நேர் வழி காத்திருக்க.. குறுக்கு வழி எதுக்கு.. ஜம்முன்னு செயல்படலாமே குட்டீஸ்!
சென்னை: சாதாரணமாக செய்யக் கூடிய காரியத்தைக் கூட குறுக்கு வழியில் போய்செய்ய சிலர் நினைப்பார்கள். அது பெரிய தவறு. முடிந்தவரை நேர் வழியிலேயே போகலாமே.. அதில் என்ன தவறு இருக்கிறது.
சாதாரண விஷயத்துக்குக் கூட குறுக்கு வழியை கடைப்பிடிக்க ஆரம்பித்தால் நாளை எதையுமே நேர் வழியில் செய்ய மனசு வராது. அது கடைசியில் நமக்கு கெட்டப் பெயரையும், அவப் பெயரையும்தானே தேடித் தரும்.
எப்போதும் நேர் வழியில் செல்லுங்கள்.. அது உங்களது கெளரவத்தை உயர்த்தும்,மனசுக்கு நிம்மதி தரும். பெருமையுடன் நடக்க சக்தி தரும்.
ஆசையில் தவறில்லை
நான் அம்பானி போல் பணக்காரனாக வேண்டும் என்று நாம் ஆசைப்படுவதில் தவறில்லை ஆனால் அதற்கான செல்வத்தை நேர்வழியில் ஈட்ட முயல வேண்டும்.ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஏதேனும் ஓர் லட்சியம் இருக்கும். அந்த லட்சியத்தை அடைய குறுக்கு வழியில் யோசிக்காமல் நியாயமாக நேர்வழியில் முயற்சி செய்தால் காலத்திற்கும் மகிழ்ச்சியாக வாழலாம்.
பிட் அடிப்பது தவறு
பள்ளியில் தேர்வு நடத்தினால் சில மாணவர்கள் பாஸ் ஆகுவதற்கு எப்படி காப்பியடிப்பது பிட் அடிப்பது என்று யோசிக்கிறார்களே தவிர படித்துத் தேர்ச்சிப் பெறலாமே என்று நினைப்பதில்லை. அவ்வாறு குறுக்கு வழியில் தேர்ச்சிப் பெற முயலும் போது மாட்டிக் கொண்டால் நமக்கு ஏற்படும் அவப்பெயரை ஒரு நாளும் தடுக்க இயலாது.
குறுக்கு வழி வெற்றி கானல் நீர்
குறுக்கு வழியில் கிடைக்கும் வெற்றி கானல் நீர் போன்றது. ஆனால் நேர்வழியால் கிடைக்கும் வெற்றி என்றுமே நிரந்தரமானது. சில குழப்தைகள் தன் பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற குறுக்கு வழியில் முயற்சி செய்கிறது. எனவே பெற்றோர்களே நீங்கள் உங்கள் பிள்ளைகள் குறுக்கு வழியில் செல்கிறனரா எனக் கவனியுங்கள். அப்படியிருந்தால் அவர்களை நேர்வழியில் செல்ல வழிகாட்டுங்கள்.
அவ்வப்போது தட்டி விட வேண்டும்
சிறு வயதிலேயே சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடும் பிள்ளைகளை அப்போதே கண்டிக்க வேண்டும். தினேஷ் அரசாங்கத்தில் வருவாய்த்துறையில் அதிகாரியாகப் பணிபுரிகிறான். அதே துறையின் மேலதிகாரியாக தினேஷின் நண்பன் சுந்தர் பணிபுரிகிறான். தினேஷ் மிகவும் நேர்மையானவன். ஆனால் சுந்தரோ லஞ்சம் வாங்குவான். அதனால் வெகுவிரைவிலேயே பணக்காரன் ஆனான்.
ஒரு குட்டிக் கதை
கார் பங்களா என்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்தான். தினேஷின் மனைவி சுமதி பலமுறை இவனை லஞ்சம் வாங்கக் கட்டாயப்படுத்தினாள். ஆனால் அவனோ நேர்வழியிலேயே வாழ ஆசைப்பட்டான். ஒரு நாள் சுந்தரின் வீட்டில் ஐ.டி.ரெய்டு நடந்தது. அதில் பல லட்சரூபாய் சிக்கின. அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினான். பின் அவன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வீதியில் அழைத்துச் செல்லப்பட்டான்.
எப்பவுமே நேர் வழிதான்
குறுக்கு வழியில் பணம் சம்பாதித்த காரணத்தினால் முதலில் சொகுசாக வாழ்ந்தாலும் இறுதியில் அவமானம் தான் சுந்தருக்கு மிஞ்சியது. ஆனால் தினேஷிற்கு அவன் நேர்மையைப் பாராட்டி அரசாங்கம் அவனுக்குப் பதவி உயர்வு அளித்தது. எனவே குழந்தைகளே எப்போதும் உங்கள் இலக்கை அடைய நேர்வழியில் செல்லுங்க. குறுக்கு வழியில் இலக்கை அடைய நினைத்தால் பிறகு சுந்தரின் நிலைமை தான் உங்களுக்கும் பட்டூஸ். அதனால் நேர்வழியில் முயற்சி செய்து உங்கள் இலக்குகளை அடைந்து வாழ்வில் மகிழ்ச்சியோடு இருங்க.