்றவும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா நாட்டையே பூட்டும் நிலைக்கு தள்ளியதால், முடங்கி போனது பல தொழில்கள் மட்டுமல்ல. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் தான்.
உயிர் வாழ மட்டுமே அரிசியும் பருப்பும் கிடைத்து வரும் நிலையில் அதை தாண்டி வேறு எதையும் எதிர்பார்க்காமல் வாழ பழக வேண்டிய நெருக்கடியை லாக்டவுன் ஏற்படுத்தி உள்ளது. பல லட்சம் பேர் வேலை இழந்துவிட்டார்கள். இந்நிலையில் லாக்டவுன் தளர்வுகள் காரணமாக மெல்ல மெல்ல மீண்டும் வேலை வாய்ப்புகள் நாட்டில் உயர்ந்து வருகிறது.
5 சதவீதம் அதிகம்
ஜூன் மாதம் பரவாயில்லை என்று சொன்னால் , ஜூலையில் இன்னும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறிவருகிறது. பல நிறுவனங்கள் வேலைக்கு ஆள்சேர்ப்பதற்கு தயராகி வருகின்றன. நௌக்ரி.காம் வெளியிட்ட கணக்கெடுப்பின் படி, முக்கியமான தொழில்களை மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம், நிறுவனங்கள் வேலைக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது கடந்த மாதம் அதிகமாகி உள்ளது.
கட்டுமானம் பொறியியல்
"ஜூலையை மற்ற மாதங்களுடன் ஒப்பிட்டால் ஓரளவு வேலைவாய்ப்பகள் மீண்டுவருவது தெரிகிறது. லாக்டவுன் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதால் வேலைக்கு ஆள் எடுப்பதில் சாதகமான அறிகுறிகளுடன் ஊடகம் / பொழுதுபோக்கு மற்றும் கட்டுமானம் / பொறியியல் போன்ற தொழில்கள் மீண்டும் முன்னேறுகின்றன " நௌக்ரி.காம் நிறவனத்தின் தலைமை வணிக அதிகாரி பவன் கோயல் தெரிவித்தார்.
மெட்ரோ நகரங்களில் சரிவு
எனினும் ஆண்டு தோறும் வேலை வாய்புகள் குறைந்து வரும் சூழலில், முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது ஜூலை மாதத்தில் 47% வீழ்ச்சி இருந்தது. வளர்ந்து வரும் நகரங்களிலும் மெட்ரோ நகரங்களில் வேலை வாய்ப்பு என்பது 50% க்கும் கீழாக குறைந்துள்ளது.
மும்பை வேலை வாய்ப்பு
பெருநகரங்களில் கொரோனா ஆக்டிவ் கேஸ்களின் தீவிரம் மற்றும் ஒரு சில இடங்களில் இடைவிடாமல் போடப்படும் ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக பணியமர்த்தல் நடவடிக்கைகள் குறைந்துள்ளது. பெருநகரங்களில் பணியமர்த்தல் செயல்பாடு தேசிய சராசரியை விட (-50% vs -47%) குறைந்துள்ளது,. மெட்ரோ நகரங்களான சென்னை (-55%), மும்பை (-54%) மற்றும் பெங்களூர் (-54%) ஆகியவை பணியமர்த்தல் கடும் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.
குறைந்தது வாய்ப்பு
சிறிய நகரங்களான சண்டிகர் (-28%), ஜெய்ப்பூர் (-25%) மற்றும் கொச்சி (-33%) ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன. பல துறைகளில் அனுபம் வாய்ந்தவர்களுக்கும் வேலை கிடைக்கவில்லை என்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது . இதேபோல் அனுபவம் அற்ற அறிமுக நிலையில் உள்ளவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் 51%க்கு கீழ் சரிந்துள்ளது.