10, 12-ம் வகுப்புகளை தமிழ் வழியில் படித்தால் அரசு பணியில் முன்னுரிமை.. சூப்பர் மசோதா தாக்கல்
சென்னை: தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை பெறுவதற்கு பட்டப்படிப்பு மட்டுமல்லாமல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளையும் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நாள் விடுமுறைக்கு பின் இன்று சடடசபை கூடியது. இன்று முக்கிய மசோதாவாக தமிழில் கல்வி கற்பவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்கும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மீன்வளம் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டமுன்வடிவு மற்றும் தமிழ்நாடு தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் தொடர்பான சட்டமுன் வடிவை அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாவின் அரசுப் பணியிடங்களில் தமிழ்வழிக்கல்வியில் படித்தவர்களுக்கு 20% வரை முன்னுரிமை அளிக்க மசோதா வழிவகை செய்யும். ஆனால் பட்டப்படிப்பு மட்டுமல்லாமல் 10 மற்றும் 12-ம் வகுப்பிலும் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும், அவர்களுக்குத்தான் 20 சதவீத முன்னரிமை அளிக்கப்படும்.
முன்னதாக இளங்கலை அல்லது முதுகலை பட்டத்தை மட்டும் தமிழில் படித்துவிட்டு அரசு வேலையில் முன்னுரிமை கேட்பது அதிகரித்து இருந்தது. இதேபோல் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் (தாய்மொழியில்) படித்து முடிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அரசு விரும்பியது. இதையடுத்தே தமிழ் வழியில் 10ம் வகுப்பு , 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு வரை அனைத்தையும் தமிழ் வழியில் படித்தால் தான் இனி அரசு வேலையில் 20 சதவீத முன்னுரிமை பெற முடியும்.
இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்ட போதிலும், இன்றே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வாய்ப்பு இல்லை என்கிறார்கள். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவின் அம்சங்கள் குறித்து விவாதித்த பிறகு வேறு ஒரு நாளில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்படும். வரும் ஆண்டிலேயே அரசு வேலை வாய்ப்பில் இந்த மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் இனி தமிழ் வழியில் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.