அதிரடி திருப்பம்.. மத்திய அரசு உயர் பதவிகளுக்கு தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அழைப்பு
டெல்லி: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் இயக்குனர் மற்றும் இணைசெயலர்கள் பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேவை என்ற அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. இதனை மேற்கோள் காட்டி ஆர்வமுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட் செய்துள்ளார்.
மத்திய அரசு தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள 13 அமைச்சகங்களில் 3 இணை செயலாளர் மற்றும் 27 இயக்குனர் பதவிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூட்டுச் செயலாளர் மற்றும் இயக்குநர் மட்டத்தில் அதிகாரிகளைச் சேர்ப்பதற்கான கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது. அதன்படி, "தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்கத் தயாராக இருக்கும் திறமையான மற்றும் ஊக்கமுள்ள இந்திய நாட்டினரிடமிருந்து" விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன.
15 வருடம் அனுபவம்
தேவையான அனுபவம் (இணை செயலாளருக்கு 15 ஆண்டுகள் மற்றும் இயக்குநருக்கு 10 ஆண்டுகள்), கொண்ட கார்ப்பரேட் துறையிலிருந்து மாநில அரசு அதிகாரிகள் மற்றும் சமமான பதவியில் உள்ள பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் மட்டுமே இந்த பதவிகளுக்கு தகுதியுடையவர்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
கூட்டுச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 45 மற்றும் இயக்குநர் நிலை பதவிகளுக்கு, 35 வயது வரையிலான நபர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.
வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம், வருவாய் துறை, நிதி அமைச்சகம் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் ஆகியவற்றில் கூட்டுச் செயலாளருக்கான பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன;
பணிகள் என்னென்ன
இயக்குநர் நிலை பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வர்த்தக மற்றும் தொழில்துறை, நிதி சேவைகள் துறை, நிதி துறை, பொருளாதார விவகாரங்கள் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை, பள்ளி கல்வி மற்றும் கல்வியறிவு துறை, கல்வி அமைச்சகம், உயர்கல்வித் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, சாலை மற்றும் நெடுஞ்சாலைகள் போக்குவரத்துத்துறை ஜல் சக்தி, சிவில் விமான போக்குவரத்துத்துறை மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை ஆகிய அமைச்சகங்களில் இருந்து.அழைக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி 22ம் தேதி
யுபிஎஸ்சி அறிவிப்பில் வேட்பாளர்களுக்கான விரிவான விளம்பரம் மற்றும் அறிவுறுத்தல்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என்றும் ஆர்வமுள்ளவர்கள் 2021, மார்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் அளித்த தகவல்கள் சரியானவை என்பதை அவர்கள் தான் உறுதிப்படுத்த வேண்டும் .
2018ல் தொடங்கியது
2019 ஆம் ஆண்டில், தனியார் துறையை மற்றும் பி.எம்.ஜி, என்.எச்.பி.சி போன்ற பொதுத்துறை நிறுவனங்களையும் சேர்ந்த 10 கூட்டுச் செயலாளர்களை, அரசு நியமித்தது. 2018 இல் தொடங்கிய தேர்வு செயல்முறை மூலம் 6,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன்படி நிதித்துறை உள்ளிட்ட 13 துறைகளில் இணை செயலாளர் மற்றும் இயக்குனர் பதவிகளுக்கு ம் மார்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த பதவிகளுக்கு பொதுவாக ஐஏஎஸ், ஐபிஎஸ்அதிகாரிகள் நியமிக்கப்பட்ட நிலையில் தனியாரை அனுமதிப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன.
யுபிஎஸ்சி தவறிவிட்டதா
பீகார் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், ராஷ்டிர ஜனதா தளம் கட்சியைச் சேருவருமான தேஜஸ்வி யாதவ், திறமையான நபர்களை பணியில் அமர்த்த அரசு தவறிவிட்டதா என்பதை விளக்க வேண்டும் என நிர்மலா சீதாராமனின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து விமர்சனம் செய்துள்ளார்.
விருப்பம் உள்ளவர்கள் நியமனம்
அவர் தனது ட்வீட் பதிவில். "நீங்கள் இதற்கு விளக்கம் கொடுத்தாக வேண்டும். தேசத்தை கட்டமைப்பதற்கான தகுதியும், திறனும், ஆர்வமும் கொண்ட நபர்களை பணியில் அமர்த்த யுபிஎஸ்சி தவறி விட்டதா? உங்கள் விருப்பத்திற்கு உகந்தபடி நபர்களை பணியமர்த்த உள்ளீர்களா. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைக் குறைக்கும் வகையிலான சூழ்ச்சி அல்லவா இது" என ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் தேஜஸ்வி.