தமிழக வேலை தமிழருக்கே முழக்கத்தை வலிந்து திணிக்கும் என்.எல்.சி.யின் பிறமாநிலத்தவர் ஆதிக்கம்
சென்னை: தமிழக வேலை தமிழருக்கே என்கிற முழக்கத்தை தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் வலிந்து திணிக்கும் வேலையை கனகச்சிதமாகவே செய்து கொண்டிருக்கிறது நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் என்பது மிகையல்ல. ஏனெனில் தமிழ்நாட்டில் தமிழர் நிலத்தில் உருவாக்கப்பட்ட இந்த என்.எல்.சி. நிறுவனத்தில் இப்போது தமிழருக்கு வேலை கிடைக்காது என்கிற நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டதால்தான் தமிழக வேலை தமிழருக்கே என்கிற முழக்கம் வலிமையடைந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 1 கோடியை எட்டும் நிலை உள்ளது. இந்த சூழலில் நியாயப்படி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகளை பறித்து பிற மாநிலத்தவருக்கு கொடுத்தால் கொந்தளிப்பு வரத்தான் செய்யும்.
இதற்கு நல்ல உதாரணமாக இருக்கிறது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்.எல்.சி. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் மின்தேவைக்காக காமராசர் காலத்தில் உருவாக்கப்பட்டது என்.எல்.சி. நிறுவனம். இந்த நிறுவனம் உருவாக்குவதற்கு 30 தமிழர் கிராம மக்கள் தங்களது நிலங்களை அரசுக்கு தாரை வார்த்து கொடுத்தனர்.
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள்
அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி, என்.எல்.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதுதான். அப்படியான உறுதிமொழியில் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் உள்ளூர் மக்கள் அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்களாகவே வாழ்ந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இப்போது சுமார் 13,000 தமிழர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக தங்களை நிரந்தரமாக்க கோரி தொடர் போராட்டங்களை இடைவிடாமல் நடத்துகின்றனர்.
தொழிற்பழகுநர் பயிற்சி
அடுத்ததாக தமிழகத்தைச் சேர்ந்த தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த இளைஞர்கள் இங்கே பயிற்சி பெற்றுவிட்டு வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்துகிடக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு பணி இன்னமும் வழங்கப்படாமல் இருக்கிறது. அவர்கள் நிராதரவாக விடப்பட்ட நிலையில் போராடி வருகின்றனர்.
வெளிமாநில அதிகாரிகள்
அதேநேரத்தில் என்.எல்.சி. தொடர்பான இன்னொரு புள்ளி விவரத்தை பாருங்கள். இந்த நிறுவனத்தில் 5,000க்கும் அதிகமான அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இவர்கள் அத்தனை பேரும் பிற மாநிலத்தவர் என்கிற கொடுமையை எங்கே போய் சொல்வது? இதன் உச்சகட்டம்தான் அண்மையில் நடந்தது. அதாவது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 259 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு 3 நாட்கள் தேர்வு நடத்தப்பட்டது.
பணி இடங்கள்
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் (EEE), எலக்ட்ரிக்கல்(ECE), சிவில், மனித வளம் என பல்வேறு துறைகளில் இருந்த காலிப் பணி இடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில் இப்படி பதிவு செய்திருக்கிறார். அதாவது, மெக்கானிக்கல் பிரிவுக்கு 761 பேரும், எலக்ட்ரிக்கல்(EEE) பிரிவுக்கு,404 பேரும், எலக்ட்ரிக்கல் (ECE) பிரிவுக்கு 63 பேரும், சிவில் பிரிவுக்கு, 30 பேரும், கட்டுப்பாடு மற்றும் கருவி மயமாக்கல் ( CONTROL & INSTRUMANTATION) பிரிவுக்கு, 91 பேரும், கணினி பிரிவுக்கு,32 பேரும், சுரங்கப் பிரிவுக்கு (MINING) 30 பேரும், புவியியல் பிரிவுக்கு (GEOLOGY) 30 பேரும், நிதி பிரிவுக்கு (FINANCE) 80 பேரும், மனித வளப்பிரிவுக்கு 61 பேர் என் 1,582 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
1 விழுக்காடு கூட இல்லையே
அழைக்கப்பட்ட பட்டியலில், அபேய் குமார் சிங், அபேய் திவாரி, அபிஷேக் சுக்லா, பரத் பால், கௌரவ் தேஸ்வால் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பெயர்கள் அதிகளவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழக இளைஞர்கள் 2 பேர் பெயர்கள் மட்டுமே அப்பட்டியிலில் உள்ளது. அதாவது, மண்ணின் மக்கள் 1 விழுக்காடு கூட இல்லை என்பது அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது என கொந்தளித்த கையோடு நேரில் சென்று என்.எல்.சி. அதிகாரிகளையும் சந்தித்து விளக்கம் கேட்டார் வேல்முருகன். இதேபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணி தலைவர் ராஜ்யசபா எம்.பி. அன்புமணி, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் என்.எல்.சியின் மாற்றாந்தாய் போக்குக்கு கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்திருந்தனர்.
தமிழக வேலை தமிழருக்கே மாநாடு
இதனையடுத்தே தமிழக வேலை தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை சேலத்தில் பிப்ரவரி 28-ந் தேதி நடத்துகிறது தமிழக வாழ்வுரிமை கட்சி. என்.எல்.சி. நிர்வாகத்தில் பிற மாநிலத்தவர் அதிகாரிகளாக இருப்பதாலேயே பிற மாநில இளைஞர்கள் திட்டமிட்டு வலிந்து என்.எல்.சி.யில் சேர்க்கப்படுகின்றனர்; தமிழ்நாட்டு இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டு காலந்தோறும் இருந்து வருகிறது. ஆகையால்தான் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் அந்தந்த மாநில மக்களுக்கு வேலைவாய்ப்புக்கு இத்தனை விழுக்காடு ஒதுக்க வேண்டும் என்கிற சட்டத்தையே பல மாநிலங்கள் கொண்டுவந்து செயல்படுத்துகின்றன.
சட்டம் தேவை
இந்த முன்னோடியான சட்டத்தை ஆந்திரா, கர்நாடகா, கோவா, குஜராத் அரசுகள் செயல்படுத்துகின்றன. ஆகையால் சமூக நீதியின் பிறப்பிடமாக கொண்டாடப்படுகிற தமிழ்நாட்டிலும் இதேபோல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற சட்டத்தை தாமதமின்றி அரசு நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் வேலைவாய்ப்புக்குக் காத்திருக்கும் 1 கோடி இளைஞர்களின் எதிர்காலமும் அவர்களை நம்பிய குடும்பங்களும் ஆகக்குறைந்த வாழ்வாதாரத்தை பெற முடியும். எத்தனையோ அறிவிப்புகளை வெளியிட்டு நடைமுறைப்படுத்துகிற தமிழ்நாடு அரசு இதனையும் செய்துவிட்டால் போதும் என்பதுதான் அந்த 1 கோடி இளைஞர்களின் எதிர்பார்ப்பு.